Wednesday, September 9, 2015

பிள்ளையார்பட்டிப் பிள்ளையார்.

பிள்ளையார் பட்டிவளர் பெருநிதியே கற்பகமே!
அள்ளிஅள்ளித் தருகின்ற அருள்நிதியே அற்புதமே!
உள்ளமார் அன்புக்கு உவந்திடுவாய் பொற்பதமே!
வள்ளல்உனை நாடிவந்தோம் வாழ்த்திடுவாய் சிற்பரமே!

கல்லிலே முளைத்துவந்த கவின்தமிழே கலையழகே!
கையிலே சிவனைவைத்து களிகூரும் சிலையழகே!
புல்லிலே மாலையிட்டால் பொலிவுதரும் மலையழகே!
பொய்யெலாம் போயகல பொங்குமருள் தருவாயே!

சொக்கனையும் அம்மையையும் சொகுசாக வலம்வந்து
பக்குவமாங் கனிபெற்றாய் பாரேத்தும் தந்தமுகா!
எக்காலும் உனைத்தொழுது ஏத்திவந்த பேர்களுக்கு
மிக்கபுகழ் தான்தந்து மிடுக்கோடு வாழவைப்பாய்!

பாலாலும் தேனாலும் பக்குவமாய் தயிராலும்
பன்னீரும் இளநீரும் பழவகையும் கலந்துவைத்து
ஐயனுக்கு அபிசேகம் சென்னியிலே பூவைத்து
செய்தன்பால் போற்றினார்க்குச் செய்தொழிலை  சிறக்கவைப்பாய்!

ஆவணியின் சதுர்த்தியிலே ஆனைமுகன் திருவிழா!
ஆவலுடன் மக்களெல்லாம் அணிதிரளும் பெருவிழா!
பாவணிகள் பாடிவரும் பெரும்புலவர் வரும்விழா!
பாவையர்கள் நோன்பேற்க பலன்மிகவே தரும்விழா!

உருவத்தில் முழுவதுமாய் உயர்சந்தனக் காப்பினிலே
வருடத்தில் ஒருமுறைதான் வந்தழகைக் காண்பீரே!
வருந்துன்பம் விலகவைத்து வாழ்க்கையினைச் சீராக்கும்
பெருமைகள் சொல்லரிய! பேரருளைப் பெறுவீரே!!

அற்புதக் கலைகளெல்லாம் அவையினிலே அரங்கேற்றம்!
ஐயன்மேல் கவிபுனைந்தால் ஆனந்தப் பூந்தோட்டம்!!
கற்பகத்தின் தனிப்பெருமை காணவரும் பெருங்கூட்டம்!!!
கையெல்லாம் வடம்பிடிக்க கட்டழகுத் தேரோட்டம்!!!!

Sunday, September 6, 2015

மாலைப் பொழுதழகு.

1963ம் ஆண்டு காரைக்குடி மீ.சு.உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது எழுதியது.ஆண்டுமலரில் வெளிவந்தது.அச்சில் ஏறிய முதல் கவிதை!

திடலாய்க் காணும் கடலே உடலாய்!
பிடிபடா மின்னல் துடியிடை யாக!
நீல விசும்பே கோல உடையாய்!
ஆழக் கடலலை அழகுக் குழலாய்!
குளிரும் வெண்மதி குலவிடும் முகமாய்!
ஒளிரும் விண்மீன் எழிலின் மலராய்!
பெற்றவள் வந்தாள் பேரழகுடனே!
நற்றவ மாலைப் பொழுதே வாழி! 

Wednesday, September 2, 2015

எனது முதல் சாமிபாட்டு.

தொந்திக் கணபதி உன் தூய திருவடியை
நம்பிக் கைதொழுதேன் நாளும் துணைவருக!

கோலமயில் மீதிருக்கும் நீதிவடிவானாய்!
கொலமதி போல்முகனே ஆறுமுகமானாய்!

ஞாலமதில் நீயெனக்கு நல்லருளைத் தாதா!
பாலகனே உன்னடிகள் பணிந்தேன்நீ வாவா!

வெள்ளிவேலை அள்ளிவந்து வெண்ணீறு தருவாய்!
புள்ளிமயில் ஏறிவந்து பூந்தமிழாய் வருவாய்!

பிள்ளையென என்னையெண்ணி பேசுமொழிஅருள்வாய்!
நல்லவனே வல்லவனே உள்ளமுதே உயிராய்!


Tuesday, September 1, 2015

அன்னை அன்னை அன்னை!

எனது இரண்டாவது கவிதை
பாரதியாரைப்போல எழுதமுயற்சித்தது

அன்னை அன்னை அன்னை
அன்புடன் அமுதம் ஊட்டிவளர்த்தாள்
என்னை என்னை என்னை!

தந்தை தந்தை தந்தை
தாமரை மகளின் கலையினை ஈந்தார்
எந்தை எந்தை எந்தை!

தம்பி தம்பி தம்பி
தத்தித் தவழும் அவனோ தங்கக்
கம்பி கம்பி கம்பி!

தங்கை தங்கை தங்கை
தைநெல் போல மெய்யொடு வளர்ந்த
நங்கை  நங்கை நங்கை!

பாட்டு பாட்டு பாட்டு
பாரதி பாட்டின் சுவையைப் பிறர்க்கு
ஊட்டு ஊட்டு ஊட்டு!

Related Posts Plugin for WordPress, Blogger...