Sunday, September 18, 2011

மானகிரி முருகன்!

ஆனைமுகன் தம்பியே மானகிரி சிறக்கவே
               மகிழ்வுடன் வந்தமர்ந்தாய்!
ஆனதொழில் அனைத்துமே ஆல்போல் தழைத்திட
              அருள்செய்த ஆறுமுகமே!
மன்புகழ் வாழ்வமைய மகிழ்மனை வேண்டியே
             மக்களும் நாடிவருவார்!
ஒன்பது கோள்களும் ஒன்றாகத் துணையுடன்
             உல்லாசக் காட்சிதருவார்!
நன்றாக மயில்மீது நங்கைதெய்வானையும்
           வள்ளியுடன் கோவில்கொண்டாய்!
மன்றாடும் உன்னப்பன் மகிழ்வோடு வந்துனது
           பக்கத்தில் அமரவைத்தாய்!
ஊரோடும் உறவோடும் உன்தேரை வடம்பிடிக்க
           ஊராரை ஒன்றுசேர்த்தாய்!
பேரோடு புள்ளிகள் பெருகியே வளர்ந்திட
          பிரியமுடன் அருள்புரிவாய்!    
மானகிரி நகரத்தார் மகிழ்வோடு பணிசெய்ய
          மாபெரும் சக்திதந்தாய்!
வானுயர் புகழோடு வளர்கல்வி செல்வங்கள்
          வாரியே வழங்கிடவா!

Thursday, September 15, 2011

ஐயா பத்திரம்!

ஐயாவின் தலையினிலே
ஆயிரமாய் வெள்ளிமுடி
கையாலே எடுத்ததனில்
கடகாமும் பண்ணிடலாம்
பையவே கொஞ்சம்
பாத்திரமும் பண்ணிடலாம்!
பையா பேராண்டி
பத்திரமாப் பாத்துக்க![ஐயாவை!!]


Friday, September 2, 2011

ஆடியில தள்ள்ளுபடி

ஆடியில தள்ளுபடி
ஆடையெல்லாம் பறக்குதுன்னு
ஓடிவந்து வாங்கச்சொல்லி
ஒலிபெருக்கி வச்சாங்க
தேடிப்போயித் தெனாவட்டா
தெளிஞ்சு எடுக்கமுடியல!
தள்ளிமுள்ளி உள்ளபோயி
தரம்பாக்க முடியல
அள்ளிக்கிட்டுப் போறசனம்
அடிபுடியா இருக்குது!
உள்ளபிரிச்சுப் பாத்தாக்க...

கோடிச்சேலைக் குள்ளஒரு
கோடுபோல அழுக்கிருக்கு!
மடிப்புக்குள்ள பொட்டுப்போல
குட்டிக்குட்டி ஓட்டை இருக்கு!!

தள்ளுபடி தள்ளுபடின்னு
தள்ளாத வயசுலநாம
தள்ளாடி வாங்கப்போனா..
தள்ளியே விட்டுட்டாங்க!

தள்ளுபடியே வேணாமுங்க
தள்ள்ளியே இருப்போமுங்க!
வழக்கம்போல புதுச்சேலய
தறிக்கிப்போயி வாங்கலாங்க.

என்னநாஞ் சொல்லுறது
எல்லாருக்கும் நல்லாருக்கா?!

நான் பிறந்து இத்தனை ஆண்டுகளில்
ஒருமுறைகூட தள்ளுபடியில்
எந்தசாமானும் வாங்கியதில்லை
இப்போதுதான் முதல்முறையாக
சேலைவாங்கிவந்த அனுபவம் இது!

Tuesday, August 23, 2011

தாமரையில நூலெடுத்து

தாமரையில நூலெடுத்து
தனிப்பசுவின் நெய்யுருக்கி
வாழிலையில் மாவிளக்கு
வைத்தாரோ என்கண்ணே!

மாவிளக்குவைத்து அந்த
மகராசி கொப்பாத்தா
மலரடியக் கும்பிட்டால்
மகிமையெல்லாந் தந்திருவா!

தந்திருவா என்கண்ணே
தங்கமும் வயிரமுமாத்
தரித்தவளின் தாள்பணிஞ்சா
சிரிச்சமுகம் காட்டிருவா!
திருவெல்லாம் வந்துசேரும்!!

மாமன்வந்து பாத்திருவார்
மனம்நெறஞ்சு வாழ்த்திடுவார்!
மனம்போல என்கண்ணே
தனம்பெருக்கித் தந்திருவார்!

பாட்டிவந்து பாத்திருவா
என்கண்ணே உனக்குநகை
பூட்டியழகு பாத்திடுவா
புன்னகையில் மகிழ்ந்திடுவா!

தாத்தன்வந்தால் என்கண்ணே
தனிப்பெருமை சேர்ந்துவரும்!
பூத்தமலர் போலஉன்னைப்
பொத்தி வளத்திடுவார்

மாமிவந்து பாத்திருவா
என்கண்ணே உன்னை
மடியில்வைத்துக் கொஞ்சிடுவா!

வைகையில் பெருகிவந்த
வாழைத்தார் தன்னோடு
மதுரை மல்லிகையும்
மணக்கும் பலகாரம்
களனியில வெளஞ்சதெல்லாம்
கண்கொள்ளாச் சீர்வரிசை
களிப்போடு கொண்டுவந்து
கண்மணியே உன்னைக்
காணவந்து காத்திருக்கார்!

கண்ணேஎன் கண்மணியே
கண்ணுறங்கி முன்னெழுவாய்
பொன்னேஎன் பொன்மணியே
புதுயுகமே தாலேலோ!





















