Sunday, February 20, 2011

சொல்லு மயிலே சொல்லு!

வெற்றிவடி வேலனிடம்சொல்லுமயிலே--நாங்க
வேகமாக நடந்துவாரோம் சொல்லுமயிலே
சக்திஉமை பாலனிடம் சொல்லுமயிலே---நாங்க
சந்தோஷமா வாரோமின்னு சொல்லுமயிலே
வேழமுகன் தம்பியிடம் சொல்லுமயிலே--எங்க
வேகநடை வெற்றிநடை சொல்லுமயிலே
வாழவைக்கும் தெய்வத்திடம் சொல்லுமயிலே-நாங்க
வழிவழியாய் வந்தகதை சொல்லுமயிலே
ஆறுமுக சாமியிடம் சொல்லுமயிலே-------நாங்க
அன்புகொண்டு வாரோமின்னு சொல்லுமயிலே
சீரும்சிறப்பும் காணவேண்டிச் சொல்லுமயிலே---நாங்க
செட்டிமக்கள் வாரோமின்னு சொல்லுமயிலே
ஊரும்வீடும் காவடிப்பூசை சொல்லுமயிலே----உந்தன்
சேவடியில் சேக்கவாரோம் சொல்லுமயிலே
பேரும்புகழும் பெறவேண்டி சொல்லுமயிலே---எங்க
பிள்ளையெல்லாம் அழைத்துவாரோம் சொல்லுமயிலே
குமரப்பையா கோவில்வீட்டில் திருநீறுபூசி-----நாங்க
கூடிஒன்றாய் நடைதொடர்ந்தோம் சொல்லுமயிலே
கொப்பாத்தா சன்னதியில தேங்காஒடைச்சு---எங்க
தப்புத்தவற சிதரடிச்சோம் சொல்லுமயிலே
கோவிலூரு சாலையில கோலமயிலே------நாங்க
குமரன்கவசம் பாடிவாரோம் சொல்லுமயிலே
குன்னக்குடி தங்கிவாரோம் சொல்லுமயிலே---எங்க
குலம்தழைக்க வேண்டிவந்தோம் சொல்லுமயிலே
பிள்ளையார்பட்டி வணங்கிவந்தோம் சொல்லுமயிலே-எங்கள்
பிஞ்சுமனம் தஞ்சமென்று சொல்லுமயிலே
கண்டவராயன் பட்டிவந்தோம் சொல்லுமயிலே------நாங்க
கடினபாதை வென்றுவந்தோம் சொல்லுமயிலே
மருதுபட்டித் தோப்புவந்தோம் சொல்லுமயிலே----அங்கு
மயில்அழகன் பூஜைகண்டோம் சொல்லுமயிலே
சிங்கம்புணரி ஊருவந்தோம் சொல்லுமயிலே ---மாலன்
சேவுகனை வணங்கிவந்தோம் சொல்லுமயிலே
சமுத்திரா பட்டிவந்தோம் சொல்லுமயிலே-----மக்க
சமுத்திரம்போல் வாரகாட்சி சொல்லுமயிலே
நத்தம்நோக்கி வந்துவிட்டோம் சொல்லுமயிலே--அரஹர
சத்தம்விண்ணைப் பிளப்பதையும் சொல்லுமயிலே
உப்பாறு பாலம்வந்தோம் சொல்லுமயிலே-----எங்கும்
ஓம்முருகா ஒலியைக்கேட்டோம் சொல்லுமயிலே
இடைச்சிமடம் வந்துவிட்டோம் சொல்லுமயிலே----எங்க
இன்னலெல்லாம் மறைஞ்சுபோச்சு சொல்லுமயிலே
திண்டுக்கல்லு வந்துவிட்டோம் சொல்லுமயிலே---இடையில்
குண்டுக்கல்லும் மறைஞ்சுபோச்சு சொல்லுமயிலே
செம்மடைப்பட்டி வந்துவிட்டோம்சொல்லுமயிலே---தெய்வம்
செந்தில்வேலன் ஊஞ்சல்கண்டோம் சொல்லுமயிலே
வெள்ளிஊஞ்சல் ஆட்டம்கண்டோம் சொல்லுமயிலே--எங்க
வெம்மையெல்லாம் மறைஞ்சுபோச்சு சொல்லுமயிலே
குழந்தைவேலன் சன்னதிவந்தோம் சொல்லுமயிலே---எங்க
குறைகளெல்லாம் நீங்கவேணுஞ் சொல்லுமயிலே
விருப்பாச்சி மேடுபள்ளம் சொல்லுமயிலே------முருகன்
விளக்கஞ்சொன்ன வாழ்க்கைவழி சொல்லுமயிலே
அடையாளவேல் வந்துவிட்டோம் சொல்லுமயிலே-----நாங்க
அளவுகடந்த மகிழ்ச்சி கொண்டோம் சொல்லுமயிலே
தடைகள்யாவும் நீங்கிவந்தோம் சொல்லுமயிலே------அந்த
தண்டபாணி காணவந்தோம் சொல்லுமயிலே
கலிங்கப்பையா ஊருணிகண்டோம் சொல்லுமயிலே----அங்கே
கருணையுள்ளம் பெருக்கக்கண்டோம் சொல்லுமயிலே
இடும்பன்குளம் வந்தடைந்தோம் சொல்லுமயிலே---பழனி
இறவன்மலை வந்தடைந்தோம் சொல்லுமயிலே
வலம்வந்தோம் வலம்வந்தோம் சொல்லுமயிலே----எமக்கு
நலம்தந்து வரம்தரணும் சொல்லுமயிலே
தங்கரதம் காணவேண்டும் சொல்லுமயிலே-----மகிழ்ச்சி
பொங்கவேணும் வாழ்க்கையிலே சொல்லுமயிலே!



