Sunday, December 16, 2012

முருகன் பூசை வீடு.

மேவுபுகழ் காரைநகர் மீதினிலே கரையமைந்த
ஆவுடையாஞ் செட்டிவகை ஆதரிக்கும் குணமுடயார்!
பூவுடைய மணமெனவே புகழ்மிக்கார் தகவுடையார்!
தாவுமயில் ஏறிவரும் தமிழ்க்குமரன் கந்தனுக்கு
பார்த்துவைத்த நன்னாளில் பங்காளி எல்லோரும்
கார்த்திகையின் திங்களிலே கருத்துடனே கூடிவந்து
முன்னோர்கள் இட்டபடி முறையாகப் பூசைவைத்து
தன்னேரில் தமிழாலே தக்கபடி அர்ச்சித்து
வருவிருந்து பார்த்திருந்து வந்தாரைஉபசரித்து
வருடத்தில் ஒருநாளில் வடிவழகாய் அலங்கரித்து
பள்ளயத்தில் அன்னமதைப் பக்குவமாய் இட்டுவைத்து
புள்ளியெலாம் பெருகிவரப் பூந்தமிழால் பாட்டிசைத்து            
கமகமக்கும் விருந்ததனைக் களிப்போடு பூசையிட்டு
சமபந்தி போசனமாய்ச் சகலருக்கும் விருந்துவைப்பார்!
மாவிளக்கு ஏற்றிவைத்து மகிழ்வோடு தந்திடுவார்!
பானகமும் பூசயிட்டுப் பாசமுடன் பகிர்ந்தளிப்பார்!
பூசயிட்டு வணங்குதற்குப் புள்ளிமயில் முருகனுக்கு
ஆசையுடன் ஒருவீடு ஆங்கே கட்டிவைத்தார்!

நல்லாராம் நம்வீட்டுப் பெண்மக்கள் குழந்தைகள்
எல்லோரும் கலந்துகொண்டு இன்புற்று மகிழ்ந்திருக்க
தன்னேரில் தமிழழகன் தண்டபாணி ஐயனவன்
பொன்னான தாள்பணிந்து புண்ணியங்கள் பெற்றிடுவோம்!