Tuesday, August 9, 2011

காரைக்குடி செக்காலைச்சிவன்கோவில் தையல்நாயகி.

அஞ்செழுத் தானவன் அருகமர் தேவியே
             அன்னைதை யல்நாயகி!
நெஞ்சிலே வைத்துனை நித்தமும் துதித்திட
                நிம்மதி தரும்நாயகி!
மஞ்சளும் குங்குமம் மனையிலே நிலைத்திட
               மகிழ்வரம் தருவாயம்மா!
தஞ்சமென வந்தவர் தடையெலாம் விலகிட
              தண்ணருள் புரிவாயம்மா!
நூபுரப் பாதங்கள் நொடியிலே காட்டியே
             நொந்தவர் மகிழவைப்பாய்!
கோபுரம் சமைத்துஉன் கோவில் சிறக்கவே
              குடும்பங்கள் கூட்டிவைத்தாய்!
மனையிலுள் லோரெலாம் மகிழ்ந்துஉன்கோவிலில்
            ‘மா’ பணி செய்யவைத்தாய்
நனைகின்ற அன்பாலே நல்லருள் செய்துநீ
            ‘மா’பலம் பெருகவைப்பாய்!
நன்றாக நன்றாக நாநிலம் போற்றவே
           நல்லுயர்[வு] எய்தவைப்பாய்!
மன்றினில் ஆடுசிவன் மகிழ்மனை யாட்டியே
                அம்மைதை யல்நாயகி!




Tuesday, July 26, 2011

காரைக்குடி செக்காலைச் சிவன்கோவில் வைத்தீசுவரன்.

பையவே வந்துநீ பண்டியற்காகவே
பழவினை ஓட்டியவா!
ஐயனே உன்னடி அகத்தினில் ஏந்தினோம்
அன்பினைக்காட்டிடுவாய்!

தையலின் பாதியே தாங்கிடும் மதியொடு
கங்கையும் சூடிடுவாய்!
மெய்யெலாம் நீறணி மேலான தேவனே
மெய்சிலிர்த் துனைநாடினோம்!

உனைநாடி உனைநாடி ஒடோடி வருபவர்
உள்ளம்மகிழ வைப்பாய்!
நினைவெலாம் நீயாகி நித்தம்து தித்திட
நெஞ்சினை நெகிழவைப்பாய்!

கன்றோடு பசுவுமே காலையில் எழுந்ததும்
காண ‘கோ’ பூஜைசெய்வார்
நன்றாகச் செக்காலை நகரத்தார் கூடியே
திருப்பணி செய்யவைத்தாய்!

நன்றியில் மிதக்கிறோம் நானிலம் புகழவே
நல்லருள் தந்தாயப்பா!
மன்றினில் ஆனந்த நடனமே ஆடிடும்
மன்னனேவைத்தீஸ்வரா!

Sunday, July 17, 2011

.சிவாய நம.

நமச்சிவாய என்று
நாவினிக்கத் தினம்சொல்லி

நகரச் சிவன்கோவில்
நற்பணியை யாம்பார்க்க

அள்ளிக் கொடுக்கின்ற
அன்னை மீனாட்சி
அருகிருந்து அணிசெய்யும்
பெருமருந்தாம் சுந்தரேசர்

பெருமையுடன் எமக்களித்தார்
பேறுபெற்றோம் வாழ்க்கையிலே

சித்திரையின் முதல்நாளில்
நகரத்தார் ஒன்றுகூடி

பஞ்சாங்கம் படித்து
பஞ்சமூர்த்தி உலாவைத்து

கரைக்குஒரு மக்களென்று
கணக்குப்பாக்க ஒருவரும்
நகைப்பொறுப்பு ஒருவரும்
சுற்றுப்புறச் சூழலை
மேப்பாக்க ஒருவரும்

தேர்ந்தெடுத்துக் கோவிலுக்குத்
தொண்டுசெய்யப் பொறுப்பேற்று

தினந்தோறும் கோவில்வந்து
திறம்படவே நடத்திடுவார்!

நகரத்தார் இளஞரெல்லாம்
நற்பணிமன்றம் வைத்து
ஊழியங்கள் செய்வதுமே
உற்சாகமாய்ச் செய்வார்!

சித்திரைத் திருவிழாவும்
வைகாசி விசாகமும்
ஆனித்திரு மஞ்சனமும்
ஆடிப்பூரமுடன்
ஆவணி அவிட்டமும்
புரட்டாசி நவராத்திரி
ஐப்பசியில் அன்னாபிஷேகம்
கார்த்திகையில் தீபமும்
மார்கழியில் திருவாதிரை,
தைப்பூசக் காவடிகள்
தங்கிப் பிறப்பிடுதல்
மாசியில் வரும்மகமும்
மகாசிவ ராத்திரியும்
பங்குனியில் உத்திரமும்

இடயிடையே வேண்டுதல்
செய்து கொண்டவர்க்காக
ஒவ்வொரு மாதத்திலும்
ஒவ்வொரு நாளும்
தினம்வந்து சிவன்தாள்கள்
மனங்கொள்ள வணங்கி

அங்கியினைச் சாற்றி
அழகு நகைபூட்டி
எங்கும்நிறை பரம்பொருளின்
எழிற்கோலம் கண்பூட்டி
சிக்கெனப் பிடித்து
சிந்தையிலே தான்கூட்டி.....

பூமியிலே பிறந்ததற்கு
சாமிக்குப் பணிசெய்ய
நாமெல்லாம் செய்ததவம்!
நல்வினைப் பயனன்றோ!!















Related Posts Plugin for WordPress, Blogger...