Tuesday, August 23, 2011

தாமரையில நூலெடுத்து

தாமரையில நூலெடுத்து
தனிப்பசுவின் நெய்யுருக்கி
வாழிலையில் மாவிளக்கு
வைத்தாரோ என்கண்ணே!

மாவிளக்குவைத்து அந்த
மகராசி கொப்பாத்தா
மலரடியக் கும்பிட்டால்
மகிமையெல்லாந் தந்திருவா!

தந்திருவா என்கண்ணே
தங்கமும் வயிரமுமாத்
தரித்தவளின் தாள்பணிஞ்சா
சிரிச்சமுகம் காட்டிருவா!
திருவெல்லாம் வந்துசேரும்!!

மாமன்வந்து பாத்திருவார்
மனம்நெறஞ்சு வாழ்த்திடுவார்!
மனம்போல என்கண்ணே
தனம்பெருக்கித் தந்திருவார்!

பாட்டிவந்து பாத்திருவா
என்கண்ணே உனக்குநகை
பூட்டியழகு பாத்திடுவா
புன்னகையில் மகிழ்ந்திடுவா!

தாத்தன்வந்தால் என்கண்ணே
தனிப்பெருமை சேர்ந்துவரும்!
பூத்தமலர் போலஉன்னைப்
பொத்தி வளத்திடுவார்

மாமிவந்து பாத்திருவா
என்கண்ணே உன்னை
மடியில்வைத்துக் கொஞ்சிடுவா!

வைகையில் பெருகிவந்த
வாழைத்தார் தன்னோடு
மதுரை மல்லிகையும்
மணக்கும் பலகாரம்
களனியில வெளஞ்சதெல்லாம்
கண்கொள்ளாச் சீர்வரிசை
களிப்போடு கொண்டுவந்து
கண்மணியே உன்னைக்
காணவந்து காத்திருக்கார்!

கண்ணேஎன் கண்மணியே
கண்ணுறங்கி முன்னெழுவாய்
பொன்னேஎன் பொன்மணியே
புதுயுகமே தாலேலோ!





















Tuesday, August 9, 2011

காரைக்குடி செக்காலைச்சிவன்கோவில் தையல்நாயகி.

அஞ்செழுத் தானவன் அருகமர் தேவியே
             அன்னைதை யல்நாயகி!
நெஞ்சிலே வைத்துனை நித்தமும் துதித்திட
                நிம்மதி தரும்நாயகி!
மஞ்சளும் குங்குமம் மனையிலே நிலைத்திட
               மகிழ்வரம் தருவாயம்மா!
தஞ்சமென வந்தவர் தடையெலாம் விலகிட
              தண்ணருள் புரிவாயம்மா!
நூபுரப் பாதங்கள் நொடியிலே காட்டியே
             நொந்தவர் மகிழவைப்பாய்!
கோபுரம் சமைத்துஉன் கோவில் சிறக்கவே
              குடும்பங்கள் கூட்டிவைத்தாய்!
மனையிலுள் லோரெலாம் மகிழ்ந்துஉன்கோவிலில்
            ‘மா’ பணி செய்யவைத்தாய்
நனைகின்ற அன்பாலே நல்லருள் செய்துநீ
            ‘மா’பலம் பெருகவைப்பாய்!
நன்றாக நன்றாக நாநிலம் போற்றவே
           நல்லுயர்[வு] எய்தவைப்பாய்!
மன்றினில் ஆடுசிவன் மகிழ்மனை யாட்டியே
                அம்மைதை யல்நாயகி!




Tuesday, July 26, 2011

காரைக்குடி செக்காலைச் சிவன்கோவில் வைத்தீசுவரன்.

பையவே வந்துநீ பண்டியற்காகவே
பழவினை ஓட்டியவா!
ஐயனே உன்னடி அகத்தினில் ஏந்தினோம்
அன்பினைக்காட்டிடுவாய்!

தையலின் பாதியே தாங்கிடும் மதியொடு
கங்கையும் சூடிடுவாய்!
மெய்யெலாம் நீறணி மேலான தேவனே
மெய்சிலிர்த் துனைநாடினோம்!

உனைநாடி உனைநாடி ஒடோடி வருபவர்
உள்ளம்மகிழ வைப்பாய்!
நினைவெலாம் நீயாகி நித்தம்து தித்திட
நெஞ்சினை நெகிழவைப்பாய்!

கன்றோடு பசுவுமே காலையில் எழுந்ததும்
காண ‘கோ’ பூஜைசெய்வார்
நன்றாகச் செக்காலை நகரத்தார் கூடியே
திருப்பணி செய்யவைத்தாய்!

நன்றியில் மிதக்கிறோம் நானிலம் புகழவே
நல்லருள் தந்தாயப்பா!
மன்றினில் ஆனந்த நடனமே ஆடிடும்
மன்னனேவைத்தீஸ்வரா!

Sunday, July 17, 2011

.சிவாய நம.

நமச்சிவாய என்று
நாவினிக்கத் தினம்சொல்லி

நகரச் சிவன்கோவில்
நற்பணியை யாம்பார்க்க

அள்ளிக் கொடுக்கின்ற
அன்னை மீனாட்சி
அருகிருந்து அணிசெய்யும்
பெருமருந்தாம் சுந்தரேசர்

பெருமையுடன் எமக்களித்தார்
பேறுபெற்றோம் வாழ்க்கையிலே

சித்திரையின் முதல்நாளில்
நகரத்தார் ஒன்றுகூடி

பஞ்சாங்கம் படித்து
பஞ்சமூர்த்தி உலாவைத்து

கரைக்குஒரு மக்களென்று
கணக்குப்பாக்க ஒருவரும்
நகைப்பொறுப்பு ஒருவரும்
சுற்றுப்புறச் சூழலை
மேப்பாக்க ஒருவரும்

தேர்ந்தெடுத்துக் கோவிலுக்குத்
தொண்டுசெய்யப் பொறுப்பேற்று

தினந்தோறும் கோவில்வந்து
திறம்படவே நடத்திடுவார்!