Tuesday, February 8, 2011

கொப்புடையம்மன் நூற்றிஎட்டுப் போற்றி.

கொப்பை உடைய அம்மையே -              போற்றி
ஒப்பில் லாத உயர்வே-                               போற்றி
செப்பரிய அழகு உருவே -                          போற்றி
தப்பில்லா வாழ்வு தருவாய்-                    போற்றி
அப்பழுக் கில்லா அருளே -                        போற்றி
எப்பொழுதும் என்னகம் உறைவாய் -   போற்றி
வெப்பொழி வேத வல்லியே -                  போற்றி
அப்பனும் அம்மையும் ஆனாய் -             போற்றி
நகரின் நடுநிலை நாயகி -                          போற்றி
நிகரில் லாதவள் நீயே -                              போற்றி
நிகழும் நல்லதில் நிற்பாய் -                     போற்றி
நெகிழும் உள்ளம் நிறைப்பாய் -              போற்றி
வளரும் பயிரின் வளனே -                        போற்றி
உலவும் காற்றின் உயிரே -                        போற்றி
உயிரே உயிரின் உணர்வே -                     போற்றி
உயரிய சிந்தனை உவப்பாய் -                  போற்றி
வயிரம் இழைத்த வடிவே -                       போற்றி
பயிர்கள் காக்கும் பகவதி -                        போற்றி
கண்ணில் மின்னும் கனிவே -                 போற்றி
பெண்ணில் நல்ல பெருந்தகை -            போற்றி
எண்குணன் துணைவி எந்தாய் -            போற்றி
திண்ணம் தருவாய் திரிபுரை -               போற்றி -----[வலிமை]
எண்ணம் நல்லன ஏற்பாய் -                     போற்றி
தன்னம் பிக்கை தருவாய் -                       போற்றி
பொன்னே மணியே புகழே -                     போற்றி
என்னை இயக்கும் எழிலே -                      போற்றி
அன்னை என்பார்[க்கு] அன்ன -               போற்றி------[அவ்வண்ணமே]
முன்னைத் தவத்தின் முகிழ்வே -          போற்றி
தன்னை உணர்த்தும் தண்ணருள் -        போற்றி
உன்னை அறிய உவந்தாய் -                      போற்றி
புன்னகை மலர்ந்த புவனி -                        போற்றி
பொன்நகை புனைந்த பூரணி -                  போற்றி
தன்னே ரில்லாத் தமிழே -                          போற்றி
தென்னா டுடைய சிவனதுணை -           போற்றி
நிலையாம் நட்பைத் தருவாய் -              போற்றி
கலைகள் அருளும் கலைமகள் -            போற்றி
வைகறை அழகே வாக்கியை -              போற்றி.-             [பார்வதி]
பொய்கை நிறைந்த பூவே -                        போற்றி
முந்தை வினைகள் முடிப்பாய் -             போற்றி
சிந்தை மகிழும் சீதம் -                                 போற்றி -             [குளிர்ச்சி]
செந்தா மரையின் செல்வி -                       போற்றி
நந்தா விளக்கே நாரணி -                            போற்றி
சொந்தம் பெருக்கும்சுரபி -                         போற்றி
பந்தம் அகற்றும் பாரதி -                             போற்றி
சங்கம் முழங்கவரும் சங்கரி -                போற்றி
செங்கை நிறைந்த செறுவே -                  போற்றி -                [வயல்]
சங்கத் தமிழே சரஸ்வதி -                          போற்றி
சிங்கத் தமர்ந்த சிகரம் -                               போற்றி
காரை நகரின் கண்ணே -                            போற்றி
பேரருள் பிறங்கும் பிராட்டி -                    போற்றி
ஊரின் நலமே உயர்வே -                           போற்றி
வாரி வழங்கும் வைஷ்ணவி -                போற்றி
தேரில் அமர்ந்த திருவே -                          போற்றி
