Thursday, January 20, 2011

ஒயிலாட்டம் மயிலாட்டம்

பழம்வேண்டி புவிசுற்றி
பழம்நீயாய் ஆனவனே
வேழமுகன் தம்பிஉந்தன்-----ஒயிலாட்டம்
ஞாலமெல்லாம் ஆடிவரும்--மயிலாட்டம்

கற்பனையில் பாருங்களே
கண்டுமனம் மகிழுங்களே
வேல்போட்டு ஆடுகிறான்-----ஒயிலாட்டம்
பால்வடியும் பூமுகத்தான்-----மயிலாட்டம்

வேலுக்கொரு வேகமுண்டு
வேதனைகள் தீர்த்துவைக்கும்
வித்தகனாம் முருகனுக்கு------ஒயிலாட்டம்
பித்தந்தனைத் தீர்த்துவைக்கும்--மயிலாட்டம்

நாவல்பழம் தனைக்கொடுத்து
நாவன்மை சோதித்த
சேவற்கொடி அழகனுக்கு------ஒயிலாட்டம்
சேர்ந்துபாடி ஆடுங்களே ------மயிலாட்டம்

காவடிக்குத் துணைவருவான்
பூவடிகள் போற்றிநிதம்
பாவடிகள் புனைந்து ஆடும் ---ஒயிலாட்டம்
சேவடிகள் ஆடிவரும் --------- மயிலாட்டம்

உயிரெல்லாம் அவனாக
உள்ளமெல்லாம் தேனாக
மயிலோடு ஆடிவரும் ------- ஒயிலாட்டம்
ஒயிலாக ஆடிவரும் --------- மயிலாட்டம்

பாசமுடன் தேடிவந்தால்
நேசமுடன் வாழவைக்கும்
ராசஅலங் காரனுக்கு --------ஒயிலாட்டம்
தேசமல்லாம் ஆடிவரும்---மயிலாட்டம்

சங்கம் முழங்குதம்மா
அங்கம் சிலிர்க்குதம்மா
தங்கரத முருகனுக்கு ---- --- ஒயிலாட்டம்
தரணியெங்கும் ஆடிவரும்--மயிலாட்டம்

முத்தமிழின் சொல்லெடுத்து
முருகனவன் பேரிசைத்து
பக்தரெல்லாம் ஆடுகிறார் ------ ஒயிலாட்டம்
சித்தரையும் மயங்கவைக்கும்--மயிலாட்டம்

வள்ளிமயில் தேவயானை
உள்ளமகிழ் மன்னவனாம்
செல்வமுத்துக் குமரனுக்கு------ஒயிலாட்டம்
செல்வங்களை அள்ளித்தரும்---மயிலாட்டம்

அப்பனுக்குப் பாடஞ்சொன்ன
ஒப்பில்லாப் பிள்ளையவன்
சுப்ரமணியக் கடவுளுக்கு ------ ஒயிலாட்டம்
சுவாமிமலை சண்முகனின்-----மயிலாட்டம்

செட்டிமக்கள் சேர்ந்துஒன்றாய்
சித்திரையின் பௌர்ணமியில்
எட்டுக்குடி ஆடிவரும் --------- ஒயிலாட்டம்
கட்டழகுக் குமரனுக்கு---------மயிலாட்ட்ம்

பக்தியெல்லாம் மிகுந்துவரப்
பெற்றுவரும் நன்மையினால்
பாடிப்பாடி ஆடுகிறார் --------- ஒயிலாட்டம்
பார்க்கப் பார்க்கப் பரவசமாம்-மயிலாட்டம்





2 comments:

Chitra said...

அம்மா.... நல்லா தாளத்தோட பாடுற மாதிரி, சூப்பரா எழுதி இருக்கீங்க... அருமை.

Sivakumar said...

>>> கண்கண்ட தெய்வம் முருகன் புகழ் பாடுவோம்!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...