Friday, December 24, 2010

வெங்காயம்.

விலைவைத்துப் புகழ்தேடி
மலை உயரம் தாண்டிவிட்டாய்!
விலைகேட்ட வியப்பினிலே
சிலைபோலச் சிலபேர்கள்!!
வேண்டுமா வேண்டாமா
விருந்துக்கு வெங்காயம்?
விதண்டா வாதம்பண்ணி
இதாண்டா சாக்கென்று
வெற்றிகரமாக
முட்டைக்கோசே போதுமென்று
வெங்காயம் விலக்கிவிட்டார்!
ஒருவழியாய் இறங்கிவந்தாய்
உன்னயே மறந்துபோச்சு!
இனிஎதற்கு?
வெங்ங்க்காயம்?!........

Monday, December 20, 2010

திருந்தாத மனிதன் இருந்தென்ன லாபம்?

ஓ..பெண்ணே
நீ பிறக்கும்போது
பெற்றோர் இட்டபெயர்
ராஜகுமாரி
இன்றோ..
நீ..
சோகத்தின் சுவீகாரகுமாரி
உன் இதயத்தில் மலரும்
இன்பநினைவுகளில்
ஒன்றாவது இந்தஉலகத்தில்
உண்மையாகி இருந்தால்..
பெயரில்மட்டுமல்ல..
நீ..
உண்மையிலேயே ராஜகுமாரிதான்!
நீ இப்படி இருப்பது
எவருக்குப் பிடிக்கவில்லையோ
அவர்கள் மனம்மகிழத்தான்
இந்த ரோஜாவை முள்ளில் இட்டு
இடமும் வலமுமாக
இடைவிடாமல் தேய்க்கின்றனரோ!
                                                                         !
கசங்கிப் போனாலும்
கண்ணீரில் மிதந்தாலும்
ஒரு விடியல் நிச்சயம் உண்டு!
தைரியமாய் இரு.
உன்னைப்பற்றிக் கவலைப்பட
உனக்கு நல்வாழ்வு கிடைக்க வேண்டுமென்று
ஒரு இதயம்...
அல்ல அல்ல
சில இதயங்கள் இங்கே..
துடித்துக்கொண்டிருக்கின்றன
ஆனால் அவை
துடிப்பதால்மட்டும் உனக்கு
சுகமான வாழ்வு கிடைக்குமானால்
எப்போதும் உனக்காக
துடிக்கக் காத்திருக்கின்றன.
எந்த ராஜகுமாரனோடு நீ..
வாழ்ந்துகாட்டப்போகிறாய் என்று
உன்னைப் பெற்றவர்கள்
உவந்து மணமுடித்தார்களோ
அந்தக் கொடுங்கோலனே
இரக்கமற்ற கொடுமைகளால்
உனக்குக் காலனாகவருவானோ என்று..
எங்கள் இதயங்கள் பதறுகின்றன
ஒவ்வொருநாள் காலையிலும்
உதயமலர் போலிருக்கும் உன்வதனம்
ஒவ்வொரு மாலையிலும்
உலர்ந்து தவிப்பதை உணருகிறோம்
ஆனாலும் நீ
வாழ்ந்து காட்ட வேண்டும்
உன்வாழ்வை இப்படி ஆக்கிய
உன்மத்தர்கள் உருகித்தவிக்கவும்
அவர்களப்பார்த்து நீ
ஐயோ பாவமென்று
சொல்வதற்காகவாவது
நீ வாழவேண்டும்
உன் கணவன் திருந்த
நீயும்
உன்னோடு நாங்களும்
இறைவன் திருவடியை
இணைந்து வணங்குவோம்.

மதுரைக்கும் திருப்பத்தூருக்கும் நடுவிலுள்ள மேலூருக்குப்
பக்கத்திலுள்ள வெள்ளலூர் என்னும் ஊரில்1982களில்
என் குழந்தைகளின் அப்பா மதுரைவங்கியில் வேலை
பார்த்தபோது எழுதியது.[இப்போது ஐசிஐசிஐ] அப்போதெல்லாம்
பாவம் அந்தஊர்ப் பெண்களுக்கு அவ்வளவாக சுதந்திரமில்லை
கிராமங்களில் எம்பொண்டாட்டிய நா அடிப்பேன்
எவண்டா நாயே கேக்கிறது? என்று சமாதானம்
பேசப்போகிறவர்களையும் இழிவாகப்பேசுவான்கள்
அதையெல்லாம் பார்த்து மனம்வருந்தி எழுதிய
எண்ணங்களின் வெளிப்பாடே இது.அதன்பிறகு பல
ஊர்கள்மாறி இப்போது பதவிஓய்வும்பெற்று
ஊரோடு வந்தாச்சு. பேரனும்படித்துமுடித்து வேலைக்குப்
போகிறான். அந்த ராஜகுமாரி இப்போது எங்கு இருக்கிறாள் என்றுதெரியவில்லை.

Saturday, December 18, 2010

அன்புத் திருமகளே!

பச்சைக் குழந்தையிலே பக்கத்தில் வந்தமர்ந்து
பார்க்கின்ற வேலையெலாம் பார்த்தவுடன் செய்திடுவாய்!
பள்ளியில் படிக்கையிலே பக்குவமாய்ச் சமையல்,
கல்லூரி சென்றபின் கல்வியுடன் கவிதையும்,
போட்டிகளில் கலந்துகொண்டால் பொதுவாக முதல்பரிசு,
வீட்டுக்கு வந்துவிட்டால் வண்ணங்கள் தீட்டுதல்,
திருமணத்தின்பின் வாழ்வின் இலக்கணமாய் இருக்கின்றாய்.
கோவையிலும் சென்னையிலும் குழந்தைகளே உலகமாய்,
டெல்லியிலே இருக்கையிலோ உல்லனிலே வகைவகையாய்,
சிதம்பரத்தில் இருக்கையிலே சிவனவனே சீவனாய்,
நெய்வேலி இருக்கையிலே கைவேலை கவினழகாய்,
சேலத்தில் இருக்கையிலே சிங்கார வீடழகாய்,
காரையில் உன்வீடு கவினுறவே தோட்டமிட்டு,
காய்கீரை பூச்செடியும் கனிமரங்கள் தான்வளர்த்தாய்,
மீண்டும்நீ சென்னையில் மீண்டுமுன்னைப் புதுப்பித்து,
வாழ்கின்ற வசந்தத்தில் வரவேண்டும் பேரமிண்டி!

Friday, December 17, 2010

வந்தாரை வாழவைப்பான்!

வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்--வெற்றி
வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்

வந்தாரை வாழவைக்கும் செந்தூரின் வேலனவன்
பந்தாடிக் கவலைகளைப் பறந்தோடச் செய்திடுவான்!
அந்திசந்தி காலமும் ஒன்பதுகாலப் பூசையும்
முந்திவந்து காணவே முடிவில்லாத ஆனந்தம்!---[வேல்முருகா]

படிப்படியாய் வளர்கஎன்று பாசத்தைக் காட்டியே
அடிக்கடி நமைஅழைக்கும் அழகுச் செந்தூரானுக்கு
அடுத்தடுத்து அபிசேகம் அன்பிலே பொழிந்திடும்
தொடுத்தெடுத்த மலர்களெல்லாம் தோள்களில் மலர்ந்திடும்!--[வேல்முருகா]

வருகவருக வருகஎன்று வரவேற்கும் வேலவன்
பெறுகபெறுக இனியதென்று பேரருள் புரிகிறான்!
அரஹரஹர என்பவர்க்கு அச்சமில்லை அவனியில்
கரங்களிலே ஏந்திநின்று கருணைமழை பொழிகிறான்!--[வேல்முருகா]

கண்ணில் மின்னும் கனிவினால் கடலையும் கட்டுவான்
விண்ணைமுட்டும் அலைகூட வீழ்ந்துவணங்கும் செந்திலில்!
சண்முகத்தைக் கண்டுவந்தால் சகலத்திலும் வெற்றியே!
கண்களிலே தேக்கிவைத்துக் காத்திடுவோம் போற்றியே!!--[வேல்முருகா]

சங்கினோசை அலையிலே சண்முகத்தின் கரையிலே
எங்கும்மக்கள் வெள்ளந்தான் எழிலான காட்சியே!
சங்கரனின் மைந்தனுக்கு சஷ்டியிலே திருவிழா
சங்கடங்கள் நீக்கிவிடும் சம்ஹாரக் காட்சியே--[வேல்முருகா]

இறங்கிவந்து வணங்கினால் இரக்கம்காட்டும் வேலவன்
ஏறிவரும் வேளையில் ஏற்றம்மிகத் தருகிறான்
மறங்கிநின்றால் கவலைகளை மறைந்தோடச் செய்திடுவான்!
சிறந்தநல்ல பதவியும் செல்வமும் நல்குவான்!!--[வேல்முருகா]

வரம்வேண்டி வருவோர்க்கு வளர்கஎன்று வாழ்த்தியே
சிரங்குவித்து வணங்கும்வேளை சிரித்தமுகம் காட்டுவான்!
பிரகாரம் ஒன்றுவந்து நிறைவுசெய்யு முன்னரே
விரும்புகின்ற வேண்டுதலை விரைவில் நிறைவேற்றுவான்!--[வேல்முருகா]

கற்பகத்தின் தம்பியவன் கந்தவேளை நம்பினால்!
உற்றதுணை அன்பிலே உலவாக்கிழி யானவன்!!
பொற்பதங்கள் பணிந்துவந்தால் புதியசக்தி காணலாம்!!!
அற்புதங்கள் காட்டிடுவான் ஆறுமுக வேலவன்!!!!--[வெல்முருகா]

விண்ணைமுட்டும்...=சுனாமி வந்தபோதுகூட திருச்செந்தூரில் கடல்
உள்வாங்கியது.அந்த நேரத்தில் நான் அங்கு பதினொருநாட்கள்
 வேண்டுதலின்பொருட்டுத் தங்கிஇருந்துவந்தபடியால்
ஏற்பட்ட எனது அனுபவங்களின் வெளிப்பாடே இப்பாடல்.

