Friday, November 19, 2010

அக்கினி ஆத்தாள் பாட்டு

காக்கும் கரமுடைய கற்பகமே கவின்தமிழே
கேட்கும் வரமளிக்கும் கேண்மையளே கிளரொளியே
பூக்கும் மலர்தேடிப் பூம்பாதம் சேர்க்கின்றோம்
ஆக்கும் அருட்கருணை தா!

அன்னையே அமுதமே ஆனந்தவெள்ளமே
              அருட்சோதி வடிவாகினாய்!
தன்னையே மறந்துநான் தமிழ்பாடி வந்திட
             தமிழுக்கு எழில் கூட்டுவாய்!
நன்மையும் தீமையும் நாளுமுள்ள வாழ்க்கையில்
             நான் உழன்று அழுந்தாமலே
உன்னையே தினம்தினம் உள்ளத்தில் துதிக்கிறேன்
              ஒய்யாரக் காட்சி தருவாய்!
மண்ணிலே துன்பங்கள் மலைபோல வந்தாலும்
              மாதரசி உனை வேண்டினால்
கண்ணிலே காணாமல் கடுகியே மறைந்திட
              கைதூக்கி வரமருளுவாய்!
சின்னஉரு சிரித்தமுகம் சீர்புகழில் பழுத்தமுகம்
             சிங்காரப் பூந்தோட்டமே
அன்னமென நடைபயின்று அருள்பொழிய வருவாயே
             அக்கினி ஆத்தா உமையே!

உயிருக்கு உயிராக உயிருக்குள் உயிராக
              உருவாகி வந்தவள் நீ!
கருவுக்கு கருவாகி கருவுக்குள் கருவாகக்
             காக்கின்ற கருணை நீயே!
புல்லர்க்குப் புல்லராய்ப் புன்மைசெய் தாரையும்
            புறந்தந்து திருந்தவைப்பாய்
நல்லார்க்கும் நல்லராய் நன்மைகள் செய்தவரை
            நானிலம் போற்றவைப்பாய்!
வெல்லத் தமிழினில் விரிவாக உன்புகழை
           விழைந்துநான் பாடுகின்றேன்!
சொல்லத் தெரியவில்லை சொற்பதங் கடந்துநீ
            துரியநிலை காட்டுகின்றாய்!
நாளும்உன் புகழ்பாடி நல்லறம் செய்துமே
            நம்குலம் தழைக்கவேண்டும்
ஆளும்அருள் வேண்டினோம் ஆசிதர வேண்டும்நீ
            அக்கினி ஆத்தா உமையே!

மணமாலை கேட்டவர்க்கு மணவாழ்வு அமைந்திட
            மாலை எடுத்துத் தந்தாய்!
மழலை வரம் கேட்டவர்க்கு மங்காத புகழ்தரும்
             மழலையும் தான் கொடுத்தாய்!
வேலையென்றும் வீடென்றும் வேண்டிவரம் கேட்டவர்க்கு
             விரைவிலே தான் தருகுவாய்!
விலையொன்றும் கேட்காமல் மலைபோன்ற நன்மைதரும்
             விந்தையை என்ன சொல்வேன்!
மாசியில் படைப்புவரும் மறுபடியும் நல்லபல
              மாற்றங்கள் வந்துசேரும்!
பேசிமகிழ் பேரன்கள் பேத்தியுடன் பெண்மக்கள்
              பிரியமுடன் நாடிவருவார்!
நேசிக்கும் உன்படைப்பில் நெருங்கிவரும் உறவுகள்
              நெஞ்சுருக நினைத்திருக்கும்!-உன்
ஆசியில் புள்ளிகள் ஆனந்தம் பெருகட்டும்
               அக்கினி ஆத்தா உமையே!

தேர்போல குடும்பங்கள் சேர்த்துமே வைத்துநீ
              செகம்போற்ற வாழவைப்பாய்!
ஊர்போற்றி மெச்சவே ஒற்றுமை ஆக்கிநீ
             உள்ளங்கள் நெகிழவைப்பாய்!
மனதிலே நினைப்பவர் மாபெரும் சக்திபெற
            மாயங்கள் செய்திடுவாய்!
தனதென நினையாமல் தருகின்ற நல்லவரை 
          தழைத்தோங்கச் செய்திடுவாய்!
உன்னரும் கருணையால் உள்ளம் நனைந்துமே
           உருகியே நிற்கிறோமே
என்னரும் தாயேநீ எழிற்கோலம் காட்டியே
        எங்களை ஆட்கொள்ளுவாய்!
இன்றுபோல் என்றுமே இல்லங்கள் செழித்திட
           இன்னருள் புரிந்திடுவாய்!
கன்றுபோல் எங்களைக் காக்கின்ற தெய்வமே
            அக்கினி ஆத்தாஉமையே!

     ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்
     ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...