Thursday, December 3, 2020

செட்டிநாட்டுப் பெரியவீடுகள்

                                    உ

                                  சிவமயம்

வணக்கம்

வருக வருக, வாழ்க வளமுடன்!

உங்களை மகிழ்வுடன் வரவேற்கிறோம்.

அதிகாலை எழுந்து வாசலில் பசுவின்சாணம்தெளித்து கோலமிட்டு இலக்குமியை வரவேற்பது எங்கள் வழக்கம்.

முகப்பூ

உள்ளே வந்ததும் முகம் மலர வரவேற்று நாற்காலி அல்லது இந்த முகப்புத் திண்ணையில் அமர வைத்து (ரிலாக்ஸ்) முதலில் நீர்தந்து உபசரிப்பது  வழக்கம்..வந்தவர்கள் முதலில்கொஞ்சம் ஓய்வெடுக்கும்போதே முகப்பின் அமைப்பு அழகு இவற்றைப் பார்த்து முகப்பின் அழகிலும் உபசரிப்பிலும் அகமும் முகமும் மலர்ந்து மகிழ்வதால் இதற்கு முகப்பூ என்று பெயர்வைத்திருப்பார்கள்போலும்.

முகப்பு கீழ்ப்பத்தியில் காலணிகளை கழற்றி வைத்து விட்டுத்தான் மேலேவரவேண்டும். மேல் திண்ணை அல்லது முகப்புப் பெட்டக சாலையில் ஆண்கள்மட்டுமே அமர்வார்கள். பெண்கள் அமர்வதில்லை.

நிலை

நிலையின் வேலைப்பாடுகள்பார்ப்பதற்கே தலைநிமிர்ந்து அண்ணாந்து பார்க்கவைத்தார்கள் வம்சம் நிலைக்கவேண்டும் நல்லவை நடக்கவேண்டும் என திருக்கல்யாணம், சந்தானகோபாலர் போன்றவேலைப்பாடுகளுடன் நிலை அமைத்தார்கள்

வளவும் வாசலும்

வளவுப் பெட்டகசாலை

பணம்வைக்கும் பெட்டகம்வைக்குமிடம்

முக்கியநிகழ்வுகள் எல்லாவற்றிற்கும் இங்கு ஆண்கள்மற்றும்பெரியவர்கள் கூடி முடிவுஎடுப்பார்கள்.பெண்கள் மரியாதைகருதி கீழ்ப்பத்தியிலேயே இருந்து கலந்துகொள்வார்கள்.                                                                                   வளவு

வீட்டின் நடுப்பகுதி வளவு என்று சொல்வது.

வளவின் பத்தியில் (பக்கவாட்டில்) இரண்டுபக்கமும்

அறைகள் உண்டு.ஒருபக்கம் ஒற்றை அறை,மறுபக்கம்

இரட்டைஅறை(ஒத்தைவீடு,ரெட்டைவீடு)இருக்கும்

வளவிலுள்ள அறைகளில் ஒன்றுமட்டும் சாமிஅறையாகவைத்துக்கொண்டு மற்ற அறைகளை திருமணம் செய்த பிள்ளைகளுக்கு தனித்தனியாக ஒரு அறை தந்துவிடுவார்கள். வளவில் ஓடிப்பிடித்து விளையாட பிள்ளைகள் நிறைய வேண்டுமென்றும், விசேடங்கள் நடத்தும்போது நிறையப்பேர் வந்து இருக்கவேண்டுமென்றும் ஒவ்வொருவீட்டிலும் வளவு பெரியதாகவே கட்டியிருப்பார்கள்.

சாமிவீட்டில், சாமிகளுக்கும்,மற்றும் 

முன்னோர்களை நினைத்து, சிலபேர் ஆண்டுக்கு ஒருமுறை, சிலபேர் திருமணம்,அறுபது,எழுபது,,எண்பது,நூறாவது பிறந்தநாள்மற்றும்,மற்ற விழாக்களுக்கு, சாமிக்கு பிடித்ததை சாமி வீட்டின்முன் அடுப்புமூட்டி சமையல்செய்து சாமிக்குமுன்னால் பள்ளயம்இட்டு புதுஉடைகள் வாங்கிவைத்து பழங்கள், பால்பழம்வைத்து சாமிகும்பிட்டு புதுஉடைகளைபேழையில் வைத்துவிட்டு முன்பு படைத்தபோது வைத்த உடகளை எடுத்து அணிந்துகொள்வார்கள்.பிறகு படைத்த உணவை

எல்லோரும் உண்பார்கள்

பள்ளயம்=படையல்

வளவு வாசல், மற்றும் மழைநீர் சேமிப்பு

மழை பெய்ததும் வளவில் நான்கு மூலைகளிலும் தண்ணிக்கிடாரம்வைத்து மழைநீரைபிடித்து சேமித்து நீண்டநாட்களுக்கு உபயோகப்படுத்துவார்கள்.சிலர் மழைபெய்யும்போதே குளிப்பார்கள்.உடம்புக்கு மிகவும்நல்லது.மழைநீர் வெளியேறும்இடத்தில் வெளியேறாமல் அடைத்துவிட்டு தேங்கும் நீரில் துணிதுவைப்பார்கள்.மழைபெய்யும்போதே வளவையும் கழுவிவிடுவார்கள்.வெளியேறும் நீரையும் சேமித்து பூமியில் இறங்கும்படிசெய்து மழைநீர் சேமிப்பாக்கிவிடுவார்கள்.


1 comment:

Unknown said...

நல்ல விளக்கம். நன்றி அண்ணி

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...