Saturday, October 29, 2011

யாதுமாய்!

பட்டம் வாங்குதற்குப் பணிசெவதில்லையிவர் [துன்பப்]
பட்டவர்க்கு உதவுகின்ற பரந்தமனப் பண்பாளர்!
கிட்டும்வண்ணம் நன்மையெலாம் கேண்மையுடன் செய்திடுவார்
தொட்டதெல்லாம் பொன்னாகும் தூயமனச் செம்மலிவர்!

வங்கியிலே போட்டுவைத்து வளர்நிதியம் போதுமென்பார்!
பொங்கிவரும் செல்வத்தில் பொருளில்லார்க் கெனக்கொஞ்சம்
கங்கையெனப் பெருகிவர களிப்போடு தந்திடுவார்!
மங்கலங்கள் சேர்கஎன மனமார வாழ்த்திடுவார்!

கோவில்திருப் பணிசெய்யக் கொண்டுவந்து தந்தவர்கள்
வாழ்வில்கருப் பனின்கையால் வல்லருள்பெற் றுய்யவென
யார்க்கெனவும் வேண்டிநிற்பார் யாதுமாய் வருகஎன்று
நார்இழையும் நன்மலராய் நலம்பெருக வேண்டிநிற்பார்!

நற்குழந்தை கல்விக்கும் நலிந்தவர்க்கும் சிறிதுதவி
பெற்றவர்கள் மனம்மகிழப் பிரியமுடன் பேசிடுவார்!
தற்புகழ்ச்சி கொள்ளாத தனிப்பெருந் தகையாளர்!
சொற்புகழ்ச்சி வேண்டாத சொக்கத் தங்கமிவர்!

பெற்றவர்க்குப் பெருமகனாய்ப் பெருமையுறப் பேணியிட்டார்!
உற்றவர்க்கு உறுதுணையாய் உளமகிழப் பணிசெய்தார்!
நற்றவத்தால் பெற்றமகன் நலமுறவே வாழவேண்டி
பெற்றவர்கள் வாழ்த்திடவே பிறந்திட்டார் வாழியவே!


Wednesday, October 26, 2011

தீபாவளி.

அதிகாலை இரண்டுமணி
அவசரமாய் எழுந்துவந்து
அரிசிபருப்பு ஊறவச்சு
வெரசாப் பல்லுவெளக்கி
வெறகடுப்பப் பத்தவச்சு
வேகமாப் பருப்பெடுத்து
வெஞ்சனச்சட்டியில
வேகவச்சுட்டு
வெங்காயம் உரிச்சுவச்சுட்டு
வரமொளகா தொவையலறச்சு
பணியார மாவறச்சு [அந்தக்காலத்துல கையால
                                                                         ஆட்டுக்கல்லுலஅறைக்கிறது]
பக்குவமா ஊத்திப்புட்டு
கல்கண்டு வடைக்கும்அறைச்சுக்கிட்டு
சாம்பாரையும் வச்சுக்கிட்டு
பாலுக்காரர் வந்ததும்
காப்பிபோட்டுக் குடிச்சுப்பிட்டு
வென்னீரப் போட்டுவச்சு
பிள்ளைகள உசுப்பிவிட்டு
எண்ணதேச்சுக் குளிக்கறதுக்குள்ள
ஆத்தா ஒண்ணு -------[அம்மா]
ஒண்ணே ஒண்ணு தாங்கஆத்தா
தந்தியண்ணா சீக்கிரமா
குளிச்சுப்பிட்டு வாரனாத்தா.
ஆத்தா ஆத்தான்னு
குளிக்கவைக்க ரொம்பப்பாடு!
புதுத்துணியப் போட்டுக்கிட்டு
சமிகும்பிட்டு கோவில்போறதுக்குள்ள
பக்கத்துவீட்டுப் பசங்களோட
உடையழகப் பகுந்துக்கிட்டுக்
கோவில்போயிவந்த ஒடன
பலகாரஞ்சாப்பிட்டதும்
வெடியவெடிக்க ஓடிப்போயி
அங்கஒரு சின்னச்சண்டைபோடுக்கிட்டு
சண்டைபோடாம வெடிங்கப்பான்னு
சொன்னவார்த்தைக்கு கட்டுப்பட்டு
எப்போதும் எங்களுக்கு
தொந்தரவே கொடுக்காமல்
வளந்தபிறகு வருசத்துக்கு
ஒவ்வொரு பிள்ளையா
கல்லூரிக்கு போயிவந்து
வேலைக்கும்போன பிறகு
கலியாணம் முடிஞ்சகையோட
தனிக்குடித்தனமும் வச்சுப்பிட்டு
ஐயாவைப் பாத்துக்கிட்டு
ஆபீசுக்கு போயிவந்துக்கிட்டு இருக்கயில
ஐயாவின் காலம்முடிஞ்சு
அவுகளும் போனபின்னால
அப்பாவுக்கும் பணிஓய்வு!
இனிமேல என்னபண்ண?
ஒண்ணுமே புரியலயேனு
சோந்துபோயி இருக்கயில
ஐயனாரு கோயில
கும்பாபிசேகம்பண்ண
வேலபோட்டுக் குடுத்தாரு ஐயனாரு!
வெறும்பொழுதாப் போக்காம
வெலையில்லாப் பணியாச்சு!
கும்பபிசேகம் முடிஞ்சதும்.
புரவியெடுப்பு வேலஒண்ணப்
புதுசாகக் கொடுத்தாரு!
அதுமுடிஞ்சு வாரதுக்குள்ள
நகரச் சிவன்கோவில்
மேல்பார்க்கும்நற்பணியை
நம்சிவனார் தந்துவிட்டார்!
இடையிடையே பஞ்சாயத்தும்
முடிஞ்சவரை மற்றவர்க்கு
முகங்கோணா உதவிகளும்!
இனியென்ன வாழ்க்கையிலே?
இப்படியே இருந்துவிட்டு சிவன்
பொற்பாதம் தனைக்காண
முற்றோதல் செய்திடுவோம்!

ஒவொரு தீபாவளியும்
குழந்தைகளுடன் கொண்டாடிய
நினைவின் பேரலைகள்!
முகிழ்க்கும் போதெல்லாம்
முன்நின்று மகிழ்விக்கும்!!

Tuesday, October 11, 2011

வயது? சாதனை! 2

வகுப்புத் தோழர்களும்
தோழியரும் மும்முரமாகத்
தேர்வு எழுதுகிறார்கள்
தேர்ச்சிபெற்றால்
வாங்கும் பட்டம்
சித்தாந்த நன்மணி!
சித்தாந்த ரத்தினம்!

 மாணவர்கள் வயது
எழுபது
எண்பதுக்குமேல்!
Related Posts Plugin for WordPress, Blogger...