Tuesday, September 27, 2011

வயது? சாதனை! 1

பறக்கும் கார்!
விண்ணைத்தொட்டுவர
தயாராகும் விண்கலங்கள்!
பர்ட் ரடன்
வயது எழுபது!

Thursday, September 22, 2011

தாலாட்டு.

சூதறியாச் சுடர்மணியே!
சூரியன்போல் சுந்தரமே!
வாதறியா வளர்மணியே!
வண்டாடும் கண்ணழகே!
போதறியாப் பொன்மணியே!
புலர்காலை போல்தமிழே!
நாதமணிக் குரலழகே!
நலம்சேர வந்துதித்தாய்!!

வந்துதித்த நல்லவேளை
வாசமலர் மருக்கொழுந்தே
நந்தா மணிவிளக்காய்
நலம்சேர ஒளிகூட்டி
சிந்தா மணிபோலச்
சிரிப்பாலே எமைமயக்கும்
கந்தன் காற்சலங்கை
காதில் ஒலிக்குதையா!

ஒலிகேட்ட வேளையிலே
உள்ளம் குளிருதையா!
சலியாத மனதினிலே
சந்தம் இசைக்குதையா!
கலிதீர்க்க வந்துதித்த
கண்மணியே கண்ணுறங்காய்!
களிப்பாக்கே கற்கண்டே!
கண்ணுறங்கி முன்னெழுவாய்!

Sunday, September 18, 2011

மானகிரி முருகன்!

ஆனைமுகன் தம்பியே மானகிரி சிறக்கவே
               மகிழ்வுடன் வந்தமர்ந்தாய்!
ஆனதொழில் அனைத்துமே ஆல்போல் தழைத்திட
              அருள்செய்த ஆறுமுகமே!
மன்புகழ் வாழ்வமைய மகிழ்மனை வேண்டியே
             மக்களும் நாடிவருவார்!
ஒன்பது கோள்களும் ஒன்றாகத் துணையுடன்
             உல்லாசக் காட்சிதருவார்!
நன்றாக மயில்மீது நங்கைதெய்வானையும்
           வள்ளியுடன் கோவில்கொண்டாய்!
மன்றாடும் உன்னப்பன் மகிழ்வோடு வந்துனது
           பக்கத்தில் அமரவைத்தாய்!
ஊரோடும் உறவோடும் உன்தேரை வடம்பிடிக்க
           ஊராரை ஒன்றுசேர்த்தாய்!
பேரோடு புள்ளிகள் பெருகியே வளர்ந்திட
          பிரியமுடன் அருள்புரிவாய்!    
மானகிரி நகரத்தார் மகிழ்வோடு பணிசெய்ய
          மாபெரும் சக்திதந்தாய்!
வானுயர் புகழோடு வளர்கல்வி செல்வங்கள்
          வாரியே வழங்கிடவா!

Thursday, September 15, 2011

ஐயா பத்திரம்!

ஐயாவின் தலையினிலே
ஆயிரமாய் வெள்ளிமுடி
கையாலே எடுத்ததனில்
கடகாமும் பண்ணிடலாம்
பையவே கொஞ்சம்
பாத்திரமும் பண்ணிடலாம்!
பையா பேராண்டி
பத்திரமாப் பாத்துக்க![ஐயாவை!!]


Friday, September 2, 2011

ஆடியில தள்ள்ளுபடி

ஆடியில தள்ளுபடி
ஆடையெல்லாம் பறக்குதுன்னு
ஓடிவந்து வாங்கச்சொல்லி
ஒலிபெருக்கி வச்சாங்க
தேடிப்போயித் தெனாவட்டா
தெளிஞ்சு எடுக்கமுடியல!
தள்ளிமுள்ளி உள்ளபோயி
தரம்பாக்க முடியல
அள்ளிக்கிட்டுப் போறசனம்
அடிபுடியா இருக்குது!
உள்ளபிரிச்சுப் பாத்தாக்க...

கோடிச்சேலைக் குள்ளஒரு
கோடுபோல அழுக்கிருக்கு!
மடிப்புக்குள்ள பொட்டுப்போல
குட்டிக்குட்டி ஓட்டை இருக்கு!!

தள்ளுபடி தள்ளுபடின்னு
தள்ளாத வயசுலநாம
தள்ளாடி வாங்கப்போனா..
தள்ளியே விட்டுட்டாங்க!

தள்ளுபடியே வேணாமுங்க
தள்ள்ளியே இருப்போமுங்க!
வழக்கம்போல புதுச்சேலய
தறிக்கிப்போயி வாங்கலாங்க.

என்னநாஞ் சொல்லுறது
எல்லாருக்கும் நல்லாருக்கா?!

நான் பிறந்து இத்தனை ஆண்டுகளில்
ஒருமுறைகூட தள்ளுபடியில்
எந்தசாமானும் வாங்கியதில்லை
இப்போதுதான் முதல்முறையாக
சேலைவாங்கிவந்த அனுபவம் இது!
Related Posts Plugin for WordPress, Blogger...