மறங்கிநின்றால்=கலங்கிநின்றால்

உலவாக்கிழி = எடுக்கஎடுக்கக் குறையாத பொன்முடிப்பு.


ஏர்முனைக்கு நேர் இங்கே எதுவுமேயில்லே.
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமேயில்லே.
என்ற மெட்டில் பாடிப்பாருங்கள்.

Tuesday, December 14, 2010

பாரம் சுமக்கப் பழகும் பசுந்தளிர்கள்

நெடுமால்திருமருகா
நித்தநித்தம் இந்த[அ]ளவா!?
பாடுபட்டுச் சுமக்கின்ற
பசுந்தளிர்கள் பாவமன்றோ?
நாட்டுபுகழ்க் கல்வியினை
நலமுறவே கற்பதற்கு
ஏட்டில் படித்த நாங்கள்
இந்த[அ]ளவு சுமக்கலையே
ஏந்திச் சுமந்துபட்டால்
எளிதாகும் வாழ்க்கையென
நீந்திக் கடப்பதற்கு
நிகழ்காலப் பழகுதலோ?
முதுகில் சுமந்துவந்து
முழுமையுறக் கற்றதனால்
எளிதாக அறிவதற்கு
ஏற்றதொரு நூலகமாய்
புதுயுகப் புத்தகத்தைப்
புதுமையுறக் கண்டனரோ!?
                                                                                                                                                                                                            

Sunday, December 5, 2010

பேரன் பேத்திகள் தொடர்ச்சி

                                  மா.விசாலாட்சி.

ஐயாவின் சமஸ்தானம் வளவுக்குள் பேரடக்கம்.
ஆயாவின் சாம்ராஜ்யம் அடுக்களையில் சிறந்திருக்கும்!


                                  லெ.தேனம்மை.

முக்காட்டார் அகத்திருந்து முன்புவந்த ஆயாவாம்
முத்துக் கருப்பாயி முழுமனதாய் ஐயாவின்                                    
சொத்தாக இதயத்தில் சொகுசாக வாழ்கின்றார்!
பக்திசெயும் எங்களுக்கும் பாசமுடன் அருள்கின்றார்!


                              சபா.அருணாசலம்


பேசாத தெய்வமெங்கள் பெரிய ஆயாவென்றால்
பாசமுடன் உணவூட்டிப் பக்குவமாய் எனைவளர்த்த
வாசமுள்ள மரிக்கொழுந்து மல்லிகைப்பூ தான்சூடும்
பேசுகின்ற பொற்பாவை பிரியமுள்ள அலர்மேலு!


                          சபா.வள்ளியப்பன்


ஆறாவயல் பிறந்து ஆயாவீட்டில் வாழ்வமைந்த
சீராங்கனி ஆயாள் சிறப்பெங்கள் வாழ்வினிலே!


                        சபா.மெய்யப்பன்.


மல்லித்தழை கருவேப்பிலை மணக்கின்ற புதினாவுடன்
முள்ளங்கி வெங்காயம் முதலான காய்கறிகள்
உள்ளம் நிறைந்திடவே ஒவ்வொன்றாய்த் தேர்ந்தெடுத்து
அள்ளித் தின்னலாம்போல் அரிந்துவைப்பார் அழகுறவே!


                      ராம.வள்ளிக்கண்ணு.


இட்டலியோ முல்லைப்பூ!இளந்தோசை அப்பத்தா
வார்க்கின்ற அழகினிலே வட்டநிலா வெட்கிநிற்கும்!!

                        ராம.அலமேலு.


பொட்டழகுப் பூமுகத்தில் புன்சிரிப்புமாறாமல்
இட்டமுடன் பரிமாறி இனிமையுடன் பார்த்திருப்பார்!


                       ராம.சௌந்திரநாயகி
.
பட்டுத்துகில் கசங்காது பளபளக்கும் சூரியனாய்
தொட்டதெல்லாம் துலங்கவரும் தூயமன அப்பத்தா!
அலர்மேலு அன்புஎமக்கு ஆனந்த நீரூற்று!
பழமுதிர்ச் சோலைநிறை பரவசப் பூங்காற்று!


வெ.மீனாட்சி, வெ.வள்ளியம்மை, வெ.பொன்னழகி,
          நாக.மெய்யப்பன், நாக.சபாரெத்தினம்,
                       ராம.சுப்பிரமணி.

                                                      
வடிவழகாய்ப் பொன்சேர்த்து வயிரமணிச் சரம்கோர்த்து
கொடியினிலே தாலிகோர்த்து கோடிஅழகாய்த் திருப்பூட்டி
தாமரைகள் இரண்டுவந்து தரையினிலே பூத்ததுபோல்
ஆழ்கடலின் முத்தெடுத்து அருகருகே அமைத்ததுபோல்
யாழிசையும் ஏழிசையும் யாப்போடு இணந்ததுபோல்
மாயவனும் இலக்குமியும் மணைமேல் அமர்ந்ததுபோல்
ஆயிரம் பிறைகண்ட ஐயாவுடன் அப்பத்தா!
வயிரம் தங்கமெல்லாம் வாழ்வினிலே எமக்கெதற்கு
ஆயிரம் பிறவியிலும் அன்புகொண்ட உள்ளங்களே!
சேயாகப் பிறந்து உங்கள் சீரடிகள் போற்றவேணும்
வண்ண மலர்தூவி வழ்த்துக்கள் வேண்டிநின்றோம்
வாயர வாழ்த்திடுவீர் எம்மை.!

இருபத்தி ஐந்துபேரன் பேத்திகள். இவர்களுடன்
என் ஆச்சி மகளின்பேரனையும் பார்த்துவிட்டார்கள்.
ஐந்து தலைமுறைகள்!


இன்று எங்கள் அப்பச்சி எங்களுடன்இல்லை.
சுமார் மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன.
வீட்டில் [U.P.S]பொருத்தி விளக்கு வந்ததும்
உயிர் பிரிந்தது!
தனது தொண்ணூற்று ஏழாவது வயதில்
உயிர்பிரியும் நேரத்தில்கூட உயர்விளக்கு
ஏற்றிவைத்த உன்னத மனிதர்.

ஆயா=அம்மாவுடய அம்மா
அப்பத்தா=அப்பாவுடைய அம்மா
ஆச்சி=அக்கா





Saturday, December 4, 2010

தொடர்ச்சி--பேரன் பேத்திகள்.

                                 சுப. வள்ளியப்பன்
பாட்டையா சுப்பையா பண்பான ஆட்சியிலே
ஈட்டிவந்த புகழுக்கு இன்றளவும் குறைவின்றி
போட்டியின்றித் தேர்ந்தெடுத்த பொன்னான தலைவரைப்போல்
பாட்டியார் மூவருக்கும் பணிவான ஒருமகனார்.
                              
                                சுப. சுப்பையா

சந்தனத்தில் பொட்டுவைத்து சவ்வாது மணக்கவரும்
சென்ட் -வ-னா என்றழைக்கும் செல்லப்பெயர் நண்பரிடை
வத்துப்ப ஹார்தனிலே வட்டிக்கடை நடத்தியதால்
வத்துப்ப ஹார்-வ-னா எனும்பெயரும் தானுண்டு.

                               சுப. அருணாசலம்

கட்டியுள்ள வேட்டிஎன்றும் கசங்கிடாத முல்லைப்பூ
போட்டிருக்கும் சட்டையுடன் புதிதாக இரண்டுமட்டும்
தேவைக்கு மேல்இருந்தும் தேடிஅணிய மாட்டார்கள்!
தேவை முடிந்தவுடன் தாமேதான் துவைப்பர்கள்!
                            
                           சுப.முத்துக்கருப்பாயி


நகைசெய்ய வைரங்கள் நன்றாகப் பார்ப்பார்கள்
பகையின்றி எவருடனும் பழகிவரும் பண்பாளர்!
நகைமுகம் மாறாத நல்லமன அப்பத்தா
வகைவகையாய் எங்களுக்கு வாங்கித் தருவார்கள்


                               சுப. மெய்யப்பன்

இஞ்சினியர் நிறைந்திட்ட இனியஎங்கள் குடும்பம்
மிஞ்சுகின்ற பல்கலைக் கழகமாய்த் திகழுதற்கு
நெஞ்சகத்தே அன்புவைத்து நிலைவிளக்காய் ஒளிகூட்டி
விஞ்சுகின்ற கண்டிப்பில் விளங்குகின்றார் எம்ஐயா!
                             
                                சுப. தேனப்பன்

நண்பருக்கு நலமாகி நல்லவர்க்குத் துணையாவார்!
கண்பார்த்தால் கைசெய்யும் பழக்கமே நல்லதென்பார்!
கண்பட்டு விடும்போலக் கணக்கெழுதும் எங்களையா!
எண்பதென்று சொல்லுகிறார்! நம்பவே முடியவில்லை!!


                             சுப. விசாலாட்சி
                        
தும்பைப்பூத் துப்பட்டா தோள்களிலே துலங்கிவர!
நம்பிக்கை கண்களிலே நல்வைர மின்னலிட!
தும்பிக்கை யான்தம்பி துணையாக வருவதுபோல்
எம்ஐயா நேர்த்தியுடன் எழுந்துவரும் சுறுசுறுப்பு!


                             ராம.முத்துக்கருப்பாயி.


எப்போதும் மணிப்படியே தப்பாது உணவருந்தி
இப்போதும் இளமையுடன் இருக்கின்றார் எங்களையா!
ஐயாவின் மனம்போல ஆயாவின் நளபாகம்!
ஐயாவின் இளமைக்கு அதுவேதான் ரகசியமாம்!


                            வ.மீனாட்சி


அதிகாலை எழுந்துவந்து அதிவேக நடைப்பயிற்சி
ஆனந்த பவனிலொரு காப்பியுடன் முடிப்பார்கள்!


                          மா.வள்ளியப்பன்


காலைக் கடன்களெல்லாம் கடுகவே முடித்துவிட்டு
நாளையென்று தள்ளாமல் நடைமுறையில் செயலாற்றி
காலைமுதல் மாலைவரை கணப்போதும் சுணங்காமல்
களைப்பின்றி விரைந்தாற்றும் கணிப்பொறியாம் எங்களையா!

