Sunday, February 1, 2015

மலைமேல் மலைமேல் காவடிகள்!

மலைமேல் மலைமேல் காவடிகள்
மகிழ்வுடன் ஆடி வருகுதையா!
அலைபோல் அலைபோல் மக்கள் கூட்டம்
அழகாய் கூடி வருகுதையா!
மலையோன் மகனைக் காணுதற்கு
மழைபோல் பெருகி வருகுதையா!
வலையில் மீன்போல் உனைக்காண
வரங்கள் வேண்டி வருகுதையா!
தலைமேல் தலைமேல் பால்குடங்கள்
தளும்பத் தளும்ப வருகுதையா!
விலையில் அன்பால் வருகுதையா!
விரைந்தே ஓடி வருகுதையா!!
சேவலும் மயிலும் சேர்ந்துவர
பாவலர் பாடல் பாடிவர
காவலாய் வேலும் துணைவரவே
காணவரும் உனது அடியவர்க்கு
குருவாய் வருவாய் குகனே மக்கள்
குற்றம் எல்லாம் பொறுத்தருள்வாய்!
தருவாய் தருவாய் நன்மையென
தாள்கள் பணிந்தோம் தந்தருள்வாய்!
பழனி மலையில் இருப்பவனே!
பக்தர் அன்புக்கு அருள்குகனே!
கழனி விளைய வளம்பெருக
கண்கள் கருணைபொழிந்திடுவாய்!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...