Friday, July 15, 2011

பிச்சை

மனிதன் மனிதனுக்குச் செய்யும் உதவி
மனிதாபிமானம்

இறைவன் மனிதனுக்குச் செய்யும் உதவி
கருணை

இயலாதவன் வேண்டிப்பெறுவது
தர்மம்

இறவனுக்குத் திருப்பணிசெய்ய
எப்பேர்ப்பட்ட பணம்படைத்தவரும்
மற்றவரிடம் பணம்வேண்டிப்பெறுவது
கௌரவப்பிச்சை!

அன்புப் பிச்சை
அருட்பிச்சை
ஆகமப் பிச்சை---- [ஆகமம்=வேதம்]
இளங்கிளைப் பிச்சை---[இளங்கிளை=பிள்ளை]
ஈவிரக்கப் பிச்சை
உரிமைப் பிச்சை
ஊக்கப் பி ச்சை
எண்ணப் பிச்சை
ஏடணைப் பிச்சை----[ஏடணை=விருப்பம்]
ஐக்கியப் பிச்சை--ஐக்கியம்=ஒற்றுமை]
ஒழுக்கப் பிச்சை
ஓதனப் பிச்சை---ஓதனம்=அன்னம்]
ஔசித்தியப் பிச்சை----[ஔசித்தியம்=தகுதி]

இறைவன்கொடுத்த
அறிவுப்பிச்சை!

இப்படி பிச்சைக்குப்
பொருள்சொல்லிகொண்டே
வளர்க்கலாம்!

இறைவனிடம் கையேந்துங்கள்
அவன் இல்லையென்று சொல்வதேயில்லை.

என்பது அனுபவமிக்கவர்கள்சொன்ன
அறிவுரை.
                                              வணக்கம்!

Tuesday, July 5, 2011

வேப்பமர நெழலில.

வேப்பமர நெழலில வெள்ளக்கல்லுல குந்திக்கிட்டு
கேப்பக்கூளு மோருஊத்தி உப்புப்போட்டுக் கரைச்சுக்கிட்டு
ஏப்பம்வார வரைக்கும்அத ஊத்திஊத்திக் குடிச்சாக்க
சாப்பாடே வேணாங்க சந்தோசம் வருமுங்க!
உப்பொ[உ]ரப்பா ஊறுகாயும் ஒரசிவச்ச மீங்கொளம்பும்
பருப்ப[அ]றச்சுக் கொதிக்கவச்சும் பக்குவமாச்சாப்பிடலாம்!
அப்பிடியே கூடக்கொஞ்சம் அச்சுவெல்லம் நெய்யிபோட்டு
அப்புறமுஞ் சாப்பிடலாம் அலுக்காத உணவுங்க!

கேப்பக்கூளு சாப்பிடுங்க கேடில்லாத உணவுங்க!
வேப்பமரக்காத்துல விழுந்துபடுத்து தூங்கிறுங்க!
எந்திரிச்சு வந்தாக்க ஏராளமா வேலபாக்க
எந்திரம்போல சுறுசுறுப்பு எப்பவுமே இருக்குமுங்க!

கேப்பக்கூளு சாப்பிடுங்க கேட்டுவாங்கிச் சாப்பிடுங்க!

Sunday, July 3, 2011

தாலாட்டு.

பாசி படந்தமலை என்கண்ணே
பங்குனித்தேரோடும்மலை
ஊசி படந்தமலை என்கண்ணே
உத்திராச்சம் காய்க்கும்மலை
ஏறார் மலைதனிலே என்கண்ணே
ரெண்டெருது நின்னு தத்தளிக்க
பாராமல் கைகொடுப்பார் என்கண்ணே
பழனிமலை ஆண்டவராம்!
கூசாமல் கைகொடுப்பார் என்கண்ணே
குழந்தைவடி வேலவராம்!

Friday, June 24, 2011

அன்பே சிவம்

வரவுசெலவு தெரியாத
வாழ்வின் வசந்தங்கள்

வருங்காலம் அறியாது
வயிற்றுப் பசிக்குமட்டும்

வயிறுதட்டிக் கையேந்தி......
வகைதெரியா அலங்கோலம்

வயிறு நிறைந்துவிட்டால்...
வந்துதிக்கும் குதூகலம்!

வாங்காத சீட்டுக்கு
வழியில் இறக்கிவிடும்வரை

உல்லாசமான ஊர்ப்பயணம்
புகைவண்டியில் தொடரும்பயணம்

இரவுப்பசிக்கு ஈன்றபிஞ்சுகள்
இறக்கைமுளைக்காத இளம் குஞ்சுகள்

இவர்களைப்போல இன்னும்
எத்தனை பிஞ்சுகளோ?!

அத்தனை குஞ்சுகளும்
ஆனந்தக் கூடடைய

இறவனை வணங்கிநாம்
இணைந்து வேண்டுவோம்

அன்பே சிவம்
சிவானந்த மயம்

சிவாயநம. சிவாயநம.
நமச்சிவாய.