                             சு.ரேவதி.


படையே பதைக்கின்ற பலமான வெய்யிலிலும்
நடையே போதுமென்பார் நாலுரூபா மிச்சமென்பார்!
இடையிடையே காப்பி கொஞ்சம் இதமாகக் குடித்திடுவார்
குடையோடு பார்த்திடலாம் குசியான எங்களையா!

                                                                       வளரும்...

Thursday, December 2, 2010

தொடர்ச்சி

.ஒப்பற்ற மெய்யப்பர் உயர்வான கவனிப்பில்
எப்போதும் சுறுசுறுப்பே இயல்பான அப்பச்சி
எட்டாவது படிக்கையிலே எழில்ரங்கூனில் இருந்து
சிட்டாகப் பறந்துவந்த சிறுதந்தி படித்ததனால்
மெய்யப்ப பாட்டைய்யா மிகமகிழ்ச்சி தானடைந்து
மெய்யான படிப்பிதுவே! மேற்படிப்பு போதுமென்று
ஏட்டுப் படிப்பதனை எட்டோடு நிறுத்திவிட்டு
வட்டித் தொழில்தன்னை வளமாகக் கற்பித்தார்.
தலைமுறைகள் தழைக்கவந்த தாய்மூவர்க் கொருமகனார்
அலைகடலுக் கப்பாலே அறம்பெருக வித்திட்டார்!
விலையுண்டோ இளமையிலே தனிமைமிகக் கொண்டதற்கு!?
ரங்கூனில் கொண்டுவிக்க ராப்பகலாய் மொழிகற்று
மலாயாவில் கொண்டுவிக்க மலாய்மொழியும் தான்கற்றார்!
என்றைக்கும் கற்பதற்கு ஏற்றதொரு நூலகமாய்!
இன்றைக்கும்திகழ்கின்றார் எங்களது அப்பச்சி!!
                                                                     
                                                                       வளரும்..
.
அப்பச்சி { பொருள் } -அப்பா.              


கொண்டுவிக்க { இதற்குப்பொருள் சுருக்கமாகச் சொன்னால் செட்டியார்கள்
வெளிநாடுகளுக்குச் சென்று பணம் மற்றும்பொருளீட்டி வருதல் }

























































































































Wednesday, December 1, 2010

எங்கள் அப்பச்சி எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்தவர்கள்..

மடைதிறந்த வெள்ளமென மக்களுக்கு அருள்பொழிந்து
கடைக்கண்ணால் கொப்பாத்தாள் கருணையுடன் காத்திருக்க
அடைக்கலமாய் வந்தவர்கள் ஆயிரமாய்ப் புகழ்சேர்க்க
தடக்கலன்கள் விலகிவளர் தண்காரை நகர்தன்னில்
குன்றக்குடி உறைகின்ற குமரனவன் சன்னதிமுன்
நன்றெனவே அந்தணர்கள் நாடிவந்து கற்பதற்கு
வேதங்கள் நன்கறிந்த வித்தகரும் தான்வைத்து
வேதசாலை அமைத்தஎங்கள் வேகுப்பட்டி யார்வீட்டில்
எல்லையில்லாக் குறும்புசெய்யும் எழிற்குழந்தை வேண்டுமென்று
வள்ளியம்மை அப்பத்தாள் வரம்வேண்டிச் சென்றார்கள்.
மெய்யம்மை அப்பத்தாள் மிகவிருப்பம் தான்கொண்டு
செய்கின்ற தவமெல்லாம் செம்மையுடன் மேற்கொண்டார்.
மெய்வருத்தித் தவமிருந்து மேன்மைமிகு மகன்தந்து
ஐயனவன் முருகனடி அடைக்கலமாய்ச் சென்றுவிட்டார்.
கைகளிலே குழந்தைதனைக் கருத்துடனே வளர்ப்பதற்கு
பெய்கின்ற மழையெனவே பேரன்பு செய்குதற்கு
ஐயாவாம் சுப்பையா அருமைவிசா லாட்சிதனை
மெய்யான துணையாக மேன்மையுறப் பெற்றார்கள்!
அப்பத்தாள் வளர்ப்பினிலே அப்பச்சி வள்ளியப்பர்
தப்பாது தான்வளர்ந்தார் தகைசால் மகனாக
                                                            வளரும்....

ஆங்கில ஆண்டு எட்டு மூன்று ஆயிரத்துத்தொள்ளாயிரத்து
தொண்ணூற்று மூன்றாம் ஆண்டுஎங்கள் அப்பச்சியின்
ஆயிரம்பிறைகாண்விழாவிற்கு எழுதியது.

எங்கள் குழந்தைகளின் அப்பத்தாவீட்டு ஐயா

அன்பினிலே கடலானார்! எங்களையா அலைநிகர்க்கும்
நண்பர்களின் துணையானார்! இகவாழ்வில் எமக்கெனவே
பண்பென்ற தங்கத்தில் பணியெனும் வைரம்சேர்த்தார்!
கண்போன்று எங்களைத்தம் இமையாலே காக்கின்றார்!
தன்னைவிடத் தன்பணியே தலைசிறந்து விளங்கிடுவார்!
பொன்னைநிகர் ஐயாவாம் போஸ்டாபீஸ் ஆனா ரூனா
செப்பரிய அன்பாலே செதுக்கிவைத்தார் எமையெல்லாம்!
அப்பத்தா இருவருடன் அகத்திருந்து வாழ்த்துகின்றார்!











Tuesday, November 30, 2010

காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன்.

கற்பகக் கணபதியின் பொற்பதம் பணிந்துநான்
            கவிமழை பொழிய வேண்டும்!
கற்கண்டுத் தமிழாலே காரைநகர் மாரியின்
           கருணையைச் சொல்ல வேண்டும்!
கற்றவை கருவாகிக் கவியாக நான்வடிக்கக்
          கந்தனின் அருளும் வேண்டும்!
கொற்றவை புகழ்தனைக் கூறிநான் மகிழ்ந்திடக்
          குலதெய்வம் அருள வேண்டும்!
அந்தணர் குலமகள் பந்தமாய் வந்தவள்
          அழகான முத்துமாரி!
வந்தனை செய்பவர் வாழ்விலே வளங்களை
         வாரியே வழங்கும் மாரி!
ஆதங்கப் பட்டோர்க்கு அற்புதம் காட்டிடும்
          அன்னையே முத்துமாரி!
பேதங்கள் இல்லாது பேரருள் புரிந்திடும்
          பெட்டகம் முத்துமாரி!

உண்ணாமல் உறங்காமல் உணர்வெல்லாம் நீயாக
           உனைக்காண ஓடி வாரோம்!
கண்ணீரே பாலாகிக் காதலுடன் நாடினோம்
           கருணை மழை பொழியுமம்மா!
தன்னாலே வளர்ந்துவரும் தனித்தமிழில் தாயுனக்குத்
           தாலாட்டுப் பாடி வாரோம்!
உன்னாலே ஆகுமென உளமார நம்பினோம்
           உன்னதக் காட்சிதாரும்!
உயிர்போலத் தீச்சட்டி உவப்புடன் ஏந்தினார்
           உயர்வடைய வேணு மம்மா!
பயிர்வளர்த்துப் பக்குவமாய் பாதத்தில் சேர்க்கிறார்
           பாசத்தைக் காட்டுமம்மா!
மயில்தோற்கும் நடனத்தில் மகிழ்வோடு வருகிறார்
            மக்களைக் காருமம்மா!
ஒயிலான அழகோடு உளம்நிறைய அருளோடு
            உலகாளும் முத்துமாரி!


பூமாரி பொன்மாரி பொருளனைத்தும் தரும்மாரி
           புகழ்முத்து மாரியம்மா!
பூமாரி போலருள் பொழிந்திடும் பெரும்சக்தி
             ஓம்சக்தி மாரியம்மா!
பூமிதிக்கும் பாதங்கள் புகழ்நோக்கி நடைபோடப்
             புன்னகையில் வழிகாட்டுவாய்!
சாமியென வழிபடவே சங்கடங்கள் சம்கரிக்கும்
            சங்கரியே முத்துமாரி!
ஓம்என்ற சொல்லுக்குள் உலகாளும் மாதாவே
            உன்வேலைத் தாங்கி வாரார்!
நாமென்ற ஆங்காரம் நடுவழியில் மறைந்திட
           நல்வரம் தந்தருள்வாய்!
நோன்புக்குப் பலன்தந்து நொந்தவர் மனம்மகிழ
           நொடியிலே காட்சிதருவாய்!
வேம்புக்குள் விளையாடி வினையெல்லாம் தீர்த்தருளும்
          வித்தகியே முத்துமாரி!

சேவடிகள் நடனமிடச் சிறியவரும் பெரியவரும்
           சிலிர்த்தெழுந்து ஓடிவருவார்!
பாவடிகள் பாடிவரும் பக்தருக்கு நலம்கோடி
          பாவையிவள் மகிழ்ந்தருளுவாள்!
காவடியும் பால்குடமும் முளைப்பாரி மதுக்குடமும்
          தீச்சட்டி பூமிதியுமே!
காணக் கிடைக்காத காட்சியிது பங்குனியில்
         காரைநகர் பொங்கிவழியும்!
ஆணவம் நீக்கியே அருள்மழை பொழிந்திடும்
         அன்னையே முத்துமாரி!
பேணிஅடி பணிவோர்க்குப் பெருமைகள் தந்திடும்
          பெருங்கருணை முத்துமாரி!
கனவுகள் நன்வாக்கிக் கையிலே பலன்தரும்
           கற்பகம் முத்துமாரி!
காரைமா நகர்விளங்கும் மீனாட்சி புரம்உறை
          கண்மணி முத்துமாரி!




















Friday, November 26, 2010

இரணியூர் ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவி

அற்புதங்கள் செய்தெம்மை ஆட்கொண்ட நாதன்மகன்
கற்பகத்தின் கருணையிலே கனிந்துமனம் மகிழ்ந்துநின்றோம்
வலம்வந்து வணங்கிடவே வருந்துன்பம் களைந்திடுவாய்
நலம்தந்து பலம்தருவாய் அள்ளியள்ளி!


