சும்மாவின் அம்மா
மனதில் உறுதி வேண்டும்..
Friday, June 30, 2023
Saturday, May 27, 2023
வேர்போல விளங்கவேணும்!
ஊர்கூடித் தேரிழுத்தோம்!
ஒற்றுமையாய் நிலைசேர்த்தோம்!!
கார்பொழியக் கண்டோமே கவினுறவே!!!
பேர்வாங்கச் செய்தோமா?
பெயர்விளங்கச் செய்தோம்!
சீர்புள்ளி பெருகவேணும்
ஊர்வளமாய் உயரவேணும்
பார்போற்றச் செட்டிமக்கள்
வேர்போல விளங்கவேணும்!
Sunday, September 19, 2021
திருசெந்தூர் செயந்திநாதா
திருச்செந்தூர் செயந்திநாதா செந்திலவடிவேலா-நீறு
தரிச்சோமே இலையில்வாங்கி செந்தில்வடிவேலா!
சிரிச்சமுகம் காட்டியே செந்தில்வடிவேலா-மனம்
வரிச்சாயே சுந்தரமாய் செந்தில்வடிவேலா!
முன்னைசெய் தவமேநீ செந்தில்வடிவேலா-எமக்கு
அன்னையாக வரவேண்டும் செந்தில்வடிவேலா!
சிந்தைமகிழ் திருப்புகழே செந்தில்வடிவேலா-எங்கள்
தந்தையாக வரவேண்டும் செந்தில்வடிவேலா!
கண்ணைஇமை காப்பதுபோல் செந்தில்வடிவேலா-எங்கள்
அண்ணனாக வரவேண்டும் செந்தில்வடிவேலா!
பக்கபலம் நீயேதான் செந்தில்வடிவேலா-எமக்கு
அக்காவாய் வரவேண்டும் செந்தில்வடிவேலா
அம்பியென அழைத்திடுவோம் செந்தில்வடிவேலா-எங்கள்
தம்பியாக வரவேண்டும் செந்தில்வடிவேலா!
பொங்குமன்பில் குளித்திடவே செந்தில்வடிவேலா-எங்கள்
தங்கையாக வரவேண்டும் செந்தில்வடிவேலா!
மகள்போல ஓவியமாய் வந்திடுவாயே-அன்பு
மகத்தான காவியமே செந்தில்வடிவேலா!
மகனாக உனைக்கண்டோம் செந்தில்வடிவேலா-இந்த
செகம்போற்றும் புகழோனே செந்தில்வடிவேலா!
பேரன்பால் உனைப்பாட செந்தில்வடிவேலா-எங்கள்
பேரனாக வரவேண்டும் செந்தில்வடிவேலா!
காத்திருக்கோம் உனைக்காண செந்தில்வடிவேலா-எங்க
பேத்தியாக வரவேண்டும் செந்தில்வடிவேலா!
கொள்ளுப்பேரன் கண்டோமே செந்தில்வடிவேலா-எங்கள்
உள்ளமெல்லாம் பரவசமே செந்தில் வடிவேலா!
கொள்ளைச்சிரிப் பழகாலே செந்தில்வடிவேலா-மனம்
கொள்ளைகொண்டார் பேரழகால் செந்தில்வடிவேரா
உற்றதொரு நண்பனாக செந்தில்வடிவேலா-உனைப்
பெற்றோமே நன்றியுடன் செந்தில்வடிவேலா!
கற்றவர்க்கு கவின் தமிழாய் செந்தில்வடிவேலா-நாங்கள்
வெற்றிபெற வாழ்த்திடுவாய் செந்தில்வடிவேலா!
திருந்தியவர் தெளிவாக செந்தில்வடிவேலா-நீ
மருந்தாக வரவேண்டும் செந்தில்வடிவேலா!
கரும்பினிக்கும் குரலாலே உனைப்பாடவே-ஐயா
விரும்பி இங்கே வந்திடுவாய் செந்திலவடிவேலா!
சேவல்கொடி அழகோனே செந்தில்வடிவேலா-உனை
பாவில்பாடி அழைக்கின்றோம் செந்தில்வடிவேலா
ஆவலுடன் காத்திருக்கோம் விரைந்தோடியே-மயில்
தேவயானை வள்ளியுடன் வந்திடுவாயே!