Friday, June 10, 2011

கோவிலிலே சிலை நிறுவல்.

மறுநாள் காலையிலே
மக்களெல்லாம் ஒன்றுகூடி
புரவிப் பொட்டல்வந்து

குடைபிடித்துக் கொடிபிடித்து
கொம்பூதிக் குலவையிட்டு




கொட்டு முழங்க
அதிர்வேட்டு வான்பிளக்க

மறுபடியும் தோள்களிலே
மகிழ்வோடு ஏற்றிவந்து















கோவிலுக்கு உள்ளே
கோலாகலமாய் நிறுத்தி















ஆளுயர மாலைகளும்
அற்புதமாய்ப் பட்டுகளும்

அன்புடனே அணிவித்து
ஆவலுடன் பார்த்திருந்தார்

ஊர்விருந்து வைத்து
உளமகிழ வீடுவந்தார்

வெட்டிய மின்னலுடன்
கொட்டிய மழையோ!
கோடிக்குக் கோடிபெறும்!!

ஒருவாரம் முடிந்தபின்னே
திருவிழாவும் முடிந்ததென

மாலை கழட்டுதலும்
மக்களுக்குப் பாராட்டும்!




  
இப்பிறவி எடுத்தபயன்
இனியவிழா கண்டோம்நாம்

எப்பிறவி எடுத்தாலும்
அப்போதும் துணையிருந்து

ஆதீனமிளகி ஐயன்
சோதியாய் வழிகாட்டிடுவீர்









Thursday, June 2, 2011

புரவியெடுப்பு . முதல்நாள்.

அற்புதமாய் எழுந்த
அழகுச் சிலைசெய்து

அச்சுப் பிசகாமல்
ஆர்வமுடன் வண்ணம் தீட்டிய

வேளார்க்கு மரியாதை
வளமாகச் செய்து

மக்களெல்லாம் வந்திருந்து
மகிழ்வோடு பார்த்திருக்க

வாட்டமாக மூங்கிலிலே
வைக்கோல் பிரிகட்டி

தோள்களிலே தூக்கிவைத்து
துவளாமல் தூக்கிவர


வாள்பிடித்துக் கருப்பசாமி
வழிகாட்டி அழைத்துவர

கொட்டும் அதிர்வேட்டும்
கொம்பூதிக் குடைபிடிக்க

மயிலாட்டம் பெண்இருவர்
ஒயிலாட்டம் ஆடிவர


சாமியாடி வாக்குச்சொல்ல
பூமியெல்லாம் மழைதூற

புரவிப் பொட்டலுக்குள்
பூப்போலக் கொண்டுவந்து


கூடிக் குலவையிட்டு
கொட்டகைக்குள் நிறுத்திவைத்தார்!

கோவிலிலே முன்பே
குட்டிவெட்டிப் பூசையிட்டதனை

அன்னம் பெருக்கி
அனைவருக்கும் உண்டியிட்டு

நாளை வருவதற்கு
நலமுடனே வீடுவந்தார்!

Wednesday, June 1, 2011

புரவி எடுப்புக்கு நாள்வைத்தல்.

முன்பே பேசிவைத்து
முடிவு செய்தபடி

நகரத்தார் கிராமத்தார்
கோவிலிலே ஒன்றுகூடி

நாள்வைக்க நாள்பார்த்து
முப்பலி பூசைபோட்டு

பிள்ளையார் பெருமாளுக்கு
பிரியமுடன் தளிகையிட்டு

அம்பாள், ஆஞ்சநேயர்,
முனியையா, கட்டுக்கருப்பர்

அத்தனைக்கும் மாலைசாத்தி
அருச்சனைகள் செய்துவைத்து

மட்டைகட்டிக் கொண்டுவந்து---[பனைஓலையில் செய்வது]
மக்களுக்கு அன்னமிட்டு

கட்டுக் கோப்பாக
காளாஞ்சி கொடுத்து

இன்றுமுதல் ஏழுநாளும்
ஒவ்வொரு நாளுக்கும்

ஆறு ஊர் நகரத்தார்
ஊரோடு உயர்கவென

வேளார் விருப்பமுடன்
அருச்சனைகள் செய்வித்து

நகரத்தார் படித்திறத்தை
நன்றாகச் செய்துவைத்து

ஒவ்வொரு நாளுக்கும்
உடன்வந்து பிரசாதம்
உவப்புடனே தந்திடுவார்!!

ஊர்மக்கள் எல்லோரும்
ஊழியங்கள் செய்திடுவார்

எட்டாவது நாளில்
எழில்மிகு புரவியெடுப்பு!

[பனை ஓலையில் செய்து கொண்டுவரும்
இந்த மட்டையை செய்து கொண்டுவராவிட்டால்
பெரிய பிரளயம் மதிரி சண்டை வந்துவிடும்.
ஆகையால் உணவிடுவதற்குமுன்
மட்டை வந்துவிட்டதா?! என்று
கவனம்செய்துகொள்ளவேண்டு]ம்



Related Posts Plugin for WordPress, Blogger...