அள்ளிக் கொடுக்கின்ற அருளாலே வளம்கண்டு
வெள்ளி முளைக்குமுன்னே விரைவாகச் செய்திட்ட
தங்கக் கதவுதைத்த தனவணிகர் வணங்குகின்ற
எங்கள் தமிழ்நாட்டின் இரணியூரே!

இரணியனை வதைத்தநர சிங்கனவன் சாந்திபெற
இரணியூர் ஆட்கொண்ட நாதனவன் கருணையினைப்
பாட்டுக் கவியெழுதிப் பாடவந்த முத்து நான்
கேட்டுச் செவிகுளிர்ந்து பாராயோ!


பார்வையிலே எமைவைத்து பார்புகழ பலம்கொடுத்து
கோர்வையாய்த் தொழில்கொடுத்து குவலயத்தார் புகழவைத்தாய்!
கோவில் திருப்பணிக்கு கொண்டுவந்து கொடுக்கவைத்தாய்
நாவினிக்கத் தமிழ்பாடத் தாராயோ!


தாஎன்று கேட்குமுன்னே தருகின்ற தெய்வமய்யா
தேமதுரத் தமிழ்போலத் திக்கெட்டும் புகழ்பரப்பும்
கல்லுத்தி ருப்பணியும் கலைமிளிரும் சிலையழகும்
சொல்லித் தெரிவதில்லை காணீரோ!


காணும் கண்ணழகே! கைவிரலின் நகம்அழகே!!
பூணும் அணியழகே!பூவிரியும் முகத்தழகே!!
சிவபுரந் தேவியரே சிரித்தமுகத் தாமரையே!!!
நவசக்தி நல்லருளில் நனையீரோ!


நனைகின்ற அன்பாலே நாள்தோறும் வணங்கிவர
மனைமக்கள் சுற்றம்சூழ மகிழ்ந்திருக்கச் செய்வீரே!
தனம்தந்து தளர்வில்லா மனம்தந்து தகைசான்ற
குணம்தந்து குலம்தழைக்கச் செய்வீரே!

முருகா என்றால் முத்தமிழாய்.....

வேல் வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல்-ஆஹா
வேல் வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல்

முருகா என்றால் முத்தமிழாய்-மால்
மருகா வருவாய் மயில்மேலே!
உருகா உள்ளமும் உருகாதோ-அன்பு
பெருகா தோஉன் பேர்சொன்னால்!--அஹா வேல்
பெருகும் அன்பில் பிணைந்தவனே-உயிர்க்
கருவாய் உயிரில் இணைந்தவனே!
நறுமணச் சந்தனப் பிரியனுனை-காண
மறுபடி மறுபடி வருகின்றோம்!--அஹா வேல்
சேவல் கொடியுடை செல்வமகன்-காணா
ஆவல் மிகவே ஆகுதையா!
பூவால் உன்னைப் பூசித்தோம்-தமிழ்
நாவால் பாட நலம்தருவாய்!--ஆஹா வேல்
பாலும் தேனும் அபிசேகம்--காண
பாலன் உனையே நாடிவந்தோம்!
வேலும் மயிலும் துணையென்றே-நடை
கோலும் இன்றிக் கூடிவந்தோம்!--ஆஹா வேல்
கையும் காலும் கடைசிவரை-பிறர்
கையை எதிர்பார்த் திருக்காமல்
செய்யும் செயலைச் சிறக்கவைப்பாய்-ஐயா
பெய்யும் மழையென அருள்புரிவாய்--ஆஹா வேல்
நெடித்த திருமால் மருமகனே-மனச்
செடிக்கு உரமாய் இருப்பவனே!
வெடித்த பஞ்சாய்ச் சிரிப்பவனே-பாப்
படித்த படியுனைச் சரணடைவோம்!--ஆஹா வேல்
எடுத்த காவடி எல்லார்க்கும்-மனம்
பிடித்த படியே வாழ்வுதந்தாய்!
தொடுத்த பூவால் மாலையிட்டோம்-இனி
அடுத்த பிறவியும் உன்னடிமை--ஆஹா வேல்
உன்னைத் தேடியே வருவோர்க்கு-அவர்
முன்னை வினைகளை முடித்துவைப்பாய்!
தன்னே ரில்லாத் தமிழ்மகனே-ஆஹா
என்னே உன்னருள் எழிலழகா!!--ஆஹா வேல்

Friday, November 19, 2010

அக்கினி ஆத்தாள் பாட்டு

காக்கும் கரமுடைய கற்பகமே கவின்தமிழே
கேட்கும் வரமளிக்கும் கேண்மையளே கிளரொளியே
பூக்கும் மலர்தேடிப் பூம்பாதம் சேர்க்கின்றோம்
ஆக்கும் அருட்கருணை தா!

அன்னையே அமுதமே ஆனந்தவெள்ளமே
              அருட்சோதி வடிவாகினாய்!
தன்னையே மறந்துநான் தமிழ்பாடி வந்திட
             தமிழுக்கு எழில் கூட்டுவாய்!
நன்மையும் தீமையும் நாளுமுள்ள வாழ்க்கையில்
             நான் உழன்று அழுந்தாமலே
உன்னையே தினம்தினம் உள்ளத்தில் துதிக்கிறேன்
              ஒய்யாரக் காட்சி தருவாய்!
மண்ணிலே துன்பங்கள் மலைபோல வந்தாலும்
              மாதரசி உனை வேண்டினால்
கண்ணிலே காணாமல் கடுகியே மறைந்திட
              கைதூக்கி வரமருளுவாய்!
சின்னஉரு சிரித்தமுகம் சீர்புகழில் பழுத்தமுகம்
             சிங்காரப் பூந்தோட்டமே
அன்னமென நடைபயின்று அருள்பொழிய வருவாயே
             அக்கினி ஆத்தா உமையே!

உயிருக்கு உயிராக உயிருக்குள் உயிராக
              உருவாகி வந்தவள் நீ!
கருவுக்கு கருவாகி கருவுக்குள் கருவாகக்
             காக்கின்ற கருணை நீயே!
புல்லர்க்குப் புல்லராய்ப் புன்மைசெய் தாரையும்
            புறந்தந்து திருந்தவைப்பாய்
நல்லார்க்கும் நல்லராய் நன்மைகள் செய்தவரை
            நானிலம் போற்றவைப்பாய்!
வெல்லத் தமிழினில் விரிவாக உன்புகழை
           விழைந்துநான் பாடுகின்றேன்!
சொல்லத் தெரியவில்லை சொற்பதங் கடந்துநீ
            துரியநிலை காட்டுகின்றாய்!
நாளும்உன் புகழ்பாடி நல்லறம் செய்துமே
            நம்குலம் தழைக்கவேண்டும்
ஆளும்அருள் வேண்டினோம் ஆசிதர வேண்டும்நீ
            அக்கினி ஆத்தா உமையே!

மணமாலை கேட்டவர்க்கு மணவாழ்வு அமைந்திட
            மாலை எடுத்துத் தந்தாய்!
மழலை வரம் கேட்டவர்க்கு மங்காத புகழ்தரும்
             மழலையும் தான் கொடுத்தாய்!
வேலையென்றும் வீடென்றும் வேண்டிவரம் கேட்டவர்க்கு
             விரைவிலே தான் தருகுவாய்!
விலையொன்றும் கேட்காமல் மலைபோன்ற நன்மைதரும்
             விந்தையை என்ன சொல்வேன்!
மாசியில் படைப்புவரும் மறுபடியும் நல்லபல
              மாற்றங்கள் வந்துசேரும்!
பேசிமகிழ் பேரன்கள் பேத்தியுடன் பெண்மக்கள்
              பிரியமுடன் நாடிவருவார்!
நேசிக்கும் உன்படைப்பில் நெருங்கிவரும் உறவுகள்
              நெஞ்சுருக நினைத்திருக்கும்!-உன்
ஆசியில் புள்ளிகள் ஆனந்தம் பெருகட்டும்
               அக்கினி ஆத்தா உமையே!

தேர்போல குடும்பங்கள் சேர்த்துமே வைத்துநீ
              செகம்போற்ற வாழவைப்பாய்!
ஊர்போற்றி மெச்சவே ஒற்றுமை ஆக்கிநீ
             உள்ளங்கள் நெகிழவைப்பாய்!
மனதிலே நினைப்பவர் மாபெரும் சக்திபெற
            மாயங்கள் செய்திடுவாய்!
தனதென நினையாமல் தருகின்ற நல்லவரை 
          தழைத்தோங்கச் செய்திடுவாய்!
உன்னரும் கருணையால் உள்ளம் நனைந்துமே
           உருகியே நிற்கிறோமே
என்னரும் தாயேநீ எழிற்கோலம் காட்டியே
        எங்களை ஆட்கொள்ளுவாய்!
இன்றுபோல் என்றுமே இல்லங்கள் செழித்திட
           இன்னருள் புரிந்திடுவாய்!
கன்றுபோல் எங்களைக் காக்கின்ற தெய்வமே
            அக்கினி ஆத்தாஉமையே!

     ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்
     ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்.

Monday, November 15, 2010

வனதேவதை.

இந்த மரங்கள்
நமக்காக
வானம்பார்த்து வரம்கேட்கும்
பச்சை ஆடை உடுத்த
வன தேவதைகள்!
நட்டுவைத்து
வளர்த்து வந்தால்
இந்த உலகில்
நாம் வாழ்ந்ததைக்காட்டும்
அற்புத அடையாளம்!

