Tuesday, November 30, 2010

காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன்.

கற்பகக் கணபதியின் பொற்பதம் பணிந்துநான்
            கவிமழை பொழிய வேண்டும்!
கற்கண்டுத் தமிழாலே காரைநகர் மாரியின்
           கருணையைச் சொல்ல வேண்டும்!
கற்றவை கருவாகிக் கவியாக நான்வடிக்கக்
          கந்தனின் அருளும் வேண்டும்!
கொற்றவை புகழ்தனைக் கூறிநான் மகிழ்ந்திடக்
          குலதெய்வம் அருள வேண்டும்!
அந்தணர் குலமகள் பந்தமாய் வந்தவள்
          அழகான முத்துமாரி!
வந்தனை செய்பவர் வாழ்விலே வளங்களை
         வாரியே வழங்கும் மாரி!
ஆதங்கப் பட்டோர்க்கு அற்புதம் காட்டிடும்
          அன்னையே முத்துமாரி!
பேதங்கள் இல்லாது பேரருள் புரிந்திடும்
          பெட்டகம் முத்துமாரி!

உண்ணாமல் உறங்காமல் உணர்வெல்லாம் நீயாக
           உனைக்காண ஓடி வாரோம்!
கண்ணீரே பாலாகிக் காதலுடன் நாடினோம்
           கருணை மழை பொழியுமம்மா!
தன்னாலே வளர்ந்துவரும் தனித்தமிழில் தாயுனக்குத்
           தாலாட்டுப் பாடி வாரோம்!
உன்னாலே ஆகுமென உளமார நம்பினோம்
           உன்னதக் காட்சிதாரும்!
உயிர்போலத் தீச்சட்டி உவப்புடன் ஏந்தினார்
           உயர்வடைய வேணு மம்மா!
பயிர்வளர்த்துப் பக்குவமாய் பாதத்தில் சேர்க்கிறார்
           பாசத்தைக் காட்டுமம்மா!
மயில்தோற்கும் நடனத்தில் மகிழ்வோடு வருகிறார்
            மக்களைக் காருமம்மா!
ஒயிலான அழகோடு உளம்நிறைய அருளோடு
            உலகாளும் முத்துமாரி!


பூமாரி பொன்மாரி பொருளனைத்தும் தரும்மாரி
           புகழ்முத்து மாரியம்மா!
பூமாரி போலருள் பொழிந்திடும் பெரும்சக்தி
             ஓம்சக்தி மாரியம்மா!
பூமிதிக்கும் பாதங்கள் புகழ்நோக்கி நடைபோடப்
             புன்னகையில் வழிகாட்டுவாய்!
சாமியென வழிபடவே சங்கடங்கள் சம்கரிக்கும்
            சங்கரியே முத்துமாரி!
ஓம்என்ற சொல்லுக்குள் உலகாளும் மாதாவே
            உன்வேலைத் தாங்கி வாரார்!
நாமென்ற ஆங்காரம் நடுவழியில் மறைந்திட
           நல்வரம் தந்தருள்வாய்!
நோன்புக்குப் பலன்தந்து நொந்தவர் மனம்மகிழ
           நொடியிலே காட்சிதருவாய்!
வேம்புக்குள் விளையாடி வினையெல்லாம் தீர்த்தருளும்
          வித்தகியே முத்துமாரி!

சேவடிகள் நடனமிடச் சிறியவரும் பெரியவரும்
           சிலிர்த்தெழுந்து ஓடிவருவார்!
பாவடிகள் பாடிவரும் பக்தருக்கு நலம்கோடி
          பாவையிவள் மகிழ்ந்தருளுவாள்!
காவடியும் பால்குடமும் முளைப்பாரி மதுக்குடமும்
          தீச்சட்டி பூமிதியுமே!
காணக் கிடைக்காத காட்சியிது பங்குனியில்
         காரைநகர் பொங்கிவழியும்!
ஆணவம் நீக்கியே அருள்மழை பொழிந்திடும்
         அன்னையே முத்துமாரி!
பேணிஅடி பணிவோர்க்குப் பெருமைகள் தந்திடும்
          பெருங்கருணை முத்துமாரி!
கனவுகள் நன்வாக்கிக் கையிலே பலன்தரும்
           கற்பகம் முத்துமாரி!
காரைமா நகர்விளங்கும் மீனாட்சி புரம்உறை
          கண்மணி முத்துமாரி!




















1 comment:

Chitra said...

அருமையாக இருக்கிறது, அம்மா!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...