Saturday, May 12, 2012

ஞாபகம் வருதே!

விதைப்பும் அறுவடையும் இல்லாத
விவசாயிகளின் விடுமுறைநாட்கள்
விதைப்பில்லாச் சித்திரை
அறுவடையில்லா வைகாசி!
நாம் மறந்துபோன
வாழ்க்கையின் மறுபக்கம்.
கள்ளரை விரட்டியடிக்க
கைக்கொரு ஆயுதம்வைத்திருக்கும்
காவல் தெய்வங்களுக்கு
பொங்கலிட்டுக் குட்டிவெட்டி
பங்குவைத்துப் பாசமுடன்
சொந்தங்கள் அழைத்து
சுறுசுறுப்பாய் விருந்துவைத்து
சண்டையிட்ட உறவெல்லாம்
கண்பட்டு விடும்போல
களிப்போடு ஒன்றுகூடி
கெண்டைக்கறி உண்ணுகின்ற
கண்கொள்ளாக் காட்சி!
கொஞ்சிவரும் குழந்தைக்கு
பஞ்சுமிட்டாய் நுங்குவண்டி!
விடலைப் பசங்களுக்கு
உல்லாசப் பாட்டிசைத்து
உசுப்பேற்றும் ஒலிபெருக்கிகள்!
கரகாட்டம் ஒயிலாட்டம்!
கண்கவரும் மயிலாட்டம்!
வளைக்கரங்கள் ஏந்திவரும்
முளப்பாரி மதுக்குடங்கள்!
களைப்பில்லாக் கண்விருந்து!
வறுத்துத் தோலெடுத்து
உப்புப்போட்டுத் தண்ணியில
ஊறவச்ச புளியங்கொட்டை!
அள்ளித் தின்றுகொண்டே
அயராமல் முளிச்சிருந்து
ஆண்டாண்டு பார்த்தாலும்
அலுக்காத நாடகங்கள்!
வள்ளிதிருமணமும்
அரிச்சந்திரா பவளக்கொடி!
ஆண்டுக்கு ஒருமுறைதான்
அனுபவித்துப் பாருங்களே!

1 comment:

இராஜராஜேஸ்வரி said...

இனிய அன்னையர் தின வாழ்த்துகள்..

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...