Sunday, November 14, 2010

வாழ்வின் வசந்தகாலங்களில்.....தேதி இட்டும் இடாமலும் சேர்த்துவைத்தநினைவுகள்

இதயங்களின் சங்கமத்தை
இதயங்கள் உணருமுன்னே
இல்லறமும் நல்லறமும்
புரியாத வயதினிலே
இணைத்துவிட்டார் நம்மை!
அன்பே......
அப்போது புரியாத
அன்பின் வேகமெல்லாம்
இப்போது உணர்கின்றேன்!
இதயத்தில் பதிக்கின்றேன்:
அன்று நீ....
கன்னிப் பூக்களின்
கனவு மாளிகையில்
எண்ணற்ற தீபம்
ஏற்றிவைத்த இளவரசு!
புதுமைப் பூக்கள்மலரும்
பொன்மணி மண்டபத்தின்
நிகரிலாத் திருவிளக்கு!
நீ என்இதயத்துக்கு!!
வண்ண நிலவுகளின்
வானுயர்ந்த ஆசைகளில்
மன்னன் நீ...
ஆனாலும்
என் இதயமாளிகையின்
இந்திரக் கனவுகளில் மட்டுமே
நிசமானாய்!
நித்தியத்தாமரை போலும்
நின் இரு கைமலர்கள்
சித்திப்பதில்லை யார்க்கும்!
சித்தம் கிறங்க வைத்தாய்!!
நித்தம் என் நினைவை
விட்டகல மறுக்கின்றாய்!
ஏன்?...
வரம்வேண்டி உந்தன்
வாழ்க்கைத்துணை ஆகினேனோ?!
இரக்கமற்ற இரவுகள்
உறக்கமற்றுப் போய்...
நெஞ்சை அடைக்கிறது
நினைவின் பேரலையில்
மூச்சுத் திணறுகிறேன்...
ஓ....அந்த நாட்கள்
சுகமான ராகங்கள்
சொந்தமுடன் இசைத்துவரும்
இளமைப் பூங்காவின்
இனிய சங்கீதம்
தனிமை கிடைக்கையிலோ
பனிமலர்போல் உல்லாசம்!
எப்போதும் நீ
உதயச் சூரியனின்
இதமான ஒளியாகி
இல்லத்தை நிறைக்கின்றாய்!
இன்னும் தொடர்கின்றாய்!!
தொடரட்டும் உன்னைப்பற்றிய
தூய அன்பின் நினைவுகள்!

இந்த எண்ண வெளிப்பாடுகள்
எழுதப்பட்ட ஆண்டு ஆயிரத்து
தொள்ளாயிரத்து எண்பத்து இரண்டு!
என்ன குழந்தைகளே வியப்பாக இருக்கிறதா!?
இப்போதுதானே புதுயுகப்புத்தகம் கொஞ்சம்
புரிய ஆரம்பித்திருக்கிறது
அதனை உங்களுடன்
பகிர்ந்துகொள்ளத் தோன்றியதால்
எழுதினேன்! எப்படி இருக்கிறது?

.

Monday, November 8, 2010

காரைக்குடி நாகநாதபுரம் தெட்சிணாமூர்த்தி

ஆலிலைக் கண்ணன்முன்னே
ஆலயம் கண்டாய் போற்றி!
ஆலமர் கடவுள் போற்றி
ஆலமர் கடவுள் போற்றி!

மால் அயன் கோவில்முன்னே
மகிழ்வுடன் அமர்ந்தாய் போற்றி
மகிழ்வினைத் தாராய் போற்றி
மகிழ்வினைத் தாராய் போற்றி

காரையின் நாகநாத
ஊரினில் உவந்தாய் போற்றி!
பாரினில் உயர்ந்தாய் போற்றி!
பாரினில் உயர்ந்தாய் போற்றி!

ஊரணிக் கரையில் அமர்ந்து
ஊரினைக் காப்பாய் போற்றி!
ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி!
ஊழ்வினை தீர்ப்பாய்போற்றி!

சனகாதி முனிவர் போற்றும்
சற்குரு நாதா போற்றி!
சங்கடம் தீர்ப்பாய் போற்றி!
சங்கடம் தீர்ப்பாய் போற்றி!

பாறையில் நீர்சுரக்கும்
ஓரைந்து எழுத்தேபோற்றி!{குருவே நம}
காரையின் கவினே போற்றி!
காரையின் கவினே போற்றி!

கிழமையில் வியாழனன்று
தொழுக நற்பலனே போற்றி!
வளமெலாம் தருவாய் போற்றி!
வளமெலாம் தருவாய் போற்றி!

நெய்யினால் தீபம் ஏற்றி
நின்கழல் பணிவோம் போற்றி!
இன்னலைக் களைவாய் போற்றி!
இன்னலைக் களைவாய் போற்றி!

கொண்டைக் கடலை மாலை
கொண்டணி குருவே போற்றி!
தண்டமிழ் தருவாய் போற்றி !
தண்டமிழ் தருவாய் போற்றி!

மஞ்சளில் பட்டணிவித்தால்
மங்கலம் தருவாய் போற்றி!
பொங்கிடும் அருளே போற்றி!
பொங்கிடும் அருளே போற்றி!

மலரினில் முல்லைப்பூவை
மகிழ்வுடன் ஏற்பாய் போற்றி!
நெகிழவைத் திடுவாய் போற்றி!
நெகிழவைத் திடுவாய் போற்றி!

கன்னியர் மணவாழ் வமைய
எண்ணிய[து] அருள்வாய் போற்றி
தன்னிக ரில்லாய் போற்றி!
தன்னிக ரில்லாய்போற்றி!

கலைகளைக் கைவரக் கற்க
தருநிதிச் செம்மால் போற்றி!
கருணைசெய் கடலே போற்றி!
கருணைசெய் கடலே போற்றி!

வலம்வந்து வணங்கி நின்றால்
வல்வினை தீர்ப்பாய் போற்றி!
வல்லமை தருவாய் போற்றி!
வல்லமை தருவாய் போற்றி!

அரும்பணி ஆற்றத் துணையாய்
விரும்பியே அருள்வாய் போற்றி!
பெரும்புகழ் தருவாய் போற்றி!
பெரும்புகழ் தருவாய் போற்றி!

நினைத்ததை நடத்தி நன்மை
பயக்கவைக் கின்றாய் போற்றி!
வியக்கவைக் கின்றாய் போற்றி
வியக்கவைக் கின்றாய் போற்றி!

பாவினால் உன்னைப் பாட
நாவினில் நின்றாய் போற்றி!
காவியம் ஆனாய் போற்றி!
காவியம் ஆனாய் போற்றி!

நாரணன் முயன்று செய்ய
நல்லருள் தந்தாய் போற்றி!
நலமெலாம் தருவாய் போற்றி!
நலமெலாம் தருவாய் போற்றி!

எட்டுக்கண்ணும் விட்டெரிக்கும் செட்டிநாட்டுச் சாப்பாடு!

பாசிப்பருப்பு மசியலுக்கு
பக்குவமாய் உப்பிட்டு
உருக்கி நெய் ஊத்தி
சீரகமும் பூண்டும் அதில
சிக்கனமாத் தட்டிப்போட்டு
கருவேப்பிலை கிள்ளிப் போட்டு
கடைஞ்சு வச்சா சாப்பாடு..ஆஹா!
முறுக்கா ஆரம்பிக்கும்!
முதல்ருசியே மூக்கை இழுக்கும்!!

அம்மியில்லாத ஆச்சிவீடு உண்டா?!

அம்மியில அரச்சுப்போட்டு
ஆச்சிவச்ச கறிக்குழம்பு
கம்மியாவே இருந்தாலும்
களிப்பூட்டும் ருசியிருக்கும்!
பலாக்காயில பருப்புப்போட்டு
கூட்டுக் கறிவச்சா....
ஆட்டுக் கறிகூட
அதுக்குஇணையில்லையப்பா!
அவரைக்காய் இளங்குழம்பு
அதுக்கு ஒரு தனி ரெசிபி{பக்குவம்}
 சீரகமும் கசகசாவும்
பூண்டும்வச்சு அம்மியில
புதுசாத்தட்டிப் போட்டு..
ஆஹா..
இதுவல்லோ இளங்குழம்பு!
புடலங்காய்த் துவட்டலுக்கு
துவரம்பருப்பு அரைவேக்காட்டில்!
அடடா! அதுவொருசுவை!
பலகாய் போட்டு ஒரு மண்டிவைப்பார்!
உலகமெலாம் விரும்புகின்ற
உருசியான மண்டியப்பா!
பறங்கிக்காய் புளிக்கறியும்
பக்குவமாய்க் கருணையிலே
படுருசியாய் மசியலும்
இங்கிலீசு கய்கறியில்
இதமாகக் காரமிட்டு
பிரட்டல் வைப்பார்கள்
பிடித்தபடி சாப்பிடலாம்!
அமிர்தத்தைப் போல
அரிசிப் பரமான்னம்!
அப்பளமும் பொரிச்சுவைப்பார்
அதுவல்லோ ஆனந்தம்!

வத்தல் வகை

வத்தலிலே வகைவகையாய்
வறுத்து வைப்பார்கள்!
கிள்ளிக்கிள்ளிக் காயவைத்த
கிள்ளுவத்தல்!
வத்தக்குழலில் பிழிஞ்சுவச்ச
தேங்குழ வத்தல்
வண்ணம்கலந்து காயவைத்த
ரொசாப்பூ வத்தல்!
துணியில் ஊத்திக் காயவைத்த
கேப்பை வத்தல்!
மோருக்குள்ள போட்டுவச்ச
மொளகாவத்தல்! சுண்டவத்தல்!
பலகாயும் மோருக்குள்ள
பக்குவமாப் போட்டுவச்ச
காய்கறிவத்தல்!

பலகார வகையும் தொட்டுக்கொள்ளுவதும்!




