Friday, February 3, 2012

கனியான கந்தவேள்!

கனிக்காகக் கனலாகிக் கடினமலை ஏறியே
                     கனியான கந்தவேளே!
இனிதான உன்பேரை இன்னமுதம் போலவே
                  இசையாகப் பாடிவாரோம்!
மெய்பூசும் நீரோடும் மெய்யான உறவோடும்
                 மெதுவாக ஓடிவாரோம்!
தைப்பூசம் தைப்பூசம் தரையிருந்து மலையேறும்
                  நதிபோல ஓடிவாரோம்!
சுட்டிக்கு ழந்தையுன் சூரிய முகம்கண்டு
            சொக்கியே நிற்கிறோமே
செட்டிக்கு ழந்தைகள் செகம்போற்ற வாழவே
           செல்வனே அருள்புரிவாய்!
கட்டிவரும் காவடியும் களிப்போடு பால்குடமும்
           காலடியில் சேர்க்கவருவார்!
அட்டியின்றி அடியவரை அருள்மழை நனையவைத்து
          ஆனந்தம் கொள்ளவைப்பாய்!
திருப்புகழும் தீந்தமிழும் தெவிட்டாத உன்பேரை
          செவிகேட்டுக் குளிர்ந்திருக்கும்!
விருப்பமுடன் பாடினால் விந்தைபல காட்டிநீ
               ஓடிவா பழனிவேலா!

Tuesday, January 17, 2012

என்ன நாஞ்சொல்லுரது? 2

மோல்மேனு குறிச்சியெல்லாம்
ஓல்டுமேனுக்[கு] ஆகிப்போச்சு
ஆல்வீ டு ரெண்டாங்கட்டு
கோல்போட்ட கிரிக்கெட்டாச்சு!
கூட்டிமொழுக ஆளுக்கெல்லாம்
ரேட்டுரொம்ப ஏறிப்போச்சுனு
போட்டிபோட்டு கூட்டுனவீ ட
கூட்டாமெ விட்டதால
கூட்டிமொழுகி வச்சவளவு
கொஞ்சங்கொஞ்சமா தூசியடஞ்சு
ராட்டிதட்டும் எடம்போல
ரணகளமா ஆயிப்போச்சு.
கோட்டைபோல வீ ட்டக்கட்டி
கொலாகலமா வாழ்ந்தவங்க
நோட்டமிட்டா மனசெல்லாம்
நொந்துபோயி நூலாவாங்க.
பாட்டன் பூட்டன் கட்டிவச்ச
பெரியவீட்ட பழுதுநீக்கி
ஓட்டமாத்தி ஒழுகல்நிறுத்தி
கரையானுக்கு மருந்தடிச்சு
தூணுசொவரு எல்லாத்துக்கும்
தூள்பறக்க வண்ணந்தீட்டி
வெடிப்புக்கெல்லாம் வெள்ளயடிச்சு
வெள்ளச்சொவர நல்லாக்கி
பர்மாத்தேக்கு நெலைக்கெல்லாம்
பக்குவமா எண்ணையடிச்சு
மோப்புக்குள்ள நுழைகையில [முகப்பு]
மொகமெல்லாம் மலரவைங்க!
சீட்டுக்கட்டுப் போலவீடு
சீக்கிரமா கட்டிரலாம்.
பாட்டன்வீடு போலநமக்கு
பக்குவமாக் கட்டவருமா!?

என்னநாஞ் சொல்லுரது
எல்லாருக்கும் நல்லாருக்கா?!

Sunday, January 15, 2012

அக்கினி ஆத்தாள் பாட்டு

தேர்போல குடும்பங்கள் சேர்த்துமே வைத்துநீ
              செகம்போற்ற வாழவைப்பாய்!
ஊர்போற்றி மெச்சவே ஒற்றுமை ஆக்கிநீ
             உள்ளங்கள் நெகிழவைப்பாய்!
மனதிலே நினைப்பவர் மாபெரும் சக்திபெற
            மாயங்கள் செய்திடுவாய்!
தனதென நினையாமல் தருகின்ற நல்லவரை
          தழைத்தோங்கச் செய்திடுவாய்!
உன்னரும் கருணையால் உள்ளம் நனைந்துமே
           உருகியே நிற்கிறோமே
என்னரும் தாயேநீ எழிற்கோலம் காட்டியே
        எங்களை ஆட்கொள்ளுவாய்!
இன்றுபோல் என்றுமே இல்லங்கள் செழித்திட
           இன்னருள் புரிந்திடுவாய்!
கன்றுபோல் எங்களைக் காக்கின்ற தெய்வமே
            அக்கினி ஆத்தாஉமையே!

     ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்
     ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்.

Friday, November 18, 2011

வயது? சாதனை! 3

அமெரிக்க துணை ராணுவ அமைச்சர் டொனால்டு குவாகல்ஸ் என்பவரின் மனைவி ஏழு பேரன், பேத்தி களை உடையவர்.அவர் விமானம் ஓட்டக்கற்று,பைலட் லைசன்ஸ் வாங்கிக் கொண்டார்.அப்போது ஒருவர் அவரிடம் ஏன் இந்தவயதில் விமானம் ஓட்ட கற்றுக்கொண்டீர்கள்? என்று கேட்டார்.
"இளமைக்கு திரும்பிப்போய் கற்பது இனி சாத்தியமில்லை என்பதால்தான்" என்றார் அந்தப்பாட்டி. பறக்கும் பட்டு பாட்டி!

நன்றி தினமலர் சிறுவர் மலர்.[அக்டோபர் ௧,௨0௧0]

Saturday, October 29, 2011

யாதுமாய்!

பட்டம் வாங்குதற்குப் பணிசெவதில்லையிவர் [துன்பப்]
பட்டவர்க்கு உதவுகின்ற பரந்தமனப் பண்பாளர்!
கிட்டும்வண்ணம் நன்மையெலாம் கேண்மையுடன் செய்திடுவார்
தொட்டதெல்லாம் பொன்னாகும் தூயமனச் செம்மலிவர்!

வங்கியிலே போட்டுவைத்து வளர்நிதியம் போதுமென்பார்!
பொங்கிவரும் செல்வத்தில் பொருளில்லார்க் கெனக்கொஞ்சம்
கங்கையெனப் பெருகிவர களிப்போடு தந்திடுவார்!
மங்கலங்கள் சேர்கஎன மனமார வாழ்த்திடுவார்!

கோவில்திருப் பணிசெய்யக் கொண்டுவந்து தந்தவர்கள்
வாழ்வில்கருப் பனின்கையால் வல்லருள்பெற் றுய்யவென
யார்க்கெனவும் வேண்டிநிற்பார் யாதுமாய் வருகஎன்று
நார்இழையும் நன்மலராய் நலம்பெருக வேண்டிநிற்பார்!

நற்குழந்தை கல்விக்கும் நலிந்தவர்க்கும் சிறிதுதவி
பெற்றவர்கள் மனம்மகிழப் பிரியமுடன் பேசிடுவார்!
தற்புகழ்ச்சி கொள்ளாத தனிப்பெருந் தகையாளர்!
சொற்புகழ்ச்சி வேண்டாத சொக்கத் தங்கமிவர்!

பெற்றவர்க்குப் பெருமகனாய்ப் பெருமையுறப் பேணியிட்டார்!
உற்றவர்க்கு உறுதுணையாய் உளமகிழப் பணிசெய்தார்!
நற்றவத்தால் பெற்றமகன் நலமுறவே வாழவேண்டி
பெற்றவர்கள் வாழ்த்திடவே பிறந்திட்டார் வாழியவே!


Wednesday, October 26, 2011

தீபாவளி.