Monday, December 10, 2012

வயது சாதனை?!......7

நகரமும் இல்லாத, கிராமமும் அல்லாத
அவினாசி பகுதியில், ஒரு பழைய மொபட்
வாகனத்தின்  பின், சின்ன சின்னபொருட்களை
வைத்து விற்பனை செய்கிறார் பெரியவர் ஒருவர்.
அவரது சட்டையின் பின்பகுதியில், எனக்கு காது
கேட்காது என்று எழுதி ஒட்டியுள்ளார். காரணம்
அறிய, அவரை நிறுத்தி சைகையால் பேசியபோது
அவர், நம் கண்களையும், உதடுகளையும் பார்த்தே,
என்ன கேட்கிறோம் என்பதை புரிந்து,பதில் தருகிறார்.
            பெயர் கல்யாண சுந்தரம். வயது எழுபத்து நாலு.
திருப்பூர் பகுதியில் நன்றாக வாழ்ந்திருக்கிறார்,அவரது
மகன் ஒருவர், இன்றைக்கும் நாற்பதுபேரை வைத்து,
திருப்பூரில் தொழில் நடத்திவருகிறார் என்பது, பேச்சின்
மூலம் தெரிய வந்ததேதவிர,பழையவிஷயத்தின்
ஆதிக்கோ, ஆழத்திற்கோ போக அவர் பிரியப்படவில்லை.
யார் எங்கே இருந்தாலும், நல்லாஇருக்கட்டும்.என்கிறார்.
        மனைவியோடு அவினாசி வந்தவருக்கு கவுரவமாக,
நியாயமாக, எளிமையாக குடும்பம் நடத்த ஒரு தொழில்
தேவைப்பட்டது. ஊக்கு, ஹேர்பின்,லஞ்ச்பாக்ஸ்,விசிறி
உள்ளிட்ட பல்வேறு பொருட்களை மொத்தமாக வாங்கி,
மொபட்டில் வைத்து பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கு
எடுத்துச் சென்று விற்பனை செய்கிறார்.இவரது
பொருட்களின் மதிப்பு இரண்டு ரூபாயிலிருந்து இருபது
ரூபாய் வரைதான்.ஒருநாளைக்கு பெட்ரோல் சிலவுபோக
நூறிலிருந்து நூற்றைம்பது ரூபாய்வரை கிடைக்கிறது.
      காது கேட்காததைப்பற்றிக் கவலை படவேஇல்லை இவர்.
இதன்காரணமாக தான்விற்கும் பொருட்களின்மீது விலையை
ஒட்டிவிடுகிறார்.ஒருரூபாய், இரண்டுரூபாய் லாபம் வைத்தே
இவர் விற்பது வாடிக்கையாளர்களுக்கு தெரியும் என்பதால்
யாரும் பேரம்பேசாமல் பொருளை வாங்கிச்செல்வர்.
            கிராமத்தில் உள்ள ஏழைக் குழந்தைகள் சிலருக்கு
நல்ல நாள்போன்ற தினங்களில், இலவசமாக பொருட்கள்
தந்து மகிழ்ச்சிப்படுத்துவதும் உண்டு.
            பழகியவர்களுக்கு என்னைப்பற்றி தெரியும். புதிதாக என்னை
பார்ப்பவர்களுக்கு என்னைப்பற்றி தெரியாமல் சிரமப்படக்கூடாது
என்பதற்காகவும் சாலையில் போகும்போது பின்னால் வரும்
வாகன ஓட்டிகள் ,என்நிலையை தெரிந்துகொண்டால், வீணாக
ஆரன் சப்தம் கொடுத்து சிரமப்பட வேண்டாம் பாருங்கள்.....
அதற்காகத்தான் சட்டையில் பின்பக்கத்தில் ‘எனக்கு காதுகேட்காது"
என்று எழுதி,பின்போட்டுள்ளேன்.இதில் எனக்கு எந்தவெட்கமும்
இல்லை... என்கிறார்.
           ஓய்வு எடுக்கவேண்டிய வயதில், களைத்து போகாமல் உழைத்து
பிழைக்கும் கல்யாண சுந்தரத்தை நினைத்து, உழைக்காமல்,
இலவசங்களை நம்பி வாழ்பவர்கள்தான் வெட்கப்பட வேண்டும்.
உண்மையில் இவரை நினைத்து நாமும் நாடும் பெருமைப்படத்தான்
வேண்டும்.
       
          நன்றி தினமலர் 13-05-2012.

         நானும் எனது அறுபது வயதுக்கு பிறகுதான் எனது குழந்தைகளிடமிருந்து இந்த கணினியைகற்றுக்கொண்டேன்.ஷேர் வணிகம்
என்தந்தையிடம்கற்றுக்கொண்டேன்.முன்பு எழுதிவைத்திருந்த கவிதைகளையும் இதில் வெளியிட்டுள்ளேன்.
                                                                                        நல்லது.

Saturday, December 8, 2012

வயது சாதனை?!...6

கற்றுக்கொள்ள எந்தவயதும் தடையில்லைஎன்பதை நிரூபிக்கும்வகையில்
எழுபதுவயதில் ஒருபெண், அண்டர் வாட்டர் போட்டோகிராபி
[நீருக்குள் மூழ்கி புகைப்படம் எடுத்தல்]கலையை கற்றுக்கொண்டதுடன்
அந்த துறையில் பெரும் நிபுணராகி, அதுதொடர்பாக மூன்று புத்தகங்கள்
எழுதியுள்ளார் என்றால் ஆச்சரியம்தானே?அவர்பெயர் லெனி ரிபென்டால்.