பாரில் உயர்ந்த பண்பே -                            போற்றி
போர்க்குணம் ஒழிக்கும் பொன்னே -   போற்றி
பேர்க்கும் அன்பில் பிணைந்தாய் -        போற்றி
ஆர்க்கும் மனதை அடக்குவாய் -           போற்றி
சேர்க்கும் இடத்தில் சேர்ப்பாய் -            போற்றி
பூக்கும் புதினத் தமிழே -                            போற்றி
வாக்கில் வண்மை தருவாய் -                போற்றி
வைகசி விழாவின் வராகி -                     போற்றி
கைராசி அருளும் கற்பகம் -                    போற்றி
அம்பாரி அமர்ந்த அகிலம் -                      போற்றி
மும்மாரி பொழியும் முகிலே -               போற்றி
கற்பூர வல்லி கல்யாணி -                        போற்றி
சிற்பர மான ஸ்ரீதேவி -                                போற்றி
நற்பதம் அருள்வாய் நந்தினி -                போற்றி
சொற்பதங் கடந்தசொரூபி -                    போற்றி
பொற்றா மரையின் புலனே -                  போற்றி -             [காட்சி]
கற்றார் காமுறும் கழலே -                       போற்றி
துணிவே துணிவின் துணையே -          போற்றி
பிணிகள் அகற்றும் பிங்கலை -             போற்றி -             [பார்வதி]
அணியே அணியின் அழகே -                  போற்றி
மணியே மணியின் ஒலியே -                 போற்றி
வணிகர் போற்றும் வரவே -                    போற்றி
பணிகள் சிறக்கப் பரவுவாய் -                 போற்றி
பிறைசூ டியவன் பெருந்துணை -          போற்றி
நரைதிரை காணா நல்லறம் -                 போற்றி
கொட்டிக் கொடுக்கும் கோமதி -            போற்றி
கட்டும் அன்பில் கனிவாய் -                    போற்றி
சுட்டியில் ஒளிரும்சுந்தரி -                      போற்றி
மெட்டி ஒலியில் மிளிர்வாய் -                போற்றி
முத்தமிழ்ச் சுடரே முழுமதி -                  போற்றி
சக்தி உபாசகர் சரணே -                             போற்றி
கானக் குயிலின் கவியே -                        போற்றி
ஞானக் குழலின் நாதம் -                           போற்றி
நெஞ்சம் நிறைந்த நீயம் -                        போற்றி-------[ஒளி]
அஞ்செழுத் தமர்ந்த அஞ்சுகம் -             போற்றி
விஞ்சும் புகழின் விளக்கம் -                   போற்றி
கொஞ்சும் தமிழில் குழைவாய் -           போற்றி
சிலம்பணி பாதம் சீந்தினம் -                  போற்றி--------[ஏந்தினோம்]
நலம்பல நல்கும் நாமகள் -                      போற்றி
வெள்ளி முளைத்த விடியல் -                 போற்றி
அள்ளிக் குவிக்கும் அடிசில் -                  போற்றி
விளையும் பயிரின் வித்தே -                   போற்றி
வளைக்கரம் வாழ்த்த வருவாய் -         போற்றி
ஆதி மூலன் அன்னை -                              போற்றி
சோதி நிறைந்த சுடரே -                             போற்றி
தேசம் போற்றும் தென்றல் -                   போற்றி
பாசுரம் பாடப் பணித்தாய் -                      போற்றி
வாசித் தவர்க்கு வரமே -                           போற்றி
பூசித் தவர்க்குப் பூணே -                            போற்றி
இல்லை யென்னா இயற்கை -               போற்றி
கல்லும் கனியும் கருணை -                   போற்றி
துதிப்போர்க் கருளும் துணையே -      போற்றி
கதிநலம் காட்டுவாய் போற்றி -           போற்றி
வாழும் வாழ்வின் வளனே -                  போற்றி
நாளும் காப்பாய் போற்றி -                     போற்றி




















