Sunday, November 14, 2010

வாழ்வின் வசந்தகாலங்களில்.....தேதி இட்டும் இடாமலும் சேர்த்துவைத்தநினைவுகள்

இதயங்களின் சங்கமத்தை
இதயங்கள் உணருமுன்னே
இல்லறமும் நல்லறமும்
புரியாத வயதினிலே
இணைத்துவிட்டார் நம்மை!
அன்பே......
அப்போது புரியாத
அன்பின் வேகமெல்லாம்
இப்போது உணர்கின்றேன்!
இதயத்தில் பதிக்கின்றேன்:
அன்று நீ....
கன்னிப் பூக்களின்
கனவு மாளிகையில்
எண்ணற்ற தீபம்
ஏற்றிவைத்த இளவரசு!
புதுமைப் பூக்கள்மலரும்
பொன்மணி மண்டபத்தின்
நிகரிலாத் திருவிளக்கு!
நீ என்இதயத்துக்கு!!
வண்ண நிலவுகளின்
வானுயர்ந்த ஆசைகளில்
மன்னன் நீ...
ஆனாலும்
என் இதயமாளிகையின்
இந்திரக் கனவுகளில் மட்டுமே
நிசமானாய்!
நித்தியத்தாமரை போலும்
நின் இரு கைமலர்கள்
சித்திப்பதில்லை யார்க்கும்!
சித்தம் கிறங்க வைத்தாய்!!
நித்தம் என் நினைவை
விட்டகல மறுக்கின்றாய்!
ஏன்?...
வரம்வேண்டி உந்தன்
வாழ்க்கைத்துணை ஆகினேனோ?!
இரக்கமற்ற இரவுகள்
உறக்கமற்றுப் போய்...
நெஞ்சை அடைக்கிறது
நினைவின் பேரலையில்
மூச்சுத் திணறுகிறேன்...
ஓ....அந்த நாட்கள்
சுகமான ராகங்கள்
சொந்தமுடன் இசைத்துவரும்
இளமைப் பூங்காவின்
இனிய சங்கீதம்
தனிமை கிடைக்கையிலோ
பனிமலர்போல் உல்லாசம்!
எப்போதும் நீ
உதயச் சூரியனின்
இதமான ஒளியாகி
இல்லத்தை நிறைக்கின்றாய்!
இன்னும் தொடர்கின்றாய்!!
தொடரட்டும் உன்னைப்பற்றிய
தூய அன்பின் நினைவுகள்!

இந்த எண்ண வெளிப்பாடுகள்
எழுதப்பட்ட ஆண்டு ஆயிரத்து
தொள்ளாயிரத்து எண்பத்து இரண்டு!
என்ன குழந்தைகளே வியப்பாக இருக்கிறதா!?
இப்போதுதானே புதுயுகப்புத்தகம் கொஞ்சம்
புரிய ஆரம்பித்திருக்கிறது
அதனை உங்களுடன்
பகிர்ந்துகொள்ளத் தோன்றியதால்
எழுதினேன்! எப்படி இருக்கிறது?

.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...