Friday, November 26, 2010

இரணியூர் ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவி

அற்புதங்கள் செய்தெம்மை ஆட்கொண்ட நாதன்மகன்
கற்பகத்தின் கருணையிலே கனிந்துமனம் மகிழ்ந்துநின்றோம்
வலம்வந்து வணங்கிடவே வருந்துன்பம் களைந்திடுவாய்
நலம்தந்து பலம்தருவாய் அள்ளியள்ளி!


அள்ளிக் கொடுக்கின்ற அருளாலே வளம்கண்டு
வெள்ளி முளைக்குமுன்னே விரைவாகச் செய்திட்ட
தங்கக் கதவுதைத்த தனவணிகர் வணங்குகின்ற
எங்கள் தமிழ்நாட்டின் இரணியூரே!

இரணியனை வதைத்தநர சிங்கனவன் சாந்திபெற
இரணியூர் ஆட்கொண்ட நாதனவன் கருணையினைப்
பாட்டுக் கவியெழுதிப் பாடவந்த முத்து நான்
கேட்டுச் செவிகுளிர்ந்து பாராயோ!


பார்வையிலே எமைவைத்து பார்புகழ பலம்கொடுத்து
கோர்வையாய்த் தொழில்கொடுத்து குவலயத்தார் புகழவைத்தாய்!
கோவில் திருப்பணிக்கு கொண்டுவந்து கொடுக்கவைத்தாய்
நாவினிக்கத் தமிழ்பாடத் தாராயோ!


தாஎன்று கேட்குமுன்னே தருகின்ற தெய்வமய்யா
தேமதுரத் தமிழ்போலத் திக்கெட்டும் புகழ்பரப்பும்
கல்லுத்தி ருப்பணியும் கலைமிளிரும் சிலையழகும்
சொல்லித் தெரிவதில்லை காணீரோ!


காணும் கண்ணழகே! கைவிரலின் நகம்அழகே!!
பூணும் அணியழகே!பூவிரியும் முகத்தழகே!!
சிவபுரந் தேவியரே சிரித்தமுகத் தாமரையே!!!
நவசக்தி நல்லருளில் நனையீரோ!


நனைகின்ற அன்பாலே நாள்தோறும் வணங்கிவர
மனைமக்கள் சுற்றம்சூழ மகிழ்ந்திருக்கச் செய்வீரே!
தனம்தந்து தளர்வில்லா மனம்தந்து தகைசான்ற
குணம்தந்து குலம்தழைக்கச் செய்வீரே!

1 comment:

Chitra said...

:-) மிக நன்று, அம்மா.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...