Sunday, February 6, 2011

காரைக்குடி நகரச்சிவன்கோவில் மீனாட்சி அம்மன்.

           ஒம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்
           ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்

தேனாட்சி செய்கின்ற தென்தமிழ்ப் பாட்டினால்
                   தேவியுனைப் பாடிவரவே
மானாட்சி செய்கின்ற மைவிழிக் கருணையே
                 மகிழ்வோடு வரம்தருவாய்!
மீனட்சி உன்முகம் மின்னுகிற அழகிலே
               மெய்மறந்து உருகிநின்றோம்!
தேனோடு பாலுமே தினம்சிவனுக்[கு] அபிஷேகம்
                தித்திக்கும் காட்சியம்மா!
மீனாட்சி மீனாட்சி மீனாட்சி என்றுன்னை
              மிகவேண்டி வந்துநின்றால்
நானாச்சு என்றுநீ நன்மைகள் செய்கிறாய்
             நற்பேறு பெறுகிறோமே!
ஆனைமுகன் உன்மகன் அழகான முகம்பார்த்து
             அமைதியே வடிவாகினாய்!
தேனான திருப்புகழ்த் திருமுருகன் தனைக்கண்டு
              அன்பிலே மகிழ்வாகினாய்!
வானோங்கு புகழ்மிக்க வளர்காரை நகரத்தார்
            வடித்திட்ட கோவிலழகே!
தானோங்கு தமிழ்தந்து தரணியில் உயர்த்தினாய்
             தாயேமீ னாட்சிஉமையே!

     ஒம்சக்தி ஒம்சக்தி ஒம்சக்தி ஓம்
     ஒம்சக்தி ஒம்சக்தி ஒம்சக்தி ஓம்

Wednesday, February 2, 2011

வலையெடுத்துப் போனவரே

காலையில வலையெடுத்து
கட்டுமரங் கட்டிகிட்டு
காத்துவழி அலையெதுத்து
கடலுமேல போனவரே..
கடலலைய எதுத்துநீங்க
மீனத்தேடிப் போனியளே
மின்னலாப் போனியளோ?
மானங்கெட்ட மனுசனுவ
மறைஞ்சிருந்து சுட்டானோ?
காணங் காணமின்னு
கருக்கடையாக் கடலோரம்
காத்திருந்து பூத்துப்போன
கண்ணெல்லாங் கலங்கவச்சு
எண்ணமெல்லாஞ் செதறவச்சு
எங்கொலத்தப் பதறவச்ச
மண்ணாப்போற பாவியள
கண்ணால பாத்துக்கிட்டு
கடவுளுந்தேன் இருக்காரோ?
ஆருக்கு நாங்கஎன்ன
அடுக்காத தீங்குசெஞ்சம்?
மீனத்தான புடிச்சுவந்து
மெனக்கெட்டு வித்துவந்தம்
வலையெடுத்துப் போனவுக
வலையவீசு முன்னால
வதவதன்னு சுட்டுப்போட்டான்
அதகளமா ஆக்கிப்பிட்டான்
சின்னப் புள்ளையெல்லாந்
தெகச்சுப்போயி நிக்கிதையா
வாழ்க்கைக்கென்ன பாதுகாப்பு?
கேக்கதுக்கு ஆளில்லையா?
வாக்குக்கேக்க வந்தவுக
சீக்கிரமாச் சொல்லுங்கையா
ஆக்குசன எடுங்கைய்யா





 

Related Posts Plugin for WordPress, Blogger...