வெள்ளைப் பணியாரத்துக்கு
வரமிளகாய்த் துவையல்!
மசாலைப் பணியாரத்துக்கு
கதம்பத் துவையல்!
உளுந்தவடை சுட்டாக்க
தேங்காய்ச் சட்டினி!
மசால்வடை சுட்டாக்க
இஞ்சி சேத்த சட்டினி!
பொங்கல் போட்டாக்க
முருங்கைக்காய் சாம்பார்!
இடியாப்பம் செஞ்சாக்க
கத்தரிக்காய் கோசமல்லி!
ரவா உப்புமாவுக்கு
பாசிப்பருப்பு பச்சடி!
அடைத்தோசை சுட்டாக்க
பொரிச்சுக்கொட்டித் துவையல்!
இளந்தோசை சுட்டாக்க
வெங்காயக் கோசு!
அஞ்சரிசித் தோசைக்கு
வெங்காயம் பூண்டுவச்சு
தேங்காய்த் துவையல்
ஊத்தப்பம் தொட்டுக்க
துவரம்பருப்பு சட்டினி!
அரிசி உப்புமாவுக்கு
அரைச்ச மல்லித்துவையல்!
பூரிக்கு கிழங்கு!
சப்பாத்திக்கு குருமா!
இட்டலிக்கு டாங்கரு!
சும்மா குளம்பும் வைக்கலாம்!
புளிமிளகாய் கரைக்கலாம்!!

இனிப்பு வகை

கருப்பட்டியும் நெய்யும்சேத்த
ஆடிக்கூழு கும்மாயம்!
தேடிவாங்கிச்சாப்பிடலாம்
திகட்டாத பலகாரம்


வெல்லம்போட்டு ஏலம்சேத்து
ஆட்டிச்சுட்ட கந்தரப்பம்
இனிப்புச்சீயம்!
தேங்காய்திருவி நெய்போட்டு
வேகவச்ச கவுனரிசி!
பசங்கவிரும்பிச் சாப்பிடுற
பால்பணியார மாவு
பக்குவமா அரைக்கலைன்னா
படபடன்னு வெடிச்சிரும்!
ரெங்கூன்புட்டு சாப்பிட்டதும்[மனசு]
ரெக்கை கட்டிப்பறக்கும்!
உக்காரை ருசியில
ஒலகமே மறந்துரும்!
கருப்பட்டிப் பணியாரம்
விருப்பம்போல சாப்பிடலாம்!
குருவை அரிசிப் பணியாரம்
குசியாகச் சாப்பிடலாம்!
முகம் மலர வரவேற்று
மூச்சுமுட்ட அன்னமிடும்
நகரத்தார் பண்பாட்டை
நாடே வியந்தறியும்!

Tuesday, November 2, 2010

தேவகோட்டை வெள்ளிக்கிழமை சாமிவீட்டு லெட்சுமிஆத்தா

          ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்
          ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்
வெள்ளிக் கிழமையுன் வீடுதனை மெழுகியே
        விளக்கேற்றி வைத்து வருவார்
துள்ளிவரும் வேல்போல துயர்துடைக்க வந்திடும்
          துணையாக நீ இருப்பாய்!
மல்லிகை முல்லையுடன் மலரெல்லாம் சூட்டியுன்
         மலர்ப்பாதம் பணிந்துநிற்பார்
கல்லிதயம் கொண்டாரைக் கனிவாக மனம்மாற்றிக்
             காவலாய் நீ இருப்பாய்!
கள்ளிருக்கும் பூவிலே கண்மயங்கும் வண்டாக
            களிப்போடு பார்த்திருப்போம்
அள்ளிக்கொடுக்கின்ற அன்பாலே உனைநாங்கள்
             ஆசையுடன் நாடிவந்தோம்
உள்ளத்தில் இருத்தியே உறவுகள் மேம்பட
            உன்னருள் வேண்டிநின்றோம்
வெள்ளமென அருள்பொழிந்து வியக்கவே வைக்கிறாய்
             லெட்சுமி ஆத்தாஉமையே!
      ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்
      ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்

இறையருளால் ஆக்கம்
திருமதி முத்துக்கருப்பாயி சபாரெத்தினம்
                                                  காரைக்குடி

Monday, November 1, 2010

நெஞ்சை உருக்கிய அஞ்சுநொடி!

கொஞ்சுமொழி தனைமறந்து கொட்டுகின்ற கண்ணீரில்
பிஞ்சுமதி முகங்களெல்லாம் பேச்சின்றித் தவிக்கவைத்து
நெஞ்சை உருக்குகின்ற நீண்டவான் பயணத்தை
அஞ்சு நொடிகளிலே ஆக்கிவைத்த பூகம்பம்!
தாய்க்குக் கோபமென்றால் தன்குழந்தை என்செய்யும்?
பேய்க்கும் இரக்கம்தரும் பேரழிவு வந்ததனால்
பாய்க்கும் பருகுதற்கும் பசியேற்கும் உணவுக்கும்
போய்க்கெஞ்சும் நிலைமைக்குப் போய்விட்ட மனிதர்கள்!

பூகம்பத்தின் பாதிப்புகளைப் பார்த்து
என்மனதில் ஏற்பட்டவடுக்கள்
இன்னும் ஆறவேஇல்லை!
மனித வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை
எல்லோரும் உணரவேண்டும்.மானிடப்பிறவி
கிடைத்தற்கரியதல்லவா!


தம்மால் முடியுமென்று தந்தவள்ளல் அழகப்ப
எம்மான் பேர்விளங்கும் எழில்காரை மாநகரம்!
நம்பிக்கை கொண்டவர்கள் நலமுயர்த்தும் காரையிலே
செம்மாந்து நிற்கின்ற செல்வநிறை மக்களெல்லாம்
அம்மாவாய் அப்பாவாய் அருமையுள்ள சோதரராய்
தம்பியராய்த் தங்கையராய்த் தாமாக உதவிநின்றோம்!

குஜராத் பூகம்பத்தின்போது எழுதியது

Friday, October 29, 2010

சிங்கை முருகன் பாடல்.

சிங்கையிலே கோவில்கொண்ட சிவன்மகனே முருகையா
பொங்கிவரும் காவிரிபோல் மங்காதபுகழ் சேர்த்தாய்!
எங்கையா உன்திருவை என்றுவந்து காண்பதென்று
தங்கமகன் தனைக்காண தவித்திருந்தேன் வெகுநாளாய்!

இங்கேவா என்றழைத்து எழிற்கோலம் காட்டிவிட்டாய்!
அங்கமெல்லாம் புல்லரிக்க அழகாஉனைப் பார்த்துவிட்டேன்!
சங்கெடுத்து ஊதுகையில் சதிராடிவரும் தமிழாய்
அங்கமெல்லாம் புல்லரிக்க அழகாஉனைப் பார்த்துவிட்டேன்!

மாப்போட்டு வெல்லமிட்டு மாவிளக்கும் ஏற்றிவைத்து
பூப்போட்டுப் பணிந்தவர்க்குப் புத்திரரும் மிகத்தருவாய்!
நாப்பாடும் பாட்டெல்லாம் நல்லதமிழ்ச் சொல்லெடுத்து
எப்போதும் பாடிவர எம்குலத்தைக் காத்தருள்வாய்!

பாலமிட்ட அன்பாலே பாடியுனைத் துதிக்கின்றோம்!
ஏலமிட்ட பாயசம்போல் இதயத்தை நனைக்கின்றாய்!
காலமெல்லாம் உனைத்துதித்து களிப்புமிகக் கொண்டோமையா!
நாளெல்லாம் திருநாளாய் நன்றாகத் தந்துவைத்தாய்!

காவடிகள் கொண்டுவந்துன் காலடியில் சேர்த்தவர்க்கு
சேவடிகள் காட்டிநின்றாய் செட்டிமக்கள் புகழ்சேர்த்தார்!
பாவடிகள் பாடிவந்தோம் பாசத்தைக் காட்டுமையா!
பூவடிகள் போற்றிநின்றோம் புண்ணியங்கள் தாருமையா!

இறையருளால் ஆக்கம் திருமதி முத்துசபாரத்தினம்.
                                                                             காரைக்குடி.

நான் இதுவரை சிங்கப்பூரோ மலேசியவோ பார்த்ததே இல்லை.முகப்புத்தகத்தில் பஜனை சாங்ஸ்ல் பார்த்ததும்
எழுதத்தோன்றியது. எல்லாம் இறையருளால்!
                                                                 நல்லது.

Thursday, October 28, 2010

முகம்

அகம்வலிக்கப் பிறந்த
அன்புக் குழந்தைக்கு
முகம் பார்க்கும்
கலையைத்தான்
முதலில் பயிற்றுவிப்போம்!
அன்னை முகம்தவிர
அடுத்தமுகம் கண்டால்
கண்ணை உருட்டிக்
கடைவாயைப் பிதுக்கி அழும்
களங்கமில்லாக் குழந்தைமுகம்
பேசத்துவங்கும் குழந்தையின்
தேன்சிந்தும் சிந்தூரமுகம்!
சேதிகள் சொலும்
செந்தமிழ் முகம்!
சாதிக்கின்ற சாந்தமுகம்!
கம்பீரத்தில் சிங்கமுகம்!
சிரிக்கும்போது சிங்காரமுகம்!
கருணை காட்டும்
கனிந்த முகம்!
கருத்த முகம்
களையான முகம்!
சொந்தம் விரும்பும்
சூரிய முகம்!
எந்திரன் காட்டும்
இந்திர முகம்!!
பற்றுக் கொண்டதால்
பழகிய முகம்!
கற்றுக் கொண்ட
கவிதை முகம்!
புதியவர் எல்லாம்
பொதுவாக்கிப்
புதுயுகப் புத்தகம்
காட்டும் முகம்!
முகப்புத்தகத்தில்
நுழைந்து நுழைந்து
மற்றவையெல்லாம்
மறந்தமுகம்!
சேரன் சுருக்கிச்
சொன்ன முகம்!
சிந்தனையாலே
பிறந்த முகம்!

Wednesday, October 27, 2010

என்னரிய மழலையரே!

வெந்தமனம் வெல்வதற்கு
வேறுவழி தேடுகையில்
நந்தவனம் தொட்டுவந்து
நடனமிடும் பூங்காற்று

இந்தமனம் இளைப்பாற
இரும்புருக்கும் இளங்குரலில்
தந்தனத்தாம் பாடிவரும்
தெள்ளுதமிழ்க் கள்ளூற்று!

மந்திர விழியாலே
மௌனத்தின் மனங்கவர்ந்து
சுந்தர மொழிபேசிச்
சொக்கவைக்கும் தோகைமயில்!