நகரத்தார் இளஞரெல்லாம்
நற்பணிமன்றம் வைத்து
ஊழியங்கள் செய்வதுமே
உற்சாகமாய்ச் செய்வார்!

சித்திரைத் திருவிழாவும்
வைகாசி விசாகமும்
ஆனித்திரு மஞ்சனமும்
ஆடிப்பூரமுடன்
ஆவணி அவிட்டமும்
புரட்டாசி நவராத்திரி
ஐப்பசியில் அன்னாபிஷேகம்
கார்த்திகையில் தீபமும்
மார்கழியில் திருவாதிரை,
தைப்பூசக் காவடிகள்
தங்கிப் பிறப்பிடுதல்
மாசியில் வரும்மகமும்
மகாசிவ ராத்திரியும்
பங்குனியில் உத்திரமும்

இடயிடையே வேண்டுதல்
செய்து கொண்டவர்க்காக
ஒவ்வொரு மாதத்திலும்
ஒவ்வொரு நாளும்
தினம்வந்து சிவன்தாள்கள்
மனங்கொள்ள வணங்கி

அங்கியினைச் சாற்றி
அழகு நகைபூட்டி
எங்கும்நிறை பரம்பொருளின்
எழிற்கோலம் கண்பூட்டி
சிக்கெனப் பிடித்து
சிந்தையிலே தான்கூட்டி.....

பூமியிலே பிறந்ததற்கு
சாமிக்குப் பணிசெய்ய
நாமெல்லாம் செய்ததவம்!
நல்வினைப் பயனன்றோ!!















Friday, July 15, 2011

பிச்சை

மனிதன் மனிதனுக்குச் செய்யும் உதவி
மனிதாபிமானம்

இறைவன் மனிதனுக்குச் செய்யும் உதவி
கருணை

இயலாதவன் வேண்டிப்பெறுவது
தர்மம்

இறவனுக்குத் திருப்பணிசெய்ய
எப்பேர்ப்பட்ட பணம்படைத்தவரும்
மற்றவரிடம் பணம்வேண்டிப்பெறுவது
கௌரவப்பிச்சை!

அன்புப் பிச்சை
அருட்பிச்சை
ஆகமப் பிச்சை---- [ஆகமம்=வேதம்]
இளங்கிளைப் பிச்சை---[இளங்கிளை=பிள்ளை]
ஈவிரக்கப் பிச்சை
உரிமைப் பிச்சை
ஊக்கப் பி ச்சை
எண்ணப் பிச்சை
ஏடணைப் பிச்சை----[ஏடணை=விருப்பம்]
ஐக்கியப் பிச்சை--ஐக்கியம்=ஒற்றுமை]
ஒழுக்கப் பிச்சை
ஓதனப் பிச்சை---ஓதனம்=அன்னம்]
ஔசித்தியப் பிச்சை----[ஔசித்தியம்=தகுதி]

இறைவன்கொடுத்த
அறிவுப்பிச்சை!

இப்படி பிச்சைக்குப்
பொருள்சொல்லிகொண்டே
வளர்க்கலாம்!

இறைவனிடம் கையேந்துங்கள்
அவன் இல்லையென்று சொல்வதேயில்லை.

என்பது அனுபவமிக்கவர்கள்சொன்ன
அறிவுரை.
                                              வணக்கம்!

Tuesday, July 5, 2011

வேப்பமர நெழலில.

வேப்பமர நெழலில வெள்ளக்கல்லுல குந்திக்கிட்டு
கேப்பக்கூளு மோருஊத்தி உப்புப்போட்டுக் கரைச்சுக்கிட்டு
ஏப்பம்வார வரைக்கும்அத ஊத்திஊத்திக் குடிச்சாக்க
சாப்பாடே வேணாங்க சந்தோசம் வருமுங்க!
உப்பொ[உ]ரப்பா ஊறுகாயும் ஒரசிவச்ச மீங்கொளம்பும்
பருப்ப[அ]றச்சுக் கொதிக்கவச்சும் பக்குவமாச்சாப்பிடலாம்!
அப்பிடியே கூடக்கொஞ்சம் அச்சுவெல்லம் நெய்யிபோட்டு
அப்புறமுஞ் சாப்பிடலாம் அலுக்காத உணவுங்க!

கேப்பக்கூளு சாப்பிடுங்க கேடில்லாத உணவுங்க!
வேப்பமரக்காத்துல விழுந்துபடுத்து தூங்கிறுங்க!
எந்திரிச்சு வந்தாக்க ஏராளமா வேலபாக்க
எந்திரம்போல சுறுசுறுப்பு எப்பவுமே இருக்குமுங்க!

கேப்பக்கூளு சாப்பிடுங்க கேட்டுவாங்கிச் சாப்பிடுங்க!

Sunday, July 3, 2011

தாலாட்டு.

பாசி படந்தமலை என்கண்ணே
பங்குனித்தேரோடும்மலை
ஊசி படந்தமலை என்கண்ணே
உத்திராச்சம் காய்க்கும்மலை
ஏறார் மலைதனிலே என்கண்ணே
ரெண்டெருது நின்னு தத்தளிக்க
பாராமல் கைகொடுப்பார் என்கண்ணே
பழனிமலை ஆண்டவராம்!
கூசாமல் கைகொடுப்பார் என்கண்ணே
குழந்தைவடி வேலவராம்!

Related Posts Plugin for WordPress, Blogger...