Tuesday, September 23, 2014

ஆதீனமிளகி ஐயனார் போற்றி.

ஐயன் பெருமை சாற்றிட எமக்கு
ஐங்கர னேநீ அருள்வாய்போற்றி!

நரியங்குடி வாழ் நாதாபோற்றி!
சரணடைந் தோம்உனை சாஸ்தாபோற்றி!
பூரணை புஷ்கலை பதியேபோற்றி!
பொங்கிவரும் அருள் நிதியேபோற்றி!
அரிசிவன் மகனாய் உதித்தாய்போற்றி
கரிமுகன் தம்பி ஆனாய்போற்றி!
புலிமேல் வந்த புண்ணியபோற்றி!
கலிதீர்க் கவந்த கருணைபோற்றி!
ஆதீன மிளகி ஐயாபோற்றி!
கோதி லாக்குணம் தருவாய்போற்றி!
யாதும் ஆகி நின்றாய்போற்றி!
சோதி சூழும் சுடரொளிபோற்றி!
இருதுணை அருகமர் இனியாபோற்றி!
பருகும் தமிழாய் இனிப்பாய்போற்றி!
பெருகும் அன்பில் பிணைவாய்போற்றி!
உருகும் அருளில் உயர்ந்தோம்போற்றி!
ஆறூர் மக்களின் அகமேபோற்றி!
பேரருள் சுரக்கும் பெருமைபோற்றி!
பாரூர் வணங்கும் பரமேபோற்றி!  [உலகம்]
ஊரூர் எல்லை காவல் போற்றி!
வில்வ வனத்தமர் வேந்தேபோற்றி!
செல்வ வளம்தரும் செங்கைபோற்றி!
நல்ல மனத்தமர் நயமேபோற்றி!
சொல்லில் உயர்ந்த தமிழேபோற்றி!
இல்லறம் இனிக்கச் செய்வாய்போற்றி!
நல்லறம் தழைக்க அருள்வாய்போற்றி!
பில்லி சூனியம் விலக்குவாய்போற்றி!
தொல்லை தரும்பிணி நீக்குவாய்போற்றி!
சொல்லொடு பொருளாய் வருவாய்போற்றி!
வல்லமை தருவாய் போற்றி! போற்றி!
சுற்றி வந்துனை வணங்கினம்போற்றி!
சுற்றிவ ரும்பகை அழிப்பாய்போற்றி!
பற்றின வர்க்குப் பந்தம்போற்றி!
வற்றா நதிபோல் வளமேபோற்றி!
ஓசை மணியடித்[து] அழைத்தோம்போற்றி!
பூசை ஏற்க வருவாய்போற்றி!
வாச மலரெலாம் ஏற்பாய்போற்றி!
நேச மனதிலே நிறைவாய்போற்றி!
தாச தாசராய் ஆனோம்போற்றி!
பேச மறந்தனம் பிரியாபோற்றி!
அன்னை தந்தையாய் வருவாய்போற்றி!
தன்னை அறியச் செய்வாய்போற்றி
முன்னை வினையைத் தீர்ப்பாய்போற்றி!
கண்ணை இமைபோல் காப்பாய்போற்றி!
வெள்ளிக் கவசம் விழைந்தாய்போற்றி!
அள்ளி வரும்அருள் அழகேபோற்றி!
கள்ளமில் அன்பில் கரைவாய்போற்றி!
கள்ளூரும் காட்சியில் கனிந்தோம்போற்றி!
புள்ளிகள் பெருகச் செய்வாய்போற்றி!
தெள்ளிய மனதில் திகழ்வாய்போற்றி!
கள்ளருக்[கு] எமனாய் இருப்பாய்போற்றி!
விள்ளரும் சாதனை அருள்வாய்போற்றி!
வெண்பரி மீதமர் வேந்தேபோற்றி!
மண்பரி மழையாய் பொழிவாய்போற்றி![மண் மகிழும்வண்ணம்]
புரவி எடுப்பை ஏற்பாய்போற்றி!
உறவுகள் எல்லாம் சேர்ப்பாய்போற்றி!
சேமக் குதிரை சேவடிபோற்றி!
சாமத் துணையாய் வருவாய்போற்றி!
காட்டுக் கருப்பர் துணையேபோற்றி!
நாட்டும் புகழைத் தருவாய்போற்றி!
சாட்டை எடுத்து வருவாய்போற்றி!
நாட்டைத் திருத்தி நலம்தாபோற்றி!
வல்ல வேட்டிப் பட்டணிபோற்றி!
வீச்சறி வாள்கைக் கொண்டருள்போற்றி!
சாம்பி ராணி வாசாபோற்றி!
சோம்பல் இல்லாச் சுதந்திரம்போற்றி!
கருத்த மீசைக் கருப்பாபோற்றி!
வருத்தம் போக்கி வளம்தாபோற்றி
சுக்கு மாந்தடிச் சூராபோற்றி!
பக்க மிருந்து காப்பாய்போற்றி!
முன்னோடி  முன்வழி தருவார்போற்றி!
முன்னே வந்து காப்பார்போற்றி!
ராக்காயி பேச்சி ராத்துணைபோற்றி!
காக்கும் கருணை போற்றிபோற்றி!
கன்னியர் எழுவர் கழல்கள்போற்றி!
எண்ணிய மாலை தருவார்போற்றி!
திண்ணிய மனமே திரண்டருள்போற்றி!
நண்ணிய தெல்லாம் நலமேபோற்றி!
தேவானை வள்ளி முருகன்போற்றி!
பாவால் பாடிப் பணிந்தனம்போற்றி!
அஷ்டமி வைரவர் அருள்வார்போற்றி!
கஷ்டமி லைஎனும் கனிவேபோற்றி!
சப்பாணி சின்னக் கருப்பர்போற்றி!
எப்போ தும்துணை இருப்பார்போற்றி!
நொண்டிக் கருப்பா வருவாய்போற்றி!
கண்டிலம் உன்போல் கருணைபோற்றி!
பெரிய கருப்பர் பொன்னடிபோற்றி!
பிரிய முடன்துணை வருவாய்போற்றி!
காளி வீரப்பர் கண்டோம்போற்றி!
ஊழி தோறும் உறவேபோற்றி!
வாழும் வாழ்வின் வசந்தம்போற்றி!
சூழும் தீமை தீய்ப்பாய்போற்றி!