பந்தலிட்டுப் பூப்பூத்துப்
பக்குவமாய்க் கனிவதற்கு
சொந்தமெனப் படர்ந்துவந்து
சுகமாக்கும் தளிர்க்கொடி!

சந்தங்கள் சதிராடிச்
சங்கீதம் இசைத்துவரச்
சந்தனத்தில் நிறமெடுத்துச்
சங்கமிக்கும் பொன்னருவி!

பொன்னருவிப் பெருக்கைப்போல்
பூந்தமிழாய்ச் சிரித்திருக்கும்
என்னரிய மழலையரே!
ஏற்றமுடன் வாழியரே!!

இதுஎழுதி ஆச்சுஒரு இருவத்தியேழு வருசம்!

சின்னஞ் சிறுமலர்
சிக்கெனப் பூத்ததுபோல்
பொக்கை வாய் திறந்து
பக்கெனச் சிரித்திடுவாய்
பக்கத்தில் வந்தாலோ
படக்கெனெக் கைதூக்கி
ஒக்கலில் அமர்ந்து
பதவிசாய்க் குனிந்து
பாதங்கள் தங்கள் அணிகளை
அணிகிறதா என்று....
ஆவலுடன் பார்ப்பாய்!
அணிந்தாலோ....
அழகிய மலர்கள்
தென்றல் காற்றில்
மாறிமாறி ஆடுவதுபோல்
கைமலர் விரித்துக்
கனிந்த முகமலர்காட்டுவாய்!
அது....
இன்னும் என் கண்ணில்
நிற்கிறது..
கண்ணே அல்ர்மேலு
காணவேண்டும் உன்னை!
நிருத்தியம் காட்டும்
நின்கை மலர்கள்
அவை உன் ஒருத்திக்கே சொந்தம்!
அரிசிப் பல்காட்டி
அலர்மேலு சிரிப்பதை
அத்தை காணவேண்டும்!
முத்தங்கள் ஒருகோடி
நிறுத்தாமல் தரவேண்டும்!
தேன்சிந்தும் உந்தன்
சிந்தூரப் புன்னகையும்
மான்கொஞ்சும் விழியழகும்
நான்வந்து காணவேண்டும்!
ஆசைகள் மிகநிறைய....
உடனே முடிகிறதா?
பாவிகள்
தடைகள் எத்தனைதான்
இடையில் விதிக்கின்றார்...
பாஸ்போர்ட்டாம்!
 விசாவாம்!!
பலமணிப் பயணமாம்!!!
என் இதயத்தின்
இறக்கை கட்டிய வேகத்தோடு
போட்டிபோட முடியாதவர்கள்!
போகட்டும்
அவர்களை மன்னிக்கிறேன்!
அவர்கள் விதிப்படி
உன்னைக் காணவேண்டுமெனில்
பல ஆயிரங்கள்
பணம் வேண்டும்.
அதை.....(சே)
நிறைய சேர்த்து
பிறகு.....
தடையின்றி உன்னைக்காண
உன்மலர்ப் பாதம் பட்டதால்
உயர்ந்த அந்த நாட்டுக்கு
நான் வருவேன்
நிச்சயம் ஒருமுறை!

இது எழுதி ஆச்சு ஒரு இருவத்தியேழு வருசம்!











Friday, October 22, 2010

மகன்வீட்டுப் பேத்தி

குட்டிக் குட்டி நந்தவனம்
குடைபிடித்து வந்ததுவோ!
சுட்டிசெய்யும் சுறுறுப்பு
சுந்தரமாய் மலர்ந்ததுவோ!
சொர்க்கம் காட்டும் புன்னகையே
சொந்தமாக்கிக் கொண்டதுவோ!
நர்த்தனம்தான் நளினமோ
நடையழகாய் வந்ததுவோ!
மெட்டிநடை ஓசைகேட்டு
மென்னகையைக் கூட்டியதோ!
பட்டுச்சேலை சத்தம்கேட்டு
பரவசமாய்த் திரும்பிப்பார்த்து
பக்கம் வந்து அம்மாவின்
பக்குவத்தில் வளர்ந்ததுவோ!
முத்துமுத்துப் பாப்பா நீ
முழுநிலவின் குளிர் ஒளியே!
முத்துநகை சூடிய உன்
முகம்காட்டி வந்திடுக!
சத்தமின்றி ஓடிவந்து
முத்தம் ஒன்று தந்திடுக!

பேரன் பேத்திகள் என்றாலே எல்லோருக்கும் ஓவியம்தானே!

என்னங்க நாஞ்சொல்றது?!  
                  
மகள் வீட்டுப் பேரன் சபா ஆறுமாதக்குழந்தையாக இருந்தபோது


சின்னதாய் இங்கே
சிரிக்கும் வசந்தம்
சிந்தையுள் வெல்லப்பாகாய்
சிந்திக் குவித்தது கொஞ்சம்
கன்னக் குழிவினில் கொஞ்சும்
கனிவால் நிறைந்தது நெஞ்சம்
முத்தமிழ்ச் சோலைக்குள்ளே
பூத்த முகமலர் கண்டேன்
செந்தமிழ்ச் சிரிப்பால்
எந்தன் சிந்தையில்
நிறைந்தாய் வாழி!

ஒற்றுமையே உயர்வினைத்தரும்

ஒருவரைப் பற்றி ஒருவர் நன்கு புரிந்துகொள்ளுதலே முதலில் முக்கியம்.
பிறகு மற்றவர் நம் எண்ணங்களுக்கு ஒத்துவருவார்களா என்பதை முயற்சி
செய்து பார்க்கவேண்டும். முடியவில்லை என்றால் நம்மால் அவர்களுடன் ஒத்துப்போகமுடியுமா என்று பார்க்க வேண்டும்.அப்போது நம்மால் சிலசெயல்களைப் பொறுத்துக்கொள்ளமுடியாதபோது நம்எண்ணங்கள்மூலம்
மனதில் நல்லவற்றையே எண்ணி அவர்கள் நல்லவராக வேண்டும் என்று மனதில் திரும்பத்திரும்ப எண்ணிவந்தால் எல்லோருமே ஒற்றுமையாக
வாழ்ந்து உயர்வடையலாம்.நம் எண்ணங்களில் உறுதியாக இருந்தால் எந்தசெயலிலும் வெற்றியடையலாம்.அறிவியல் ஆய்வாளர்களும்கூட
உறுதிப்படுத்திக் கூறியுள்ளனர்.

இதுதான் மனிதருக்கும் மற்றவைக்கும் மாற்றமுள்ளவேறுபாடு.!
இதுதான் சான்றோர் சாற்றிய சத்தியம்!
உண்ர்ந்தோர் உரைத்த உண்மைகள்!
நாமும் உணர்ந்தால் நமக்கு நன்மைகள்!

நல்லதே நினைப்போம்
நல்லதே சொல்லுவோம்
நல்லதே செய்வோம்
நல்லதே நடக்கும்!

Wednesday, October 20, 2010

ஆயாள் வீட்டின் காயா நினைவுகள்

இவையெல்லாம் நான் 1992ல் எழுதியது
எங்கள் ஆயாள் வயதாகிவிட்டதன் காரணமாக என் தாய்வீட்டில்
இருந்ததாலும் அம்மான்வீடு எங்களையெல்லாம் விடாமல் கூப்பிடுவார்கள்.நாங்களும் சென்றுவருவோம். இந்த இனிய நினைவுகள்
எல்லோருக்கும் இருக்கும். இதைப்பகிர்ந்துகொள்ள எனக்குக் கணினியைக்
கற்றுத்தந்து என் குழந்தைகள் எனக்குவாய்ப்பளித்துவிட்டார்கள். இனிவரும்
காலங்களில் வேறு என்னமாதிரி கல்வி வளர்ச்சியடையப்போகிறதோ தெரியவில்லை. நீங்களும் கற்றுக்கொள்ளத் தயாராகுங்கள்!
                             அன்புடன் சும்மாவின் அம்மா.          

ஆயாள் வீட்டின் காயா நினைவுகள்
புள்ளி மான்போல்
துள்ளி விளையாண்ட
கொல்லை வாசல்
குவித்திடும் நினைவுகள்
முற்றம் முழுதும்
மெத்தை விரித்த
முருங்கைப் பூக்கள்
பருப்புப் போட்ட
பக்குவத் துவட்டல்
ஆயாள் கையால்
இருப்புச் சட்டியில்
இன்னிசை பாடும்!
இன்றும் நினைத்தால்
எச்சில் ஊறும்!!
கொட்டில் மாடும்
கத்தும் கன்றும்
எட்டாத் தொலைவில்
இருக்குது இன்று!
அவரைப் பந்தல்
அதற்கொரு சங்கு
அதிகாலை எழுந்து
ஆயாள் ஊதும்
அழகே நன்று!
மோரில் குளித்து
தடுக்கில் தவழ்ந்து
வெயிலில் காயும்
மிளகாய்கள்!
வத்தல் போட்ட
மூக்கு மாங்காய்
வாரித் தின்றபின்
வலிக்கும் வயிறு
வளவில் ஆடிட
வாகான ஊஞ்சல்
அளவில்லாத
ஆனந்தம் கூடும்!
வங்காள அண்டாவில்
வந்துவிழும் மழைத்தண்ணி
தூப்பாயை அடைத்துவைத்து
துணிதுவைக்க நீர்கட்டி
மழைபேஞ்சா வளவோடு
வாருங்கோல் விளையாடும்!
பளபளக்கும் பட்டாலைப்
பட்டியக் கல் அழகும்!
பர்மாப்பாய் விரித்த அழகும்
பார்த்தாலே மனம்நிறையும்!
சிறுகுறும்பு செய்கின்ற
சின்னக் குழந்தைகூட
பொட்டிமேசை முன்னாலே
வட்டிக் கணக்கெழுதி
அட்டணக்கால் போட்டு
அசையாமல் நிமிர்ந்திருக்கும்
வீரப்ப அம்மானின்
விழிகண்டால் வாய்பொத்தும்!
அடுக்கடுக்காய் அதிரேசம்
மனகோலம் மாவுருண்டை
எடுக்க எடுக்கக் குறையாத
எண்ணில்லாத பலகாரங்கள்
எறும்புக்கு வேலியிட்டு
விளக்கெண்ணெய்த் துணிசுற்றிய
வெண்கலப் பானையில்!
ஓட்டில் வறுத்துத்
திருகையில் திரித்த
வேங்கரிசி மாவு!
அரிசிமாவில் அதிசயம் காட்டும்
மொறுமொறுப்பான 
ஜிலேபி முறுக்குகள்
பாசியில் பின்னிய
ஓவியம் காட்டும்
ஓலைக் கொட்டான்
சித்திரை வெயிலின்
சிந்தும் வியர்வையில்
சத்தகம் கையில்
சதிராடி நின்று
பொத்திய பொட்டிகள்!
குத்திய புளிகள்!!
வண்ணம் பின்னிய
பாய்கள் தடுக்குகள்!
வளவளப்பான
வாருங்கோல்கள்!!
ஆயாள் கைவண்ணம்
அழகாய் மின்னும்!
சின்ன அம்மான்
சிரித்த முகம்போல்
விரித்த இலையில்
விளையும் அன்னம்!
பெரிய அம்மான்
பெண்டிர் கையால்
பிசைந்து ஊட்டும்
அரிய நினைவுகள்
அமுதக் காட்சிகள்!
சர்க்கரைக் கரைசலில்
சத்து மாவுடன்
தட்டானின் தங்கம்போல்
கொட்டானில் தேங்குழலுடன்
மூணரை மணிக்கு
தினமும் காப்பி!
நாலரை மணிக்கு
நற்சிவன் கோவில்!
ஏழரை மணிக்கு
இரவு உணவுபின் இனியநித்திரை!
காலைமுதலாய் இரவுவரையில்
வேலைகள் எல்லாம் விதிப்படி நடக்கும்!
ஆயாள்வீட்டின் அழகியநினைவுகள்!
காயாநினைவுகள் கட்டும் நினைவுகள்!