அதிகாலை இரண்டுமணி
அவசரமாய் எழுந்துவந்து
அரிசிபருப்பு ஊறவச்சு
வெரசாப் பல்லுவெளக்கி
வெறகடுப்பப் பத்தவச்சு
வேகமாப் பருப்பெடுத்து
வெஞ்சனச்சட்டியில
வேகவச்சுட்டு
வெங்காயம் உரிச்சுவச்சுட்டு
வரமொளகா தொவையலறச்சு
பணியார மாவறச்சு [அந்தக்காலத்துல கையால
                                                                         ஆட்டுக்கல்லுலஅறைக்கிறது]
பக்குவமா ஊத்திப்புட்டு
கல்கண்டு வடைக்கும்அறைச்சுக்கிட்டு
சாம்பாரையும் வச்சுக்கிட்டு
பாலுக்காரர் வந்ததும்
காப்பிபோட்டுக் குடிச்சுப்பிட்டு
வென்னீரப் போட்டுவச்சு
பிள்ளைகள உசுப்பிவிட்டு
எண்ணதேச்சுக் குளிக்கறதுக்குள்ள
ஆத்தா ஒண்ணு -------[அம்மா]
ஒண்ணே ஒண்ணு தாங்கஆத்தா
தந்தியண்ணா சீக்கிரமா
குளிச்சுப்பிட்டு வாரனாத்தா.
ஆத்தா ஆத்தான்னு
குளிக்கவைக்க ரொம்பப்பாடு!
புதுத்துணியப் போட்டுக்கிட்டு
சமிகும்பிட்டு கோவில்போறதுக்குள்ள
பக்கத்துவீட்டுப் பசங்களோட
உடையழகப் பகுந்துக்கிட்டுக்
கோவில்போயிவந்த ஒடன
பலகாரஞ்சாப்பிட்டதும்
வெடியவெடிக்க ஓடிப்போயி
அங்கஒரு சின்னச்சண்டைபோடுக்கிட்டு
சண்டைபோடாம வெடிங்கப்பான்னு
சொன்னவார்த்தைக்கு கட்டுப்பட்டு
எப்போதும் எங்களுக்கு
தொந்தரவே கொடுக்காமல்
வளந்தபிறகு வருசத்துக்கு
ஒவ்வொரு பிள்ளையா
கல்லூரிக்கு போயிவந்து
வேலைக்கும்போன பிறகு
கலியாணம் முடிஞ்சகையோட
தனிக்குடித்தனமும் வச்சுப்பிட்டு
ஐயாவைப் பாத்துக்கிட்டு
ஆபீசுக்கு போயிவந்துக்கிட்டு இருக்கயில
ஐயாவின் காலம்முடிஞ்சு
அவுகளும் போனபின்னால
அப்பாவுக்கும் பணிஓய்வு!
இனிமேல என்னபண்ண?
ஒண்ணுமே புரியலயேனு
சோந்துபோயி இருக்கயில
ஐயனாரு கோயில
கும்பாபிசேகம்பண்ண
வேலபோட்டுக் குடுத்தாரு ஐயனாரு!
வெறும்பொழுதாப் போக்காம
வெலையில்லாப் பணியாச்சு!
கும்பபிசேகம் முடிஞ்சதும்.
புரவியெடுப்பு வேலஒண்ணப்
புதுசாகக் கொடுத்தாரு!
அதுமுடிஞ்சு வாரதுக்குள்ள
நகரச் சிவன்கோவில்
மேல்பார்க்கும்நற்பணியை
நம்சிவனார் தந்துவிட்டார்!
இடையிடையே பஞ்சாயத்தும்
முடிஞ்சவரை மற்றவர்க்கு
முகங்கோணா உதவிகளும்!
இனியென்ன வாழ்க்கையிலே?
இப்படியே இருந்துவிட்டு சிவன்
பொற்பாதம் தனைக்காண
முற்றோதல் செய்திடுவோம்!

ஒவொரு தீபாவளியும்
குழந்தைகளுடன் கொண்டாடிய
நினைவின் பேரலைகள்!
முகிழ்க்கும் போதெல்லாம்
முன்நின்று மகிழ்விக்கும்!!

Tuesday, October 11, 2011

வயது? சாதனை! 2

வகுப்புத் தோழர்களும்
தோழியரும் மும்முரமாகத்
தேர்வு எழுதுகிறார்கள்
தேர்ச்சிபெற்றால்
வாங்கும் பட்டம்
சித்தாந்த நன்மணி!
சித்தாந்த ரத்தினம்!

 மாணவர்கள் வயது
எழுபது
எண்பதுக்குமேல்!
Related Posts Plugin for WordPress, Blogger...