      கடந்த 1936ல் பெர்லினில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியை முதன்முதலாக ஆவணப்படமாக தொகுத்தவர் இவரே.இந்த ஒலிம்பிக்
போட்டிக்காக, அறுபதுக்கும் மேற்பட்ட ஒளிப்பதிவு கலைஞர்களை
இயக்கினார்.ஸ்லோமோஷன், பனோரமிக் வியூ,பிஷ் ஐ என்று,இன்றைய
காலகட்டத்தில்பயன்படுத்தக்கூடிய அனத்துவித தொழில் நுட்பத்தையும்,
அப்போதே செயல்படுத்திக்காட்டியவர். புகப்படக்கலையின் பல்வேறு பரிணாமங்களையும் தொட்டவர்.
       ஆப்ரிக்கநாடுகளில் ஒன்றான சூடானுக்கு சென்று, அங்குள்ள
பழங்குடியினர்பற்றி இவர் எடுத்தபடங்கள் ஏராளம்.இதை வைத்தும்
பலபுத்தகங்களை வெளியிட்டுள்ளார்.அவை ஒவ்வொன்றும்
பழங்குடியினர் பற்றிய பாட புத்தகங்கள் போன்றே இன்றும் கருதப்படுகிறது.
சமீபத்தில் இவர் தன் 101வது வயதில் காலமானார்.இறப்பதற்கு முதல்நாள்கூட,ஒரு புகைப்படம் எடுப்பது தொடர்பான கலந்தாய்வில் கலந்துகொண்டார்.
       தான் ஏற்றுக்கொண்ட துறையில், புதுமையை புகுத்தியதும், சமுதாய
நலனுடன் கடினமாக உழைத்ததும், இவருக்கு இறவா புகழைத் தேடித்தந்துள்ளது.

நன்றி.தினமலர். 18-11-2012.

நம்மால் எதுவும் முடியும்.வயது ஒருதடையல்ல.முயற்சிப்போம்.
வெற்றிபெறுவோம்.நல்லது.

         

Tuesday, September 4, 2012

வயது சாதனை?!..5

வயது அறுபதைக்கடந்துவிட்டால்
முதுமையின்தாக்கம் தானாகவந்துவிடும்.
தேனியாய் சுற்றித்திரிந்த நம்மை
தேங்கி நிற்கவைத்து முடங்கவைக்கும் தன்மை
முதுமைக்கு உண்டு.ஆனால்
அந்த முதுமையை, தன் விளாசலில்
விரட்டியுள்ளார் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை
பழையபோஸ்ட் ஆபீஸ்தெருவில் வசிக்கும்
சீனி என்ற
தொண்ணூற்று ஐந்துவயது சூப்பர்ஸ்டார்!
காற்றும் காணாமல்போகும் வேகத்திற்கு
சிலம்பம் சுற்றுவதில் வல்லவர்!
பன்னிரெண்டு வயதில்
சிலம்பத்தில் ஏற்பட்ட ஈர்ப்பு;
ஆயிரத்து தொள்ளாயிரத்துஐம்பத்துஎட்டில்
தொடங்கிய அவரது விளாசல்
பலகிளைகளுக்கு பரவி
தற்காப்பில் தனித்துவம்பெற்றகுருவாக மாற்றியது.
இவரிடம் பயிற்சிபெற்றவர்கள்
சினிமா, போலீஸ் துறையில் ‘கிங்’ஆகத்திகழ்கின்றனர்.
‘தேவர்மகன்’படத்தில்,கமலுக்கு சிலம்ப மாஸ்டராகஇருந்த
வேட்டைச்சாமி,சீனியின் மாணவராம்.
தொண்ணூற்றுஐந்து வயதில்கம்பு ஊன்றி
நடக்கவேண்டியவர்,கம்பெடுத்துச் சுற்றுகிறார் என்றால்;
அதுதான் கலைமீதுள்ள ஈடுபாடு.
இந்தவயதிலும்,சூறாவளியாய் சுற்றும்
உங்கள் ரகசியம் என்ன?என்ற கேள்விக்கு
"கலையை கற்பதுமட்டும் கடமையல்ல;
அதை தினமும் பயிற்சி செய்யவேண்டும்.
இதுநடந்தால் முதுமையாவது...இறப்பாவது.."என
நெஞ்சை நிமிர்த்துகிறார் சீனி.கம்பு சுத்தும்
ஆசையிருந்தால் 99948 39550 ஐ தெம்பாக அழுத்துங்கள்!

