Saturday, December 4, 2010

தொடர்ச்சி--பேரன் பேத்திகள்.

                                 சுப. வள்ளியப்பன்
பாட்டையா சுப்பையா பண்பான ஆட்சியிலே
ஈட்டிவந்த புகழுக்கு இன்றளவும் குறைவின்றி
போட்டியின்றித் தேர்ந்தெடுத்த பொன்னான தலைவரைப்போல்
பாட்டியார் மூவருக்கும் பணிவான ஒருமகனார்.
                              
                                சுப. சுப்பையா

சந்தனத்தில் பொட்டுவைத்து சவ்வாது மணக்கவரும்
சென்ட் -வ-னா என்றழைக்கும் செல்லப்பெயர் நண்பரிடை
வத்துப்ப ஹார்தனிலே வட்டிக்கடை நடத்தியதால்
வத்துப்ப ஹார்-வ-னா எனும்பெயரும் தானுண்டு.

                               சுப. அருணாசலம்

கட்டியுள்ள வேட்டிஎன்றும் கசங்கிடாத முல்லைப்பூ
போட்டிருக்கும் சட்டையுடன் புதிதாக இரண்டுமட்டும்
தேவைக்கு மேல்இருந்தும் தேடிஅணிய மாட்டார்கள்!
தேவை முடிந்தவுடன் தாமேதான் துவைப்பர்கள்!
                            
                           சுப.முத்துக்கருப்பாயி


நகைசெய்ய வைரங்கள் நன்றாகப் பார்ப்பார்கள்
பகையின்றி எவருடனும் பழகிவரும் பண்பாளர்!
நகைமுகம் மாறாத நல்லமன அப்பத்தா
வகைவகையாய் எங்களுக்கு வாங்கித் தருவார்கள்


                               சுப. மெய்யப்பன்

இஞ்சினியர் நிறைந்திட்ட இனியஎங்கள் குடும்பம்
மிஞ்சுகின்ற பல்கலைக் கழகமாய்த் திகழுதற்கு
நெஞ்சகத்தே அன்புவைத்து நிலைவிளக்காய் ஒளிகூட்டி
விஞ்சுகின்ற கண்டிப்பில் விளங்குகின்றார் எம்ஐயா!
                             
                                சுப. தேனப்பன்

நண்பருக்கு நலமாகி நல்லவர்க்குத் துணையாவார்!
கண்பார்த்தால் கைசெய்யும் பழக்கமே நல்லதென்பார்!
கண்பட்டு விடும்போலக் கணக்கெழுதும் எங்களையா!
எண்பதென்று சொல்லுகிறார்! நம்பவே முடியவில்லை!!


                             சுப. விசாலாட்சி
                        
தும்பைப்பூத் துப்பட்டா தோள்களிலே துலங்கிவர!
நம்பிக்கை கண்களிலே நல்வைர மின்னலிட!
தும்பிக்கை யான்தம்பி துணையாக வருவதுபோல்
எம்ஐயா நேர்த்தியுடன் எழுந்துவரும் சுறுசுறுப்பு!


                             ராம.முத்துக்கருப்பாயி.


எப்போதும் மணிப்படியே தப்பாது உணவருந்தி
இப்போதும் இளமையுடன் இருக்கின்றார் எங்களையா!
ஐயாவின் மனம்போல ஆயாவின் நளபாகம்!
ஐயாவின் இளமைக்கு அதுவேதான் ரகசியமாம்!


                            வ.மீனாட்சி


அதிகாலை எழுந்துவந்து அதிவேக நடைப்பயிற்சி
ஆனந்த பவனிலொரு காப்பியுடன் முடிப்பார்கள்!


                          மா.வள்ளியப்பன்


காலைக் கடன்களெல்லாம் கடுகவே முடித்துவிட்டு
நாளையென்று தள்ளாமல் நடைமுறையில் செயலாற்றி
காலைமுதல் மாலைவரை கணப்போதும் சுணங்காமல்
களைப்பின்றி விரைந்தாற்றும் கணிப்பொறியாம் எங்களையா!

                             சு.ரேவதி.


படையே பதைக்கின்ற பலமான வெய்யிலிலும்
நடையே போதுமென்பார் நாலுரூபா மிச்சமென்பார்!
இடையிடையே காப்பி கொஞ்சம் இதமாகக் குடித்திடுவார்
குடையோடு பார்த்திடலாம் குசியான எங்களையா!

                                                                       வளரும்...

1 comment:

Chitra said...

அம்மா, இதை நீங்கள் அவர்களுக்கு கொடுத்து (பிரிண்ட் எடுத்து கொடுத்து) பரிசாக வழங்கலாமே! அருமையான இந்த பதிவு, நிச்சயம் அவர்களுக்கு பொக்கிஷம்தான். கொடுத்து வைத்தவர்கள், அம்மா.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...