Tuesday, October 29, 2013

என்னநாஞ் சொல்லுறது?! 3

பெரியவீட்ட விட்டுப்பிட்டு
சின்னவீட்டுக்கு வந்ததால
உரிமையான உறவெல்லாம்
தெரியாமேப்போச்சுதுங்க

கூட்டுக் குடும்பத்துல
காட்டிவச்ச சமத்தெல்லாம்
போட்டி பொறாமையால
ஏட்டிக்கிப் போட்டிபேசி
எட்டாமப் போச்சுதுங்க--ஒறவு
ஒட்டாமப்போச்சுதுங்க

விட்டுக்குடுத்துப் போனவங்க
கெட்டுப்போன தில்லேங்க
விட்டுக்குடுத்துப் போனாக்க
எட்டாத ஒறவெல்லாம்
கிட்டவந்து சேருமுங்க
கிட்டிவரும் நன்மைங்க

சொந்தமெல்லாம் ஒண்ணுகூடி
சேந்துவந்து குடும்பத்துல
பந்தாவக் காட்டம
பாந்துவமா நடந்துக்கிட்டு
சிந்தனையச் செயலாக்கி
நெஞ்சமெல்லாம் மகிழ்ந்திருப்போம்!

வேத்துமைய மறந்துப்புட்டு
ஒத்துமையா வாழணுங்க!
வாங்க வாங்க எல்லாரும்
வளமையான வாழ்க்கைவாழ!
என்னநாஞ் சொல்லுறது
எல்லாருக்கும் நல்லாருக்கா?!   

Wednesday, March 27, 2013

காட்டுக்கருப்பையா!

கருப்பையா கருப்பையா காட்டுக்  கருப்பையா!
கருப்பையா கருப்பையா காத்தருள்வாய் கருப்பையா!

வெண்புரவி மீதமர்ந்து விண்ணதிர வந்திடுவாய்!
என்புருக வணங்கிநின்றால் எழிற்கோலம் காட்டிடுவாய்!
நாட்டும் புகழோடு நலம்சேரக் கருணைமுகம்
காட்டும் கருப்பையா காட்டுக் கருப்பையா!----[கருப்பையா]

சலங்கையிட்டு நீவந்து சதிராட்டம் ஆடுகையில்
கலக்கமெல்லாம் போயொழிந்து களிப்புமிகக் கூடுதையா!
குலுங்கவே சிரித்துநீ கோபுரமாய் உயர்கவென்று
சலங்கை குலுங்கவந்து சடுதியிலே வரம்தருவாய்!----[கருப்பையா\]

வீச்சரிவாள் கைக்கொண்டு வீதியிலே நீவந்தால்
பேச்செல்லாம் மறந்துநின்று பெருமையுறப் பார்த்திருப்போம்!
உச்சரிக்கும் நாமமெல்லாம் உன்பேராய்த் தானிருக்கும்!
உச்சிமுகந் தெமையாளும் உன்னதமே கருப்பையா!----[கருப்பையா]

சுக்குமாந் தடியுடனே சுழன்றாடும் அழகாநீ
எத்திக்கும் காட்சிதந்து எழிற்கோலம் காட்டிடுவாய்!
பக்குவம் தந்தருளி பாசமுடன் காத்திடுவாய்!
 தித்திக்கும் அருளாலே தேன்குடித்த வண்டானோம்!----[கருப்பையா]

உள்ளத்தில் உன்முகமே ஒய்யார மாய்விளங்க
அள்ளிவரும் தமிழாலே அழகான பாட்டிசைத்தோம்
பிள்ளைகள் எமக்காகப் பிரியமுடன் காட்சிதந்து
துள்ளிவரும் குதிரைமேல் துடிப்புடனே வந்திடுவாய்----[கருப்பையா]

வேண்டிவரம் கேட்டவர்க்கு விருப்புடனே தந்தருளி
ஆண்டருளும் அற்புதமே ஐயாஎம் கருப்பையா!
சொல்லரிய அன்பாலே சொக்கியே நிற்கின்றோம்!
வெல்லரிய பலம்தருவாய்!விரைவாக வந்திடுவாய்!!----
[கருப்பையா]

பிள்ளைகுட்டி எல்லோரும் பிரியமுடன் பாத்திருக்க
வல்லவேட்டிப் பட்டணிந்து வலம்வருவாய் கருப்பையா!
நல்லபுள்ளி பெருகிவர நலமுடனே உனைவணங்க
அள்ளியள்ளித் தந்திடுவாய் ஐயாஉன் அடிபணிந்தோம்!


Friday, January 11, 2013

தோளெடுத்த காவடிக்கு துணைவருவாய் முருகையா!

தோளெடுத்த காவடிக்குத் துணைவருவாய் முருகையா!
தாளெடுத்து வைக்கையிலே தப்பாது வேகமையா!
வேலெடுத்து வந்துநின்று வினைகளைவாய் முருகையா!
தாளமிட்டுப் பாடிவர தணியாத மோகமையா

தேனான தெய்வானை தென்றலென அருகிருக்க,
மானான வள்ளியுடன் மயிலினிலே அமர்ந்திருப்பாய்!
தானானா பாட்டிசைத்து தமிழ்மகனே உனைவணங்க
மீனான கண்ணசைத்து மேவுபுகழ் தந்திடுவாய்!

கால்வலிக்க நடந்துவந்து கண்மணியாம் முருகுனக்கு
பால்குடமும் காவடியும் பக்குவமாய்க் கொண்டுவர
மால்மருகா மக்களுக்கு மலைபோல துன்பமெல்லாம்
பால்பனிபோல் மறைந்திடவே பரிவோடு காத்தருள்வாய்!

புள்ளியெல்லாம் பெருகவென்று பூம்பாதம் பணிந்தவர்க்கு
நல்லபிள்ளை தந்திடுவாய்! நல்முத்தாய் விளையவைப்பாய்!
வள்ளலுனை நாடிடுவார் வரம்கோடி முன்வைப்பார்!
வெள்ளமென அருள்பொழிய விரைவாக வந்திடுவாய் !


Wednesday, January 9, 2013

குன்றாத சிறப்போடுவாழ்

அன்றாடச் செலவுக்கு அடுத்தவரை நாடாமல்
நன்றாக உழைத்து நல்வழியில் சேமித்து
ஒன்றாகக் கூடியே உயர்வான வாழ்வமைத்து
குன்றாத சிறப்போடுவாழ்!
Related Posts Plugin for WordPress, Blogger...