கள்ளிருக்கும் பூவதனில் வண்டினைப்போல-எங்கள்
உள்ளமதில் குடிகொண்ட செந்தில்வடிவேலா!
புள்ளிமயில் ஏறிவரும் பூந்தமிழழகே-மக்கள்
புள்ளிபெருக அருள்தருவாய் செந்தில்வடிவேலா!
எந்தவினையும் வேலெடுத்து நலமாக்கியே-இங்கே
வந்தாரை வாழவைக்கும் செந்தில்வடிவேலா!
சொந்தமென நாடிவந்தோம் உனைத்தேடியே-என்றும்
பந்தமாக வரவேண்டும் செந்தில்வடிவேலா!
முத்துசபா ரத்தினமாய் வேண்டிநின்றோமே-நாங்கள்
பக்திசெய்ய பலன்தருவாய் செந்தில்வடிவேலா!
சக்திமகன் சண்முகனே சங்கமித்திணைந்து-மக்கள்
ஒத்துமையாய் வாழவேண்டும் செந்தில்வடிவேலா!
Thursday, December 3, 2020
செட்டிநாட்டுப் பெரியவீடுகள்
உ
சிவமயம்
வணக்கம்
வருக வருக, வாழ்க வளமுடன்!
உங்களை மகிழ்வுடன் வரவேற்கிறோம்.
அதிகாலை எழுந்து வாசலில் பசுவின்சாணம்தெளித்து கோலமிட்டு இலக்குமியை வரவேற்பது எங்கள் வழக்கம்.
முகப்பூ
உள்ளே வந்ததும் முகம் மலர வரவேற்று நாற்காலி அல்லது இந்த முகப்புத் திண்ணையில் அமர வைத்து (ரிலாக்ஸ்) முதலில் நீர்தந்து உபசரிப்பது வழக்கம்..வந்தவர்கள் முதலில்கொஞ்சம் ஓய்வெடுக்கும்போதே முகப்பின் அமைப்பு அழகு இவற்றைப் பார்த்து முகப்பின் அழகிலும் உபசரிப்பிலும் அகமும் முகமும் மலர்ந்து மகிழ்வதால் இதற்கு முகப்பூ என்று பெயர்வைத்திருப்பார்கள்போலும்.
முகப்பு கீழ்ப்பத்தியில் காலணிகளை கழற்றி வைத்து விட்டுத்தான் மேலேவரவேண்டும். மேல் திண்ணை அல்லது முகப்புப் பெட்டக சாலையில் ஆண்கள்மட்டுமே அமர்வார்கள். பெண்கள் அமர்வதில்லை.
நிலை
நிலையின் வேலைப்பாடுகள்பார்ப்பதற்கே தலைநிமிர்ந்து அண்ணாந்து பார்க்கவைத்தார்கள் வம்சம் நிலைக்கவேண்டும் நல்லவை நடக்கவேண்டும் என திருக்கல்யாணம், சந்தானகோபாலர் போன்றவேலைப்பாடுகளுடன் நிலை அமைத்தார்கள்
வளவும் வாசலும்
வளவுப் பெட்டகசாலை
பணம்வைக்கும் பெட்டகம்வைக்குமிடம்
முக்கியநிகழ்வுகள் எல்லாவற்றிற்கும் இங்கு ஆண்கள்மற்றும்பெரியவர்கள் கூடி முடிவுஎடுப்பார்கள்.பெண்கள் மரியாதைகருதி கீழ்ப்பத்தியிலேயே இருந்து கலந்துகொள்வார்கள். வளவு
வீட்டின் நடுப்பகுதி வளவு என்று சொல்வது.
வளவின் பத்தியில் (பக்கவாட்டில்) இரண்டுபக்கமும்
அறைகள் உண்டு.ஒருபக்கம் ஒற்றை அறை,மறுபக்கம்
இரட்டைஅறை(ஒத்தைவீடு,ரெட்டைவீடு)இருக்கும்
வளவிலுள்ள அறைகளில் ஒன்றுமட்டும் சாமிஅறையாகவைத்துக்கொண்டு மற்ற அறைகளை திருமணம் செய்த பிள்ளைகளுக்கு தனித்தனியாக ஒரு அறை தந்துவிடுவார்கள். வளவில் ஓடிப்பிடித்து விளையாட பிள்ளைகள் நிறைய வேண்டுமென்றும், விசேடங்கள் நடத்தும்போது நிறையப்பேர் வந்து இருக்கவேண்டுமென்றும் ஒவ்வொருவீட்டிலும் வளவு பெரியதாகவே கட்டியிருப்பார்கள்.
