Friday, May 3, 2024

கோவிலுக்கு பாக்குவைத்தல்

 பங்காளி வீட்டில்

(அல்லது நம்மவீட்டில்)யாராவது

நம்ம ஒன்பதுகோவிலில்

எந்தக்கோவில் நமதுபிரிவோ

அந்தக் கோவிலுக்கு போய்

பாக்குவைத்து 

கல்யாண அழைப்பிதழும்வைத்து

கோவில்மாலை கொண்டுவர

பணம்கட்டி வரவேண்டும்.


கல்யாணம்சொல்லுதல்

 முகூர்த்தக்கால் ஊன்றியதும்

முக்கியமாய் வீட்டுக்குள்

ஓலைத் தடுக்கினிலே

ஓவியமாய் உக்காந்து

தலப்பா கட்டிக்கிட்டு

தேங்காய்பழத்துடனே

(வாளிக்குள் பணம் அவரவர்

வீட்டு வழக்கப்படி வைத்து)

 வெற்றிலையும் பாக்குவைத்து

பேழைக்கும் பெரியவீட்டுக்கும்

வீட்டிலுள்ள பெரியவர்க்கும்

அண்ணன் தம்பிக்கும்

அழைப்புவைத்துக் கூப்பிட்டு 

ஆயாள் வீட்டுக்கும் அத்தை வீட்டுக்கும்

அதுபோலக் கூப்பிடணும்!

(அந்தக்காலத்துல

முகூர்த்தக்கால் ஊன்றியதும்

அந்தவீதியில் உள்ள 

வீடுகளுக்குமுன்பாகச்சென்று

கல்யாணத்துக்கு வாங்கன்னு

கல்யாணஞ்சொல்றது வழக்கம்)

முகூர்த்தக்கால் நடுதல்

ஐயாவும் அப்பத்தாவும்

மெய்யான அன்புடனே 

செய்.கின்ற வெலையெல்லாம்

செம்மையுறச் செய்வதற்கு 

கையேடு வாங்கிவந்து

கச்சிதமாய் எழுதிவைத்து

ஐயா ஆயா அம்மானுக்கும்

அன்புடனே அழைப்புவைத்து

அத்தை அம்மானை

அருமையுடன் வரச்சொல்லி

கொட்டகைக்காரருக்கும்

குறிப்பெழுதிக்கொடுத்து

கொண்டுவந்த சாமானை

சரிபாத்து எடுத்துவைத்து

வீட்டுக்குள் அப்பத்தா 

முன்னோடி கருப்பருக்கு

முறையாகக் காசுவச்சு

விளகேற்றி வைத்துவர

 அத்தைசங்கை அழகாகஊதிவர

அப்பாவும் அம்மாவும்

 அருகிருந்து உதவிசெய்ய

சுற்றமெல்லாம் சூழ்ந்திருக்க

குலதெய்வம் துணையிருக்க

மூங்கில்போல் தழைத்து

முன்னேற வேண்டுமென

மாங்குழையும் கதம்பமும்

பாங்குறவே கட்டிவைத்து

முதியவரும் இளையோரும்

மஞ்சளும் குங்குமமும்

மகிழ்வுடனே இட்டுவைத்து

முகூர்த்தக் கால்ஊன்ற! 

கல்யாணவீடு களைகட்டும்!!

கண்கொள்ளாக் காட்சியப்பா!!!

(முகூர்த்தக்கால் வளவின்

ஈசானியமூலையில் ஊன்றி

அதனடியில் பால் ஊற்றி

மல்ர்களை இடவேண்டும்)

Related Posts Plugin for WordPress, Blogger...