Monday, November 8, 2010

எட்டுக்கண்ணும் விட்டெரிக்கும் செட்டிநாட்டுச் சாப்பாடு!

பாசிப்பருப்பு மசியலுக்கு
பக்குவமாய் உப்பிட்டு
உருக்கி நெய் ஊத்தி
சீரகமும் பூண்டும் அதில
சிக்கனமாத் தட்டிப்போட்டு
கருவேப்பிலை கிள்ளிப் போட்டு
கடைஞ்சு வச்சா சாப்பாடு..ஆஹா!
முறுக்கா ஆரம்பிக்கும்!
முதல்ருசியே மூக்கை இழுக்கும்!!

அம்மியில்லாத ஆச்சிவீடு உண்டா?!

அம்மியில அரச்சுப்போட்டு
ஆச்சிவச்ச கறிக்குழம்பு
கம்மியாவே இருந்தாலும்
களிப்பூட்டும் ருசியிருக்கும்!
பலாக்காயில பருப்புப்போட்டு
கூட்டுக் கறிவச்சா....
ஆட்டுக் கறிகூட
அதுக்குஇணையில்லையப்பா!
அவரைக்காய் இளங்குழம்பு
அதுக்கு ஒரு தனி ரெசிபி{பக்குவம்}
 சீரகமும் கசகசாவும்
பூண்டும்வச்சு அம்மியில
புதுசாத்தட்டிப் போட்டு..
ஆஹா..
இதுவல்லோ இளங்குழம்பு!
புடலங்காய்த் துவட்டலுக்கு
துவரம்பருப்பு அரைவேக்காட்டில்!
அடடா! அதுவொருசுவை!
பலகாய் போட்டு ஒரு மண்டிவைப்பார்!
உலகமெலாம் விரும்புகின்ற
உருசியான மண்டியப்பா!
பறங்கிக்காய் புளிக்கறியும்
பக்குவமாய்க் கருணையிலே
படுருசியாய் மசியலும்
இங்கிலீசு கய்கறியில்
இதமாகக் காரமிட்டு
பிரட்டல் வைப்பார்கள்
பிடித்தபடி சாப்பிடலாம்!
அமிர்தத்தைப் போல
அரிசிப் பரமான்னம்!
அப்பளமும் பொரிச்சுவைப்பார்
அதுவல்லோ ஆனந்தம்!

வத்தல் வகை

வத்தலிலே வகைவகையாய்
வறுத்து வைப்பார்கள்!
கிள்ளிக்கிள்ளிக் காயவைத்த
கிள்ளுவத்தல்!
வத்தக்குழலில் பிழிஞ்சுவச்ச
தேங்குழ வத்தல்
வண்ணம்கலந்து காயவைத்த
ரொசாப்பூ வத்தல்!
துணியில் ஊத்திக் காயவைத்த
கேப்பை வத்தல்!
மோருக்குள்ள போட்டுவச்ச
மொளகாவத்தல்! சுண்டவத்தல்!
பலகாயும் மோருக்குள்ள
பக்குவமாப் போட்டுவச்ச
காய்கறிவத்தல்!

பலகார வகையும் தொட்டுக்கொள்ளுவதும்!




வெள்ளைப் பணியாரத்துக்கு
வரமிளகாய்த் துவையல்!
மசாலைப் பணியாரத்துக்கு
கதம்பத் துவையல்!
உளுந்தவடை சுட்டாக்க
தேங்காய்ச் சட்டினி!
மசால்வடை சுட்டாக்க
இஞ்சி சேத்த சட்டினி!
பொங்கல் போட்டாக்க
முருங்கைக்காய் சாம்பார்!
இடியாப்பம் செஞ்சாக்க
கத்தரிக்காய் கோசமல்லி!
ரவா உப்புமாவுக்கு
பாசிப்பருப்பு பச்சடி!
அடைத்தோசை சுட்டாக்க
பொரிச்சுக்கொட்டித் துவையல்!
இளந்தோசை சுட்டாக்க
வெங்காயக் கோசு!
அஞ்சரிசித் தோசைக்கு
வெங்காயம் பூண்டுவச்சு
தேங்காய்த் துவையல்
ஊத்தப்பம் தொட்டுக்க
துவரம்பருப்பு சட்டினி!
அரிசி உப்புமாவுக்கு
அரைச்ச மல்லித்துவையல்!
பூரிக்கு கிழங்கு!
சப்பாத்திக்கு குருமா!
இட்டலிக்கு டாங்கரு!
சும்மா குளம்பும் வைக்கலாம்!
புளிமிளகாய் கரைக்கலாம்!!

இனிப்பு வகை

கருப்பட்டியும் நெய்யும்சேத்த
ஆடிக்கூழு கும்மாயம்!
தேடிவாங்கிச்சாப்பிடலாம்
திகட்டாத பலகாரம்


வெல்லம்போட்டு ஏலம்சேத்து
ஆட்டிச்சுட்ட கந்தரப்பம்
இனிப்புச்சீயம்!
தேங்காய்திருவி நெய்போட்டு
வேகவச்ச கவுனரிசி!
பசங்கவிரும்பிச் சாப்பிடுற
பால்பணியார மாவு
பக்குவமா அரைக்கலைன்னா
படபடன்னு வெடிச்சிரும்!
ரெங்கூன்புட்டு சாப்பிட்டதும்[மனசு]
ரெக்கை கட்டிப்பறக்கும்!
உக்காரை ருசியில
ஒலகமே மறந்துரும்!
கருப்பட்டிப் பணியாரம்
விருப்பம்போல சாப்பிடலாம்!
குருவை அரிசிப் பணியாரம்
குசியாகச் சாப்பிடலாம்!
முகம் மலர வரவேற்று
மூச்சுமுட்ட அன்னமிடும்
நகரத்தார் பண்பாட்டை
நாடே வியந்தறியும்!

4 comments:

Chitra said...

அம்மியில்லாத ஆச்சிவீடு உண்டா?!


.....அப்படி சொல்லுங்க.

... வாசித்து முடிக்கும் போது, நாவில் நீர் பெருகி.... ஸ்ஸ்ஸ்....... அப்படியே கிறங்க வச்சிட்டீங்க.....

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இவற்றின் சமையல் முறையைப் படத்துடன் ஒன்வொன்றாக இடுங்கோ?

Mey said...

Very nice and comprehensive. This may serve as a guide for all Restaurants that claim to be serving Chettinadu Dishes.

வல்லிசிம்ஹன் said...

பாட்டே இத்தனை ருசியா இருக்கே.
ஒவ்வொரு நாளுக்கு ஒண்ணோன்னு பார்சல் அனுப்புங்கப்பா:)
சுவையோ சுவை.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...