திருமஞ் சனநீ ராடுவாய்போற்றி!
திருவெ லாம்சேர அருள்வாய்போற்றி!
பாலபி சேகம் செய்தோம் போற்றி!
பாலரைக் காக்க வருவாய்போற்றி!
பஞ்சா மிர்தம் ஏற்பாய்போற்றி!
கொஞ்சிட மழலை தருவாய்போற்றி!
தயிரபி சேகம் செய்தோம்போற்றி!
பயிர்போல் வம்சம் தழைக்கணும்போற்றி!
இளநீர் அபிசேகம் செய்தோம்போற்றி!
கழனி விளையச் செய்வாய்போற்றி!
பன்னீர் அபிஷேகம் செய்தோம் போற்றி!
நன்நீர் பெறவே அருள்வாய் போற்றி
சந்தனக் குழம்பில் சார்வாய் போற்றி!
திருநீர்க் காப்பில் திகழ்வாய்போற்றி!
நாடிவந் துன்கழல் பணிந்தோம்போற்றி!
ஓடி வந்தருள் உன்னதம் போற்றி!

பாடிவந் துன்புகழ் பரவினம்போற்றி!
கூடியே வாழ்ந்திட அருள்வாய்போற்றி! [நரியங்குடிவாழ் நாதா]

Related Posts Plugin for WordPress, Blogger...