Thursday, September 22, 2011

தாலாட்டு.

சூதறியாச் சுடர்மணியே!
சூரியன்போல் சுந்தரமே!
வாதறியா வளர்மணியே!
வண்டாடும் கண்ணழகே!
போதறியாப் பொன்மணியே!
புலர்காலை போல்தமிழே!
நாதமணிக் குரலழகே!
நலம்சேர வந்துதித்தாய்!!

வந்துதித்த நல்லவேளை
வாசமலர் மருக்கொழுந்தே
நந்தா மணிவிளக்காய்
நலம்சேர ஒளிகூட்டி
சிந்தா மணிபோலச்
சிரிப்பாலே எமைமயக்கும்
கந்தன் காற்சலங்கை
காதில் ஒலிக்குதையா!

ஒலிகேட்ட வேளையிலே
உள்ளம் குளிருதையா!
சலியாத மனதினிலே
சந்தம் இசைக்குதையா!
கலிதீர்க்க வந்துதித்த
கண்மணியே கண்ணுறங்காய்!
களிப்பாக்கே கற்கண்டே!
கண்ணுறங்கி முன்னெழுவாய்!

1 comment:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...