Sunday, February 20, 2011

சொல்லு மயிலே சொல்லு!

வெற்றிவடி வேலனிடம்சொல்லுமயிலே--நாங்க
வேகமாக நடந்துவாரோம் சொல்லுமயிலே
சக்திஉமை பாலனிடம் சொல்லுமயிலே---நாங்க
சந்தோஷமா வாரோமின்னு சொல்லுமயிலே
வேழமுகன் தம்பியிடம் சொல்லுமயிலே--எங்க
வேகநடை வெற்றிநடை சொல்லுமயிலே
வாழவைக்கும் தெய்வத்திடம் சொல்லுமயிலே-நாங்க
வழிவழியாய் வந்தகதை சொல்லுமயிலே
ஆறுமுக சாமியிடம் சொல்லுமயிலே-------நாங்க
அன்புகொண்டு வாரோமின்னு சொல்லுமயிலே
சீரும்சிறப்பும் காணவேண்டிச் சொல்லுமயிலே---நாங்க
செட்டிமக்கள் வாரோமின்னு சொல்லுமயிலே
ஊரும்வீடும் காவடிப்பூசை சொல்லுமயிலே----உந்தன்
சேவடியில் சேக்கவாரோம் சொல்லுமயிலே
பேரும்புகழும் பெறவேண்டி சொல்லுமயிலே---எங்க
பிள்ளையெல்லாம் அழைத்துவாரோம் சொல்லுமயிலே
குமரப்பையா கோவில்வீட்டில் திருநீறுபூசி-----நாங்க
கூடிஒன்றாய் நடைதொடர்ந்தோம் சொல்லுமயிலே
கொப்பாத்தா சன்னதியில தேங்காஒடைச்சு---எங்க
தப்புத்தவற சிதரடிச்சோம் சொல்லுமயிலே
கோவிலூரு சாலையில கோலமயிலே------நாங்க
குமரன்கவசம் பாடிவாரோம் சொல்லுமயிலே
குன்னக்குடி தங்கிவாரோம் சொல்லுமயிலே---எங்க
குலம்தழைக்க வேண்டிவந்தோம் சொல்லுமயிலே
பிள்ளையார்பட்டி வணங்கிவந்தோம் சொல்லுமயிலே-எங்கள்
பிஞ்சுமனம் தஞ்சமென்று சொல்லுமயிலே
கண்டவராயன் பட்டிவந்தோம் சொல்லுமயிலே------நாங்க
கடினபாதை வென்றுவந்தோம் சொல்லுமயிலே
மருதுபட்டித் தோப்புவந்தோம் சொல்லுமயிலே----அங்கு
மயில்அழகன் பூஜைகண்டோம் சொல்லுமயிலே
சிங்கம்புணரி ஊருவந்தோம் சொல்லுமயிலே ---மாலன்
சேவுகனை வணங்கிவந்தோம் சொல்லுமயிலே
சமுத்திரா பட்டிவந்தோம் சொல்லுமயிலே-----மக்க
சமுத்திரம்போல் வாரகாட்சி சொல்லுமயிலே
நத்தம்நோக்கி வந்துவிட்டோம் சொல்லுமயிலே--அரஹர
சத்தம்விண்ணைப் பிளப்பதையும் சொல்லுமயிலே
உப்பாறு பாலம்வந்தோம் சொல்லுமயிலே-----எங்கும்
ஓம்முருகா ஒலியைக்கேட்டோம் சொல்லுமயிலே
இடைச்சிமடம் வந்துவிட்டோம் சொல்லுமயிலே----எங்க
இன்னலெல்லாம் மறைஞ்சுபோச்சு சொல்லுமயிலே
திண்டுக்கல்லு வந்துவிட்டோம் சொல்லுமயிலே---இடையில்
குண்டுக்கல்லும் மறைஞ்சுபோச்சு சொல்லுமயிலே
செம்மடைப்பட்டி வந்துவிட்டோம்சொல்லுமயிலே---தெய்வம்
செந்தில்வேலன் ஊஞ்சல்கண்டோம் சொல்லுமயிலே
வெள்ளிஊஞ்சல் ஆட்டம்கண்டோம் சொல்லுமயிலே--எங்க
வெம்மையெல்லாம் மறைஞ்சுபோச்சு சொல்லுமயிலே
குழந்தைவேலன் சன்னதிவந்தோம் சொல்லுமயிலே---எங்க
குறைகளெல்லாம் நீங்கவேணுஞ் சொல்லுமயிலே
விருப்பாச்சி மேடுபள்ளம் சொல்லுமயிலே------முருகன்
விளக்கஞ்சொன்ன வாழ்க்கைவழி சொல்லுமயிலே
அடையாளவேல் வந்துவிட்டோம் சொல்லுமயிலே-----நாங்க
அளவுகடந்த மகிழ்ச்சி கொண்டோம் சொல்லுமயிலே
தடைகள்யாவும் நீங்கிவந்தோம் சொல்லுமயிலே------அந்த
தண்டபாணி காணவந்தோம் சொல்லுமயிலே
கலிங்கப்பையா ஊருணிகண்டோம் சொல்லுமயிலே----அங்கே
கருணையுள்ளம் பெருக்கக்கண்டோம் சொல்லுமயிலே
இடும்பன்குளம் வந்தடைந்தோம் சொல்லுமயிலே---பழனி
இறவன்மலை வந்தடைந்தோம் சொல்லுமயிலே
வலம்வந்தோம் வலம்வந்தோம் சொல்லுமயிலே----எமக்கு
நலம்தந்து வரம்தரணும் சொல்லுமயிலே
தங்கரதம் காணவேண்டும் சொல்லுமயிலே-----மகிழ்ச்சி
பொங்கவேணும் வாழ்க்கையிலே சொல்லுமயிலே!



2 comments:

Chitra said...

பக்தியுடன், நல்லெண்ணம் நிரம்பி இருக்கும் அம்மா என்றும் பூரண நலத்துடன் இருக்க பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

இராஜராஜேஸ்வரி said...

பக்தி மயில் விடு தூது அருமை அம்மா.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...