................நன்றி தினமலர் செப்டம்பர் 2-2012.

Wednesday, July 25, 2012

அக்கினி ஆத்தாள்.

கண்மாய்க் கரையிருந்து காட்சிதந்த கற்பகமே!
கண்ணிமையாய் எமைக்காக்க காரைநகர் வந்தவளே!
பேழைக்குள் இருந்துவந்த பெருந்தெய்வத் திருமகளே!
வாழையடி வாழையென வாழவைப்பாய் எம்குலமே!

Saturday, July 14, 2012

வயது சாதனை?! 4

எவரெஸ்ட்சிகரத்தில் ஏறியவர்களிலேயே மிகவும் வயதானபெண் என்ற சாதனையை படைத்துள்ளார் ஜப்பானைச்சேர்ந்த தமேய்வடானபி.இவர் சிகரத்தின் உச்சியைத்தொட்டபோது இவரது வயது எழுபத்துமூன்று!
சாதனைபுரிய நினைப்பவர்களின் உச்சக்கட்ட சாதனையே எவரெஸ்ட் சிகரம் ஏறுவதுதான்.இளமை முறுக்கோடு கிளம்பிய,இருநூற்று எண்பத்துநாலு பேர்களில்,இவர்தான் வயதானவர்.ஆனால் இவர்களில் குளிர்தாங்காமல் இறந்தவர்கள்,ஏறமுடியாமல் நின்றவர்கள்,இன்னும் கொஞ்சநேரம் இருந்தாலும் இறந்துவிடுவேன் என்று அடித்துப்பிடித்து திரும்பியவர்களெல்லாம் போக எவரெஸ்ட் சிகரம் தொட்டஎண்பத்து இரண்டு பேர்களில் இவரும் ஒருவர்!எவரெஸ்ட் சிகரம் தொட்டவயதானவர் என்ற சாதனையை தன் அறுபத்து இரண்டு வயதில் ஏற்படுத்திய தமேய்,தன்சாதனையை தானே முறியடிக்கும்வகையில் பதினொறு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கடந்தவாரம் தன் எழுபத்துமூன்றாவது வயதில் மீண்டும் எவரெஸ்ட் சிகரம் தொட்டுத் திரும்பியுள்ளார்.இடையில் தன் அறுபத்து ஐந்தாவது வயதில் ஒருமுறை எவரெஸ்ட் சிகரம் ஏறும்போது கடுமையான பனிப்புயலில் சிக்கி முதுகில் பலத்த காயமடைந்தார்.எழுந்து நடக்கவேமாட்டார் என்று எல்லோரும் கருதியபோது, தன் மனவலிமை காரணமாக துள்ளி எழுந்தவர் கடுமையான பயிற்சி எடுத்து, இந்தமுறை வீழ்ச்சியின்றி எழுச்சி பெற்றுவிட்டார்.இந்த சாதனை தனக்கு மகிழ்ச்சி என்றாலும் கடந்த பதினொரு ஆண்டுகளில் எவரெஸ்ட் மிகவு
ம் மாறிவிட்டதாக வேதனையும்படுகிறார்.முன்பு பனிபடர்ந்து அடர்ந்து இருந்த இடங்கள் எல்லாம் இப்போது நீர்நிலையாக நீண்டு காணப்படுகிறது.இது உலகம் வேகமாக வெப்பமயமாகிவருவதன்[குளோபல் வார்மிங்] அறிகுறியே. இதை தடுத்துநிறுத்திட,நிறைய விழிப்புணர்வு தேவை.அது இளைஞர்களிடம் இன்னும் தேவை.ஏனெனில்,இனி உலகம் அவர்களின் கையில்.அவர்களது உலகத்தை காப்பாற்ற அவர்கள்தான் முவரவேண்டும் என்கிறார்.நமது எண்ணமும் அதுவே.எனவே உலகம் வெப்பமயமாவதைத் தடுக்க நம்மால் முடிந்தவரை முயற்சிசெய்வோம்.அன்புடையீர் தயவுசெய்து இன்றே உறுதி எடுங்கள்..
நன்றி. தினமலர் 24-6-2012.  நல்லது.     