சாமிவீட்டில், சாமிகளுக்கும்,மற்றும்
முன்னோர்களை நினைத்து, சிலபேர் ஆண்டுக்கு ஒருமுறை, சிலபேர் திருமணம்,அறுபது,எழுபது,,எண்பது,நூறாவது பிறந்தநாள்மற்றும்,மற்ற விழாக்களுக்கு, சாமிக்கு பிடித்ததை சாமி வீட்டின்முன் அடுப்புமூட்டி சமையல்செய்து சாமிக்குமுன்னால் பள்ளயம்இட்டு புதுஉடைகள் வாங்கிவைத்து பழங்கள், பால்பழம்வைத்து சாமிகும்பிட்டு புதுஉடைகளைபேழையில் வைத்துவிட்டு முன்பு படைத்தபோது வைத்த உடகளை எடுத்து அணிந்துகொள்வார்கள்.பிறகு படைத்த உணவை
எல்லோரும் உண்பார்கள்
பள்ளயம்=படையல்
வளவு வாசல், மற்றும் மழைநீர் சேமிப்பு
மழை பெய்ததும் வளவில் நான்கு மூலைகளிலும் தண்ணிக்கிடாரம்வைத்து மழைநீரைபிடித்து சேமித்து நீண்டநாட்களுக்கு உபயோகப்படுத்துவார்கள்.சிலர் மழைபெய்யும்போதே குளிப்பார்கள்.உடம்புக்கு மிகவும்நல்லது.மழைநீர் வெளியேறும்இடத்தில் வெளியேறாமல் அடைத்துவிட்டு தேங்கும் நீரில் துணிதுவைப்பார்கள்.மழைபெய்யும்போதே வளவையும் கழுவிவிடுவார்கள்.வெளியேறும் நீரையும் சேமித்து பூமியில் இறங்கும்படிசெய்து மழைநீர் சேமிப்பாக்கிவிடுவார்கள்.
Sunday, October 25, 2020
ஆயாள் வீட்டின் காயா நினைவுகள் 2
சின்னச்சின்ன செடிவளத்து
சிங்காரமாய்த் தோட்டமிட்டு
சிந்தாம தண்ணிஊத்தி
ஆயா வெதச்சதெல்லம்
அலுக்காமக் களையெடுத்து
ஆசையுடன் வளப்போமே!
ஆயா சங்கூத
ஆலாய் வளந்திருக்கும்
காய்,கீரை,வெங்காயம்
அத்தனையும் ஆராஞ்சு
அழகழகாய்க் கிள்ளிவர
அம்மான் பெண்டிருமே
அறுசுவையாய் ஆக்கிடுவார்!
வாசலிலே பெரிய
வாகான வட்டிலிட்டு
வாஞ்சையுடன் ஊட்டிடுவார்
ஓடி ஓடி நாமெல்லாம்
உண்டு மகிழ்வோமே!
வளவுக்குள் ஊஞ்சலாட
வரிசையிட்டு நிப்போமே!
ஆளுக்கொரு சத்தகத்தால்
பங்குவச்சுப் புளிகுத்தி
பக்குவமாக் கொட்டையெடுத்து
ஓட்டில் வறுத்தெடுத்து
உப்புபோட்டு ஊறவச்சு
உல்லாசமாய் உண்போமே!
காரைக்குடியில்
ஏகாதசி விரதமிருந்து
இரவெல்லாம் முழிச்சிருந்து
பல்லாங்குழி முதலாக
பாம்புத்தாயம் ஈறாய்
பமபதம் விளையாண்டு,
வெள்ளனவே ஏந்திரிச்சு
வெள்ளமெனக் கெணத்தில
வேகமாத் தண்ணியெறச்சு
குளிச்சு முடிச்சதுமே
கொப்பாத்தா கோயிலுக்கும்
பெருமா கோயிலுக்கும்!
பரமபத வாசல்கண்டு
பிரசாதம் வாங்கிவந்து
பிரியமுடன் உண்போமே....
இட்டலியும் கோசமல்லி
இன்னும் இன்னும் என்றுகேட்டு
இனிமையுடன் உண்போமே!!