சித்திரைச் செவ்வாய்த் திருவிழா

தென்னம் பாளையின்
தேன்மதுக் குடங்கள்!
சித்திரச் சட்டியில்
சிரிக்கும் முளைப்பாரி!
பால்குடம் காவடி
அக்கினிச் சட்டி!
பார்த்த முகங்கள்
பழகிய நண்பர்கள்!
கூத்தாடி மகிழும்
ஆத்தாளின் அம்பலத்தில்
சேர்ந்து கூடி மகிழ்கின்ற
சித்திரையின் திருநாளில்
கூத்தில் நடக்கின்ற
வள்ளி திருமணத்தின்
வாய்ஜாலக் கலகலப்பும்
அள்ளிவைத்து மடியினிலே
அழகுமழலையர்க்கு
அழகான பெயர்சூட்டி
ஆயுசு நூறு என்று
சந்திரமதி தாலாட்டும்
அரிச்சந்திரா நாடகமும்
சிந்தும் நினைவுகளில்
சிக்கவைத்துப் பார்க்கிறது!
தொட்டில் கட்டிய
கரும்புத் துண்டினை
வெட்டித் தின்ன
விளையும் ஆசைகள்!
பத்துப் பைசா
பஞ்சு மிட்டாய்கள்!
நுகத்தடி இல்லா
நுங்கு வண்டிகள்!
அகத்தில் ஆடும்
ஆயிரம் நினைவுகள்!
நொடிக்கொரு தடவை
வெடிக்கும் கனவுகள்!!
துடிக்கும் நெஞ்சில்
துள்ளும் நினைவுகள்!

   ஆராவயல் வீரமாகாளி அம்மன்


சித்திரைச் செவ்வாயில் திருவிழா நடக்குமே
     சிங்காரக் கொலுவிருப்பாய்!
எத்திக்கி லிருந்தாலும் எழிற்கோலம் காணவே
     எல்லோரும் ஓடிவருவார்!
வேண்டிவரம் கேட்டவர்க்கு விளையடப் பிள்ளையும்
     விரும்பியதும் தந்தருள்வாய்!
ஆண்டியென உள்ளவரும் அடிபணிந்து ஏத்தவே
     அழியாத பொருள்தருவாய்!
மழலையர்க்குத் தொட்டில்கட்டி மகிழ்வோடு பொங்கலிட்டு
       மாவிளக்கும் ஏற்றிவைப்பார்
மாவாலே களிக்கிண்டி மக்களுக்குப் பகிர்ந்தளிக்க
     நோகாமல் நோய்கள் தீர்ப்பாய்!
பால்குடங்கள் காவடிகள் முளைப்பாரி தீச்சட்டி
      பாதத்தில் சேர்க்கவருவார்
வேல்கொண்டு துன்பங்கள் விரைந்தோட வைப்பாயே
      வீரமாகாளி உமையே!

இறையருளால் ஆக்கம் திருமதிமுத்துசபாரத்தினம்

   திருவிழாவுக்கு ஒவ்வொரு ஆண்டும் மறக்காமல் அழைத்து
   விருந்திடுவார்கள் எங்களது ஆயாள் வீட்டில்

                              
உருக்கிய நெய்யால் மெருகூட்டி
பருப்பு மசியல் பால்கூட்டு                                  
முருங்கைக் காய்கள்
மூழ்கிய சாம்பார்!
எண்ணையில் குளித்து
மிளகில் புரண்டு
மினுக்கும் முட்டைகள்!
தொண்டை ருசியைத்
தூண்டும் விதத்தில்
வெண்டைக் காயில்
ஒரு மண்டி!
தேன்போல் இனிப்பும்
திகட்டாப் புளிப்பும்
மாங்காய்ப் பச்சடி
மணக்குது ஜோராய்!
வாழைக் காயில்
வண்ணப் பொரியல்!
ருசிக்கும் ரசமும்
ரசிக்கும் அப்பளமும்
பசிக்கு ருசிக்கும்
பக்க மேளமாய்!
வெல்லப் பாகில்
விந்தை புரிந்து
முந்திரி கிஸ்மிஸ்
முகிழ்த்திடும் அழகில்
தேங்காய்ப் பாலுடன்
திமிறும் பாயசம்!
அன்பின் மிக்கார்
அழைத்தார் வந்தோம்
அம்மான்கள் வீட்டில்
அறுசுவை உணவு!
காளி அம்மனைக்
கண்சிறை பூட்டி
பால்குடம் காவடி
அக்கினிச் சட்டி
பார்த்து மகிழ்ந்தோம்
உண்டு நிறைந்தோம்!
தொடர்ந்து வருவோம்
தொல்லையில் அன்பு!
தொடரட்டும் இங்கு!
வாரோம் நன்று!!
வாழிய நீவிர்!!!


Sunday, October 17, 2010

சரஸ்வதி பாடலும் சரஸ்வதியின் வேறுபெயர்களும்




16-10-2010 தினமலர் நாளிதழில் வெளிவந்தது 

மயிலே மடப்பிடியே கொடியே இளமான் பிணையே
குயிலே பசுங்கிளியேஅன்னமே மனக்கூர் இருளுக்கோர்
வெயிலே நிலவெழு மேனிமின்னே இனி வேறு தவம்
பயிலேன் மகிழ்ந்து பணிவேன் உனது பொற்பாதங்களே!
-    கம்பர்
                                                                                                                    
சரஸ்வதி கல்விப்பயிர் வளர்ப்பவள்
குமரகுருபரர் சரஸ்வதிமீது பாடியது சகலகலாவல்லி மாலை.
ஆதிசங்கரர் சிருங்கேரியில் உருவாக்கிய சரஸ்வதி சாரதாம்பாள்.
மணிமேகலை காப்பியம் சரஸ்வதியை சிந்தாதேவி என்று குறிப்பிடுகிறது.
ஞானபீடம் பரிசில் இடம்பெறும் சின்னம் வாக்தேவி.
சரஸ்வதிக்குரிய திதி நவமி திதி.
சரஸ்வதிக்குரிய மலர் வெண்தாமரை
சரஸ்வதிக்குரிய வாகனங்கள் அன்னம் மயில்

வேறு பெயர்கள்
கலை மகள்
நாமகள்
பாரதி
வாணி
இசைமடந்தை
ஞானவடிவு
பனுவலாட்டி
ப்ராஹ்மி
பூரவாகினி
அயன் மனைவி
வெண்தாமரையாள்
சாவித்ரி
வேதவல்லி
கலையரசி
நாவுக்கரசி
ஞானப்பூங்கொடி
வித்யா சரஸ்வதி
கலை ஓதும் மலர்மாது
கலைக்கொடி
கலை ஞானத்தோகை
கலை ஞானவல்லி
கலை ஞானாம்பிகை
கலை மடந்தை
கலைமான்
கலைப் பெருமாட்டி
கலை மின்னாள்
கலையணங்கு

கலையம்மா
கலாராணி
கலாசுந்தரி
கலைவாணி
கலைச்செல்வி
கமலவல்லி
வெண்கமல நாயகி
வெண்டாமரைச் செல்வி
வெண்கமல பனுவலாட்சி
வீணை வித்யாம்பிகை
ஆயகலைப் பாவை
கலைமகளைவழிபடுவோர் நவமி நாளிலோ அல்லது
மூலநட்சத்திரத்தன்றோ வழிபாடு செய்வது சிறப்பு
புரட்டாசி நவமி சரஸ்வதிக்குரிய மகாநவமி
                                                                    
இந்தப் புரட்டாசி நவமி அனைவருக்கும் சிறப்பாக இருக்கும்
என்ன சரஸ்வதி பற்றிய செய்திகளைப் படித்தாச்சா
இனிநாள் தோறும் சரஸ்வதியை வணங்கி உங்கள் வேலைகளைத்
துவங்குங்கள்.
                                                                                     நன்றி வணக்கம்.


இதுவரை எனக்குச் சரஸ்வதியைப்பற்றித் தெரியாதுஇருந்த சிலசெய்திகளைத் தினமலரில் பார்த்தவுடன் பகிர்ந்துகொள்ளத் தோன்றியது .





Related Posts Plugin for WordPress, Blogger...