Monday, May 28, 2012

கரண்டோட ரவுசு.

கரண்டோட ரவுசு!
அம்மிக்கு மவுசு!!
ஆட்டுக்கல்லுக்குப் பவுசு!!!

ஜிம்முக்குப் போகாம
அம்மியில அறச்சதுல [ஒடம்பு]
ஜம்முன்னு ஆச்சுதுங்க!

பயிப்புத்தண்ணி வத்துனதால [கெணத்துல]
பையப்பையத் தண்ணியெடுத்து
கையிக்கிப் பயிற்சியாச்சுதுங்க!

ஓலவிசிறி வெலையெல்லாம்
ஒசரத்துக்குப் போயிநின்னு
அசரவைக்கிது பாருங்க!

லிப்டு வேலசெய்யாம
கப்புசிப்புனு ஆயிப்போயி
லெப்டு ரயிட்டு வாங்குது!

யூப்பிஎஸ்ஸுகூட ரொம்ப
யூசாகிப் போனதால
ப்யூசாகிப்போச்சுதுங்க

வெளக்கேத்தற எண்ணெயெல்லாம்
வெல எகிறிப்போச்சு
வாங்குதுங்க மூச்சு!


Saturday, May 12, 2012

ஞாபகம் வருதே!

விதைப்பும் அறுவடையும் இல்லாத
விவசாயிகளின் விடுமுறைநாட்கள்
விதைப்பில்லாச் சித்திரை
அறுவடையில்லா வைகாசி!
நாம் மறந்துபோன
வாழ்க்கையின் மறுபக்கம்.
கள்ளரை விரட்டியடிக்க
கைக்கொரு ஆயுதம்வைத்திருக்கும்
காவல் தெய்வங்களுக்கு
பொங்கலிட்டுக் குட்டிவெட்டி
பங்குவைத்துப் பாசமுடன்
சொந்தங்கள் அழைத்து
சுறுசுறுப்பாய் விருந்துவைத்து
சண்டையிட்ட உறவெல்லாம்
கண்பட்டு விடும்போல
களிப்போடு ஒன்றுகூடி
கெண்டைக்கறி உண்ணுகின்ற
கண்கொள்ளாக் காட்சி!
கொஞ்சிவரும் குழந்தைக்கு
பஞ்சுமிட்டாய் நுங்குவண்டி!
விடலைப் பசங்களுக்கு
உல்லாசப் பாட்டிசைத்து
உசுப்பேற்றும் ஒலிபெருக்கிகள்!
கரகாட்டம் ஒயிலாட்டம்!
கண்கவரும் மயிலாட்டம்!
வளைக்கரங்கள் ஏந்திவரும்
முளப்பாரி மதுக்குடங்கள்!
களைப்பில்லாக் கண்விருந்து!
வறுத்துத் தோலெடுத்து
உப்புப்போட்டுத் தண்ணியில
ஊறவச்ச புளியங்கொட்டை!
அள்ளித் தின்றுகொண்டே
அயராமல் முளிச்சிருந்து
ஆண்டாண்டு பார்த்தாலும்
அலுக்காத நாடகங்கள்!
வள்ளிதிருமணமும்
அரிச்சந்திரா பவளக்கொடி!
ஆண்டுக்கு ஒருமுறைதான்
அனுபவித்துப் பாருங்களே!

Friday, February 3, 2012

கனியான கந்தவேள்!

