Tuesday, August 23, 2011

தாமரையில நூலெடுத்து

தாமரையில நூலெடுத்து
தனிப்பசுவின் நெய்யுருக்கி
வாழிலையில் மாவிளக்கு
வைத்தாரோ என்கண்ணே!

மாவிளக்குவைத்து அந்த
மகராசி கொப்பாத்தா
மலரடியக் கும்பிட்டால்
மகிமையெல்லாந் தந்திருவா!

தந்திருவா என்கண்ணே
தங்கமும் வயிரமுமாத்
தரித்தவளின் தாள்பணிஞ்சா
சிரிச்சமுகம் காட்டிருவா!
திருவெல்லாம் வந்துசேரும்!!

மாமன்வந்து பாத்திருவார்
மனம்நெறஞ்சு வாழ்த்திடுவார்!
மனம்போல என்கண்ணே
தனம்பெருக்கித் தந்திருவார்!

பாட்டிவந்து பாத்திருவா
என்கண்ணே உனக்குநகை
பூட்டியழகு பாத்திடுவா
புன்னகையில் மகிழ்ந்திடுவா!

தாத்தன்வந்தால் என்கண்ணே
தனிப்பெருமை சேர்ந்துவரும்!
பூத்தமலர் போலஉன்னைப்
பொத்தி வளத்திடுவார்

மாமிவந்து பாத்திருவா
என்கண்ணே உன்னை
மடியில்வைத்துக் கொஞ்சிடுவா!

வைகையில் பெருகிவந்த
வாழைத்தார் தன்னோடு
மதுரை மல்லிகையும்
மணக்கும் பலகாரம்
களனியில வெளஞ்சதெல்லாம்
கண்கொள்ளாச் சீர்வரிசை
களிப்போடு கொண்டுவந்து
கண்மணியே உன்னைக்
காணவந்து காத்திருக்கார்!

கண்ணேஎன் கண்மணியே
கண்ணுறங்கி முன்னெழுவாய்
பொன்னேஎன் பொன்மணியே
புதுயுகமே தாலேலோ!





















Tuesday, August 9, 2011

காரைக்குடி செக்காலைச்சிவன்கோவில் தையல்நாயகி.

அஞ்செழுத் தானவன் அருகமர் தேவியே
             அன்னைதை யல்நாயகி!
நெஞ்சிலே வைத்துனை நித்தமும் துதித்திட
                நிம்மதி தரும்நாயகி!
மஞ்சளும் குங்குமம் மனையிலே நிலைத்திட
               மகிழ்வரம் தருவாயம்மா!
தஞ்சமென வந்தவர் தடையெலாம் விலகிட
              தண்ணருள் புரிவாயம்மா!
நூபுரப் பாதங்கள் நொடியிலே காட்டியே
             நொந்தவர் மகிழவைப்பாய்!
கோபுரம் சமைத்துஉன் கோவில் சிறக்கவே
              குடும்பங்கள் கூட்டிவைத்தாய்!
மனையிலுள் லோரெலாம் மகிழ்ந்துஉன்கோவிலில்
            ‘மா’ பணி செய்யவைத்தாய்
நனைகின்ற அன்பாலே நல்லருள் செய்துநீ
            ‘மா’பலம் பெருகவைப்பாய்!
நன்றாக நன்றாக நாநிலம் போற்றவே
           நல்லுயர்[வு] எய்தவைப்பாய்!
மன்றினில் ஆடுசிவன் மகிழ்மனை யாட்டியே
                அம்மைதை யல்நாயகி!




Related Posts Plugin for WordPress, Blogger...