கனிக்காகக் கனலாகிக் கடினமலை ஏறியே
                     கனியான கந்தவேளே!
இனிதான உன்பேரை இன்னமுதம் போலவே
                  இசையாகப் பாடிவாரோம்!
மெய்பூசும் நீரோடும் மெய்யான உறவோடும்
                 மெதுவாக ஓடிவாரோம்!
தைப்பூசம் தைப்பூசம் தரையிருந்து மலையேறும்
                  நதிபோல ஓடிவாரோம்!
சுட்டிக்கு ழந்தையுன் சூரிய முகம்கண்டு
            சொக்கியே நிற்கிறோமே
செட்டிக்கு ழந்தைகள் செகம்போற்ற வாழவே
           செல்வனே அருள்புரிவாய்!
கட்டிவரும் காவடியும் களிப்போடு பால்குடமும்
           காலடியில் சேர்க்கவருவார்!
அட்டியின்றி அடியவரை அருள்மழை நனையவைத்து
          ஆனந்தம் கொள்ளவைப்பாய்!
திருப்புகழும் தீந்தமிழும் தெவிட்டாத உன்பேரை
          செவிகேட்டுக் குளிர்ந்திருக்கும்!
விருப்பமுடன் பாடினால் விந்தைபல காட்டிநீ
               ஓடிவா பழனிவேலா!

Tuesday, January 17, 2012

என்ன நாஞ்சொல்லுரது? 2

மோல்மேனு குறிச்சியெல்லாம்
ஓல்டுமேனுக்[கு] ஆகிப்போச்சு
ஆல்வீ டு ரெண்டாங்கட்டு
கோல்போட்ட கிரிக்கெட்டாச்சு!
கூட்டிமொழுக ஆளுக்கெல்லாம்
ரேட்டுரொம்ப ஏறிப்போச்சுனு
போட்டிபோட்டு கூட்டுனவீ ட
கூட்டாமெ விட்டதால
கூட்டிமொழுகி வச்சவளவு
கொஞ்சங்கொஞ்சமா தூசியடஞ்சு
ராட்டிதட்டும் எடம்போல
ரணகளமா ஆயிப்போச்சு.
கோட்டைபோல வீ ட்டக்கட்டி
கொலாகலமா வாழ்ந்தவங்க
நோட்டமிட்டா மனசெல்லாம்
நொந்துபோயி நூலாவாங்க.
பாட்டன் பூட்டன் கட்டிவச்ச
பெரியவீட்ட பழுதுநீக்கி
ஓட்டமாத்தி ஒழுகல்நிறுத்தி
கரையானுக்கு மருந்தடிச்சு
தூணுசொவரு எல்லாத்துக்கும்
தூள்பறக்க வண்ணந்தீட்டி
வெடிப்புக்கெல்லாம் வெள்ளயடிச்சு
வெள்ளச்சொவர நல்லாக்கி
பர்மாத்தேக்கு நெலைக்கெல்லாம்
பக்குவமா எண்ணையடிச்சு
மோப்புக்குள்ள நுழைகையில [முகப்பு]
மொகமெல்லாம் மலரவைங்க!
சீட்டுக்கட்டுப் போலவீடு
சீக்கிரமா கட்டிரலாம்.
பாட்டன்வீடு போலநமக்கு
பக்குவமாக் கட்டவருமா!?

என்னநாஞ் சொல்லுரது
எல்லாருக்கும் நல்லாருக்கா?!

Sunday, January 15, 2012

அக்கினி ஆத்தாள் பாட்டு

தேர்போல குடும்பங்கள் சேர்த்துமே வைத்துநீ
              செகம்போற்ற வாழவைப்பாய்!
ஊர்போற்றி மெச்சவே ஒற்றுமை ஆக்கிநீ
             உள்ளங்கள் நெகிழவைப்பாய்!
மனதிலே நினைப்பவர் மாபெரும் சக்திபெற
            மாயங்கள் செய்திடுவாய்!
தனதென நினையாமல் தருகின்ற நல்லவரை
          தழைத்தோங்கச் செய்திடுவாய்!
உன்னரும் கருணையால் உள்ளம் நனைந்துமே
           உருகியே நிற்கிறோமே
என்னரும் தாயேநீ எழிற்கோலம் காட்டியே
        எங்களை ஆட்கொள்ளுவாய்!
இன்றுபோல் என்றுமே இல்லங்கள் செழித்திட
           இன்னருள் புரிந்திடுவாய்!
கன்றுபோல் எங்களைக் காக்கின்ற தெய்வமே
            அக்கினி ஆத்தாஉமையே!

     ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்
     ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்.
Related Posts Plugin for WordPress, Blogger...